பொங்கலோ பொங்கல் !
















 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் …. அவுஸ்திரேலியா



 


தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம் 
தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம் 

நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே 
நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம் 
உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே 
உயர்வான எங்களது பொங்கல் விழாவே 

வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே 
தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில் 
தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே 

வீட்டிலுள்ள அனைவரு மதிகாலை எழும்பியே 
விரைவாக நீராடி புத்தாடை அணிந்துமே
பொங்கல் பொங்க புறப்படுவோம் பூரிப்பாகவே 
மங்கலமாய் பெற்றவர்கள் மகிழ்ந்து நிற்பார்கள் 

பொங்கற்பானை அடுப்பினிலே ஏற்றி வைத்ததும்
அக்கினையை மூட்டிவிடப் பாட்டி வந்திடுவா 
அரிசி பருப்பு சர்க்கரை அனைத்தையையுமே
அம்மாயங்கே ஒழுங்காய்க் கொண்டு வந்திடுவா 

பானையிலே பாலையூற்ற தாத்தா வந்திடுவார்
பாட்டியோடு அம்மாவோடு நாமும் ஊற்றுவோம் 
பொங்கிவரும் வேளைக்காக காத்து நின்றுமே
அரிசியுள்ளே போடுதற்கு ஆவல் கொள்ளுவோம் 

பொங்கிவரும் பாலைப்பார்க்க பூரிப் பெய்துவோம்
அரிசியினை கையெடுத்து அனைவரும் போடுவோம் 
பொங்கிலினை பெருவிருப்பாய் மனதில் எண்ணியே 
பொங்கலோ பொங்கலென்று சொல்லி மகிழுவோம் 

அரிசிவெந்த பின்னரம்மா சர்க்கரை போடுவார் 
அக்கம்பக்கம் பொங்கல்மணம் காற்றில் கலந்திடும் 
பானைநிறைய பொங்கலெம்மை பார்த்துச் சிரித்திடும்
அம்மாவுடனே  பொங்கலினை இறக்கி வைத்திடுவார் 

கோலமிடை வாழையிலை அம்மா வைத்துமே 
பொங்கலினை பக்குவமாய் படைத்து மகிழுவார்
அந்தவேளை ஆதித்யன் ஆசி வழங்குவான்
அனைவருமே அவனை வணங்கி ஆசிவேண்டுவோம் 

தம்பிதங்கை பட்டாசை வெடித்து மகிழுவார்
தாத்தாபாட்டி  தூரநின்று கேட்டு மகிழுவார் 
அப்பாவம்மா அனைத்தையுமே பார்த்து மகிழுவார்
ஆனந்தமாய் பொங்கலங்கே பொங்கி ஒளிருமே 

தாத்தாபாட்டி கால்களிலே விழுந்து வணங்குவோம்
ஆசிகூறி காசுதந்து வாழ்த்தி மகிழுவார் 
அப்பாவம்மா ஆசிதந்து அணைத்து நிற்கையில்
ஆனந்தமே எங்களுக்குள் பெருகி நின்றிடும் 

பொங்கலன்று அனைவருமே கோவில் செல்குவோம்
எல்லோர்வாழ்வும் சிறப்புறவே இறையை வேண்டுவோம் 
ஆலயத்தில் பக்குவாய் அனைத்தும் நடந்திடும்
ஆண்டவனின் நினைப்புடனே வீடு திரும்புவோம் 

பொங்கலினை மற்றவர்க்கும் கொடுத்து மகிழுவோம்
தருகின்ற பொங்கலினை ஏற்றும் மகிழுவோம் 
உறவுகளைப் பார்ப்பதற்கு உவப்பாய்ச் செல்குவோம்
உடனிருந்து பொங்கலினை உண்டு மகிழுவோம் 

பொங்கலெனும் வார்த்தையது பொருள் பொதிந்தது
மங்கலத்தை மாநிலத்தில் பதித்து நிற்பது 
எங்கணுமே இன்பமதைப் பெருக்கி நிற்பது 
இனிப்போடு உறவுகளை இணைக்கச் செய்வது 

No comments: