உலகச் செய்திகள்


குமுறுகிறது எரிமலை - மீண்டும் சுனாமி ஆபத்து

இந்தோனேசியா சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை  373 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் ; 45 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

 புதிதாக பதவி ஏற்ற மெக்சிகோ பெண் ஆளுனர் ஹெலிகொப்டர் விபத்தில் பலி

ஈராக்கிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு படையினரை சந்தித்தார் டிரம்ப்

ஹைப்பர் சொனிக் ஏவுகணை சோதனையில் வெற்றி



குமுறுகிறது எரிமலை - மீண்டும் சுனாமி ஆபத்து

24/12/2018 இந்தோனேசியாவின் அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சனிக்கிழமை சுனாமிதாக்கியதன் காரணமாக 281 பலியாகியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் மீண்டுமொரு சுனாமி தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிமலை வெடித்தன் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வுகளே பாரிய சுனாமிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எரிமலை  மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி ஆபத்து குறித்து பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பு தொடர்வதால் மற்றொரு சுனாமிக்கான வாய்ப்புகள் உள்ளன என இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக மக்கள் கடற்கரையோரங்களில் நடமாடக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்    நன்றி வீரகேசரி 











இந்தோனேசியா சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை  373 ஆக உயர்வு

25/12/2018 கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவைத் தாக்கிய சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் தொகை 373 ஆகவும், காயமடைந்தவர்களின் தொகை 1459 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
அனக் கிரகட்டாவ் எரிமலைக் குமுறலையடுத்து கடலுக்குள் ஏற்பட்ட மண்சரிவுகளால் மேற்படி சுனாமிப் பேரலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் கிரகட்டாவ் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதால் பிறிதொரு சுனாமிப் பேரலை அனர்த்தம் ஏற்படுதவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய அனர்த்த முகவர் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த சுனாமித் தாக்கம் காரணமாக இதுவரை 373 பேர் உயிரிழந்ததுடன், 1459 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 128 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும் மீட்புப் படையினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் ; 45 பேர் பலி

25/12/2018 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திங்கட்கிழமை தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரச அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் உட்பட்ட தாக்குதல்களிலேயே இந்த உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் வன இலாகா திணைக்களத்தின் மீது கார்க்குண்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னரே தீவிரவாதிகள் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
இதன் பின்னர் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் அலுவலக ஊழியர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனா
இதன் போது கடும் துப்பாக்கி  சமரும் இடம்பெற்றுள்ளது.  நன்றி வீரகேசரி 









சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

26/12/2018 சிரியாவின் டமாஸ்காஸ் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இத் தாக்குதல் காரணமாக டமாஸ்காஸ் பகுதியிலுள்ள இராணுவக் கிடங்கொன்று தாக்குதலுக்கிலக்கானதில் மூன்று இராணுவத்தினர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 
எனினும் இத் தாக்குதல்  குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
மேலும் விமானங்களை வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சிரியாவில் இருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









 புதிதாக பதவி ஏற்ற மெக்சிகோ பெண் ஆளுனர் ஹெலிகொப்டர் விபத்தில் பலி

26/12/2018 மெக்சிகோ நாட்டில் மக்கள் தொகை அதிகம் மிகுந்த மிகப்பெரிய மாகாணம் மத்திய பியூப்லா. இங்கு கடந்த ஜூலை மாதம் ஆளுனர் தேர்தல் நடந்தது அதில் வெற்றி பெற்ற அலோன்சா  ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளர்.
இவ்வாறு ஆளுனர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த மாகாணத்தின் முதல் பெண் ஆளுனராக  புகழை அவர் பெற்றார்.
ஆனால் மார்த்த எரிக்கா அலோன்சாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடாரின் மோர்னே கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதன் பின்னர் தேர்தல் தீர்ப்பாயம் இதில் தலையிட்டு விசாரணை நடத்தி, மார்த்த எரிக்கா அலோன்சாவின் வெற்றியை உறுதி செய்தது.
இந்த நிலையில், தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகு, பியூப்லா மாகாணத்தின் கவர்னராக மார்த்த எரிக்கா அலோன்சா கடந்த 14 ஆம் திகதி பதவி ஏற்றார்.
மார்த்த எரிக்கா அலோன்சாவின் கணவர் ரபேல் மோரேனோ வல்லே. மெக்சிகோ பாராளுமன்ற அமைச்சரான இவர் 2011-2017 வரை பியூப்லா மாகாண ஆளுனராக  இருந்துள்ளார்.
இந்த நிலையில், மார்த்த எரிக்கா அலோன்சா தனது கணவருடன் நேற்று முன்தினம் தலைநகர் பியூப்லாவில் இருந்து ஹெலிகொப்டரில் புறப்பட்டு சென்றார்.
ஹெலிகொப்டரில் 2 விமானிகளும், மேலும் ஒரு பயணியும் இருந்துள்ளனர்.
வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென அங்குள்ள ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. 
இவ்வாறு கீழே விழுந்த ஹெலிகொப்டரில் தீப்பிடித்தது முழுவதுமாக எரிந்ததுள்ளது.
இந்த கோர சம்பவத்தில் மார்த்த எரிக்கா அலோன்சா, அவருடைய கணவர் ரபேல் மோரேனோ வல்லே உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மெக்சிகோவில் முக்கிய பிரபலங்கள் செல்லும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பிளேக் மோரா உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









ஈராக்கிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு படையினரை சந்தித்தார் டிரம்ப்

27/12/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் ஈராக்கிற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள அமெரிக்க துருப்பினரை சந்தித்துள்ளார்.
டிரம்ப் தனது மனைவி மெலெனியாவுடன் ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அல்அசாத் விமான தளத்திற்கு சென்று அங்குள்ள அமெரிக்க படையினரை சந்தித்துள்ளார்
சிரியாவிலுள்ள  அமெரிக்க படையினரை விலக்கிக்கொள்ளும் டிரம்பின் அறிவிப்பினால் கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையிலேயே அவரின் விஜயம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க துருப்பினர் மத்தியில் சிரியாவிலிருந்து படைகளை விலக்கும் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ள டிரம்ப் ஐஎஸ் அமைப்பை தோற்கடித்ததன் காரணமாகவே இது சாத்தியமானதாக தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க படையினரை நிரந்தரமாக வைத்திருக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் மோதல் இடம்பெறும் பகுதிகளில் நிலைகொண்டுள்ள  அமெரிக்க துருப்பினரை  சென்று பார்க்காதது குறித்து கடும் விமர்சனங்களை டிரம்ப் சந்தித்திருந்த நிலையிலேயே ஈராக்கிற்கான அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.
டிரம்புடன் அவரது சகாக்கள் சிலரும் அமெரிக்க புலனாய்வு துறையை சேர்ந்தவர்களும் செய்தியாளர்கள் குழுவினரும் ஈராக் சென்றுள்ளனர்.
தனது மனைவியின் பாதுகாப்பே தனது முக்கிய கவலைiயாக காணப்பட்டது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 












ஹைப்பர் சொனிக் ஏவுகணை சோதனையில் வெற்றி

27/12/2018 அதி நவீன ஹைப்பர் சொனிக் ஏவுகணையின் இறுதிக் கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ள ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உலகிலேயே இந்த புதுவித தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஷ்யா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஏவுகணை குறித்து மேலும் தெரிவித்த புட்டின், 
உலகிலேயே இந்த புதுவித தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஷ்யா என்பதால் பாதுகாப்புப் படைகளுக்கும், நாட்டுக்கும் இது மிக முக்கிய நிகழ்வு.
இந்த புதுமையான அமைப்பு அணு ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது என்றும், இது அடுத்த ஆண்டு ராணுவ சேவையில் இணையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் ஒலி வேகத்தைப் போல 10 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எதிர்கொண்டு அழிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றும் வகையில், அதிவிரைவாக திசையை மாற்றி மாற்றிப் பறக்கும் திறன் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 






No comments: