பூனைக்கு மணி கட்ட மாட்டாங்க..

.

கடந்த ஆண்டு எனது இந்தியப் பயணத்தின் போது ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். பஃபே சிஸ்டம்தான், எனது தட்டத்தில் தேவையான அளவு மட்டும் குறைவாக எடுத்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர் இன்னமும் எடுத்துக் கொள்ளச் சொன்னார். இல்லையென்றால் இன்னொரு முறை வரிசையில் நிற்க வேண்டும் என்றார்.


அந்த பஃபேயில் பத்து வகையான இனிப்பு பண்டங்களாவது இருந்திருக்கும். பெரும்பாலும் எல்லோரும் பத்து வகை இனிப்பையும் தங்கள் தட்டத்தில் எடுத்திருந்தார்கள். இனிப்பு தவிர ஐஸ்கிரீம் உண்டு, நீங்கள் சொன்னது போலவே தண்ணீர் பாட்டிலும் உண்டு. அதைவிடவும் அந்தக் பஃபே கூட்டத்தில் இருந்த குழப்பத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே...

-கோபிநாத் வெங்கட்ராமன்

வணக்கம் கோபிநாத்,

ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்த படோபடங்கள் உங்களுக்கு ஆச்சரியமானதாக தெரியலாம். ஆனால் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. பஃபே சிஸ்டம் என்பது ஒரு விதத்தில் திருமண வீட்டாரின் தகுதியை வெளிக்காட்டும் உத்தி என்ற எண்ணம் மாறி இப்பொழுது அந்த முறை இல்லையென்றால் திருமணத்தை மட்டமாக பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மணமகன் அல்லது மணமகளுக்கு திருமணத்தில் முழு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ- அது பற்றிய கவலை இல்லையென்றாலும் பஃபே சிஸ்டம் பற்றிய கவலை நம்மவர்களுக்கு உண்டு.

சம்மணமிட்டு அமர்ந்து உண்டால் அளவோடுதான் உள்ளே போகுமாம். அந்த முறையை ஒதுக்கிவிட்டு ‘இப்போவெல்லாம் மூட்டுவலி சகஜமாகிடுச்சுல்ல’ என்று டைனிங் டேபிளில் அமரத் தொடங்கிய பிறகுதான் அளவுக்கு மிஞ்சி உள்ளே சென்று ஆயிரத்தெட்டு நோய்கள் நமக்கு. இப்பொழுது ‘டைம் இல்லை...’ என்று டேபிளையும் ஒதுக்கிவிட்டு கையில் ஏந்திக் கொள்கிறோம்.

வரிசையில் நெருக்கிக் கொண்டு கையகல தட்டத்தில் அத்தனை ஐட்டங்களையும் அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு மேலும் கீழுமாக சிதறவிட்டபடியே கொஞ்சத்தை வயிற்றுக்குள்ளும் மிச்சத்தை குப்பைத் தொட்டிக்குள்ளும் தள்ளுவது ஒவ்வொரு தமிழனும் பழகிக் கொண்ட கலை. இத்தனை வீறாப்பாக எழுதும் என்னை யோக்கியன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். திருமணத்திற்குச் சென்றால் அச்சுபிசகாமல் இதையேதான் செய்கிறேன்.

பஃபே சிஸ்டத்தின் மீது காழ்ப்புணர்ச்சி வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமானால் waste. கைபடாமல் வீணாகப் போனால் கூட பிரச்சினை இல்லை- இல்லாதவர்களை அழைத்துக் கொடுத்துவிடலாம். ஆனால் இந்த முறையில் அத்தனை உணவையும் எச்சில் படுத்தியல்லவா கொட்டுகிறோம்? ஒட்டுமொத்தமாக வீண். 

ஒரு வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்த பஞ்ச காலத்தை இந்தத் தமிழகம் தாண்டித்தானே வந்திருக்கிறது? அந்தத் தலைமுறை ஆட்களின் மகனுக்கும் மகளுக்கும்தான் இத்தகைய திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களது மகனும் மகளும் பஞ்சகாலத்தை பார்க்கவில்லை. ஆனால் ‘உணவுச் சாபம்’ அவர்களின் பேரன் பேத்திகளின் மீது விழுந்துவிடாமல் இருக்கக் கடவது.

                                                    **********
.
நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாழ்க்கை முழுக்க சேமித்த காசை ஒரே நாளில் அழும் கொடுமை அது. நம்புவீர்களோ மாட்டீர்களோ, என் திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் 95% மக்களை நான் திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஒருமுறை கூட கண்டதில்லை.

கல்லூரி நாட்களில், உடன் படிக்கும் நண்பனின் வீட்டு கல்யாணத்தில் நான் கலந்துகொள்ளும் நாள் தொட்டே, எனக்கு இந்த உறுத்தல் உண்டு. நண்பனுக்குக் கல்யாணம்-னா போகணும், அவன் அண்ணன், அக்கா கல்யாணத்துக்கெல்லாம் நான் ஏன் போகணும்? அப்படிப்போன கல்யாணங்களில், நானும் (மணமக்களை முதலும் கடைசியுமாக அன்று மட்டுமே பார்த்த) 95% மக்களில் ஒருவனானேன்!

-ராம்

வணக்கம் ராம்,

நீங்கள் மட்டும் இல்லை- திருமணம் முடித்த இந்தத் தலைமுறையினரில் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் இதே பிரச்சினை உண்டு. எங்கள் அம்மா அப்பாவின் திருமண ஆல்பத்தில் (தோராயமாக 150 படங்கள்) ஒவ்வொரு முகத்தையும் அவர்களால் அடையாளம் சொல்ல முடிகிறது. எனது திருமண ஆல்பத்தில் (தோராயமாக 1000 படங்கள் உண்டு) எங்களால் ஐந்து சதவீத மனிதர்களைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை. 

வரவேற்பு விழாவில் வருகிறவர்களுக்கெல்லாம் வணக்கம் வைத்து நிழற்படத்திற்கு போலியாக புன்னகைக்க வேண்டியிருந்தது. கணக்குப் பார்த்தால் ஃபோட்டோ ஆல்பத்திற்கான செலவு மிகப்பெரிய செலவாக இருந்தது.  திருமண ஆல்பத்திற்கு எதற்கு இத்தனை செலவு? ஆல்பத்தை எத்தனை முறை புரட்டிப் பார்க்கிறோம்? அதிகபட்சமாக ஐந்து முறை இருக்கலாம்- மொத்த வாழ்நாளிலும் சேர்த்து. அடையாளத்திற்கு ஐம்பது படங்கள் இருந்தால் போதாது?

ஆடம்பரத் திருமணங்கள் என்பது கிட்டத்தட்ட அத்தனை இனத்திற்கும், மதத்திற்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களின் சாபக்கேடாக திருமணச் செலவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இத்தகைய திருமணங்கள் சமூக அடையாளம் இல்லை- சமூகச் சீரழிவு. ஆனால் இப்போதைக்கு இந்த பூனைக்கு யாருமே மணி கட்டப்போவதில்லை.

Nantri nisaptham

No comments: