நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 2) - மருதன்




Nelson Madela-10இனவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்துக்கு க்யூபா அளித்த ஆதரவும் பங்களிப்பும் முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று மண்டேலாவைப் போலவே காஸ்ட்ரோவும் விரும்பினார்.

அசலான கம்யூனிச தேசங்களாக சோவியத் யூனியன், சீனா இரண்டும் திகழ்ந்தபோது, அவை தம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட பிற நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளித்துவந்தன. இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சோவியத்திடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் உதவியும் உத்வேகமும் பெற்றனர். ஸ்டாலின், மாவோ இருவரும் தொலை தேசங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் போராட்டங்களில், ஒடுக்கப்படுபவர்கள் யார், ஒடுக்குபவர்கள் யார் என்பது பற்றிய மதிப்பீட்டை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களது வெளியுறவுக் கொள்கை அவ்வாறே வடிவம் பெற்றது.

ஃபிடல் காஸ்ட்ரோவின் பார்வையும் அவ்வாறே அமைந்திருந்தது. என்ன வளம் கிடைக்கும், எப்போது சுரண்டலாம் என்று கழுகுப் பார்வையுடன் பல நாடுகள் ஆப்பிரிக்காவைக் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, க்யூபா அத்தேசத்தை அக்கறையுடனும் மனிதாபிமானத்துடனும் அணுகியது. தெற்கு, மேற்று மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்குத்  தன் படைகளைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார் காஸ்ட்ரோ. 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளுக்குச் (அங்கோலா, நமீபியா, மொசாம்பிக், கினி பிசாவு, கேப் வெர்டே, சாவோ தோமே, பிரின்ஸிபி) சென்று க்யூபப் படைகள் போரிட்டன. கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் க்யூப ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் ஆப்பிரிக்காவின் போராட்டத்தில் பங்கேற்றனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்காவின் மெய்யான நண்பனாக ஃபிடல் காஸ்ட்ரோவைக் கண்டார் மண்டேலா. பல சந்தர்ப்பங்களில், காஸ்ட்ரோவை நன்றியுடன் அவர் நினைவுகூர்ந்தார். லத்தீன் அமெரிக்கா காஸ்ட்ரோவின் பின்னால் அணிதிரண்டுவருவதைக் கண்டு ஏற்கெனவே எரிச்சலைடைந்திருந்த மேற்குலக நாடுகள், மண்டேலாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. காஸ்ட்ரோவுடனான உறவுகளை மண்டேலா முறித்துக்கொள்ளவேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுக்கொண்டன. மண்டேலா பதவி ஏற்றபிறகு, பலமுறை இந்த கோரிக்கை மண்டேலாவிடம் எடுத்துச்செல்லப்பட்டது.

மண்டேலா இந்தக் கோரிக்கையை நிராகரித்தார். ஃபிடல் காஸ்ட்ரோ என் ஆருயிர் நண்பன், அவருடனான உறவு தொடரும் என்று அறிவித்தார். ‘வெள்ளை நிறவெறி ஆட்சி செய்த தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் உரிமைகள் இழந்து ஒடுங்கிப்போயிருந்தோம். அப்போது நீங்கள்தான் எங்கள் அரசுக்கு ஆதரவு வழங்கினீர்கள். க்யூபாதான் எங்கள் பக்கம் நின்றது. எங்களுக்கு உதவி செய்ய, போராளிகளையும் வைத்தியர்களையும் ஆசிரியர்களையும் க்யூபா அனுப்பிவைத்தது. எமக்காக ரத்தம் சிந்தியதற்காக, ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள், க்யூபாவுக்குத் தலை வணங்குகிறோம். இந்த சுயநலமற்ற சர்வதேசியத்தை நாங்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம்.’

ஆப்பிரிக்காவில் இயங்கிக்கொண்டிருந்த பல போராளி அமைப்புகள் தொடக்கக்கால ஏ.எம்.சியைப் போலவே மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தன. அந்த அமைப்புகளுக்கு சோவியத் நிதியுதவி அளித்தது. க்யூபா ஆயுத உதவிகள் செய்தது. குறிப்பாக, நமீபியாவின் சுதந்தரத்துக்கு க்யூபாவின் பங்களிப்பு கணிசமானது. அதே போல், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததிலும் க்யூபாவின் பங்கு முக்கியமானது.

0

மண்டேலாவின் நிர்வாக முறை, ஆட்சிமுறை, செயல்திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள் விமரிசிக்கப்பட்டன. ஆனால், எதுவொன்றும் அவரது பிம்பத்தை மாற்றியமைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் மண்டேலா உலகின் விருப்பத்துக்குரிய தலைவராகவே வளர்ந்து வந்தார். வண்ண ஆப்பிரிக்கச் சட்டைகள் அணிந்து அவர் வலம் வந்தபோது, தனது எண்பதாவது வயதில் ஒய்யாரமாக ஆப்பிரிக்க நடனம் ஆடியபோது, திரண்டு வந்த கூட்டத்தைப் பார்த்து கையசைத்தபோது, உலகம் மண்டேலாவை நேசித்தது. கருணையுள்ள முதியவராக, தேசத்தின் தந்தையாக அவர் பார்க்கப்பட்டார். பார்க்கப்படுகிறார்.

1997ம் ஆண்டு ஏ.என்.சி.யின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கட்சியின் தலைமை பொறுப்பை தபோ ம்பெகியிடம் ஒப்படைத்தார் மண்டேலா. அவரைத் தன்னுடனே வைத்திருந்து தகுந்த அரசியல் பயிற்சிகளை அளித்திருந்தார் மண்டேலா. பதவி மீது அவருக்கு இருந்த விருப்பமின்மையையும் அடுத்த தலைமுறையை வளர்த்துவிடுவதில் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் இது வெளிப்படுத்துகிறது. மண்டேலாவுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராக மாறினார் தபோ ம்பெகி.

தனது எண்பத்தோரு வயது மண்டேலா பதவியில் இருந்து விலகியபோது ஓய்வு பெறுவது அவரது நோக்கமாக இருக்கவில்லை.

நெல்சன் மண்டேலாவின் உருவப்படங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. கேப் டவுனிலிருந்து ஜொகனஸ்பெர்க் வரை. கடைத்தெரு முதல் பள்ளிக்கூடம் வரை. சைக்கிளின் முன்னால். காரின் பின் கண்ணாடியில். தபால் பெட்டியின் மீது. பேருந்தின் மீது. வீட்டுச் சுவர்களில். தவிர்க்க முடியாத சக்தியாக, ஒரு முக்கிய அடையாளமாக மண்டேலா மாறியிருக்கிறார். ‘மடிபாவை எங்களுக்குப் பிடிக்கும். அவரை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறோம்.’

தென் ஆப்பிரிக்கா நிறையவே மாறியிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டல்கள் திறந்திருக்கிறார்கள். செய்தித்தாள்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருபது சதவீத ஆப்பிரிக்கர்கள் தங்களை நடுத்தர வர்க்கம் என்று அழைத்துக்கொள்கிறார்கள். பெருமையாக. மற்றொரு பக்கம், மண் தரைகளும் ஒழுகும் மேற்கூரைகளும் அப்படி அப்படியே நீடிக்கின்றன. பல ஆப்பிரிக்கர்கள் ஜாகுவார் கார்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிக்னலில் வண்டியை நிறுத்தும்போது, பிச்சை கேட்டு கறுப்பு கைகள் நீள்கின்றன. சைரன் ஒலிகளுக்கு இடையே, தேய்ந்த குரலில், அம்மா தாயே!

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது தென் ஆப்பிரிக்காவில்தான். 45 மில்லியன் மக்களில் 5 மில்லியன் பேர். ஏழைமையும் மிக அதிகம். உலகளில், ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் நிறைந்த நாடு, தென் ஆப்பிரிக்கா. 1994 கணக்குப்படி, தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களின் per capita income ஆப்பிரிக்களைக் காட்டிலும் 9.5 மடங்கு அதிகம். எனவே, வன்முறையும் வழிப்பறிக்கொள்ளையும் அதிகம். 1994-95ல் 84,785 திருட்டு, வழிப்பறிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. 2002-03ல் இந்த எண்ணிக்கை 1,26,905 ஆக உயர்ந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். பதிவாகாத குற்ற விவரங்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம்.

இனஒதுக்கலை அதிகாரபூர்வமாகக் களைந்த பின்னர், தென் ஆப்பிரிக்கா சந்தித்த முக்கியப் பிரச்னைகளுள் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். அதன் காரணமாக தோன்றிய அந்நியர்கள் மீதான வெறுப்புணர்வு. தென் ஆப்பிரிக்கர்கள் அல்லாதவர்கள் காழ்ப்புணர்வுடன் நடத்தப்படுவதாக தொடர்ந்து  பல ஆண்டுகள் புகார்கள் வெளிவந்தன. பிழைப்பதற்காக பக்கத்து ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து வந்தவர்கள், தென் ஆப்பிரிக்கர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். பல சமயங்களில், அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். தங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை அந்நியர்களாகிய அவர்கள் பறித்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்கர்களோ, குற்றம் கூறினர். இதையடுத்து ஜொகன்னஸ்பர்கில் 2008ல் கலவரங்கள் வெடித்தன. இந்தக் கலவரங்களில் சோமாலியா, ஸ்வாஸிலாண்ட், நைஜீரியா நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக அடித்து விரட்டப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். அறுபது பேர் இறந்துபோனார்கள்.

மோதல்களை நிறுத்தச் சொல்லி மண்டேலா, டெஸ்மண்ட் டுட்டூ ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அந்நியர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு என்ன காரணம்? வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, ஊழல். அதன் காரணமாக எழுந்த அச்சம், பாதுகாப்பற்ற நிலை, கோபம். இதன் அடிநாதம், மண்டேலா அரசு அறிமுகப்படுத்திய நியோ லிபரல் பொருளாதாம்ரக் கொள்கை.

மண்டேலா பதவியேற்றபோது, அவர் அணுகுமுறை எப்படி இருக்குமோ என்னும் சந்தேகம் தென் ஆப்பிரிக்க, சர்வதேச முதலாளிகளுக்கு இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர், அவர்கள் துணையுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், கம்யூனிச சித்தாந்ததை உயர்த்திப் பிடித்தவர், ஒடுக்குமுறைக்கு ஆளாக சிறைவாசி. போராட்டக் குணம் கொண்டவர் வேறு. மண்டேலா அவர்களுடைய அச்சத்தைப் போக்கினார். கம்யூனிச சித்தாந்தத்தை நான் அறிவேன். ஆனால், நான் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. நான் அமைக்கப்போவது கம்யூனிச அரசு கிடையாது.

தென் ஆப்பிரிக்கா குறித்த சர்வதேச பார்வையும் மாற்றம் பெற்றது. மண்டேலா சிறையில் இருந்த சமயத்தில், பிரிட்டனின் பிரதம மந்திரி மார்கரெட தாட்ச்சர் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தார். ஏ.என்.சி. ஆட்சியை அமைக்கும் என்று கனவுகூட காணவேண்டாம் என்று 1987வரை அவர் அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று தடை செய்திருந்தது. பதவியேற்று, ஓய்வு பெற்ற பிறகும், மண்டேலா தீவிரவாதிகள் பட்டியலில்தான் இருந்தார். மிகச் சமீபத்தில்தான், ஜார்ஜ் புஷ் அரசு இந்தத் தடைகளை அகற்றியது. அமெரிக்க ரீகன் அரசாங்கம் நிறவொதுக்கல் தென் ஆப்பிரிக்காவுக்கு தன் முழு ஆதரவையும் அளித்தது. பின்னர், மண்டேலா சிறையில் இருந்து வெளிவந்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர், ஜார்ஜ் புஷ் சீனியர்.

மண்டேலா என்னும் தனிப்பட்ட ஆளுமை மீது அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டிருந்த மதிப்பு ஒரு காரணம். மறுப்பதற்கில்லை. அதே சமயம், மண்டேலாவின் பொருளதாரக் கொள்கைகளே இந்த இரு பெரும் நாடுகளை தென் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ய பெருமளவில் தூண்டின என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இனஒதுக்கலை ஆதரித்த இந்த இரு நாடுகளோடும் மண்டேலா சுமூகமான உறவே கொண்டிருந்தார். எனவேதான் காலனியாதிக்க எதிர்ப்பை ஊக்குவித்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பை அவரால் மேற்கொள்ளமுடியவில்லை. மேற்கத்திய உலகோடு அனுசரித்துப் போகவேண்டும் என்றே விரும்பினார்.

கோவன் ம்பெகி ஒரு மார்க்சிஸ்ட். ஆனால் அவர் மகன் தபோ ம்பெகி முதலாளித்துவத்தை ஆதரித்தார். தேசியமயமாக்கத்தை எதிர்த்தார். தென் ஆப்பிரிக்க கதவுகளை சர்வதேச முதலீட்டுக்காக அகலமாகத் திறந்துவிட்டவர். நியோ லிபரல் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி மண்டேலாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இதன் விளைவை தென் ஆப்பிரிக்கா இன்றும் அனுபவித்து வருகிறது. புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு புதிய கறுப்பின மேட்டுக்குடி வர்க்கம் உருவாக ஆரம்பித்தது. பொருளாதார அடித்தளம் மாறவில்லை என்பதால் ஆப்பிரிக்கானர்களும் தடங்கலின்றி மென்மேலும் வளர்ச்சியுற்றனர். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி பெருகிநின்றது. இந்தப் புதிய மேட்டுக்குடி ஆப்பிரிக்கர்களுக்கு குறைந்த கூலியில் பணியாற்ற பக்கத்து நாடுகளில் இருந்து ஏழை கறுப்பின மக்கள் தென் ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்தனர். ஏற்கெனவே தேக்கத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அந்நிய கறுப்பின  மக்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதை தென் ஆப்பிரிக்காவின் புதிய இனவெறுப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் (Xenophobia) எழுதின. இது பிரச்னையை திசைதிருப்பும் செயலே அன்றி வேறில்லை. இனத்துக்கு, நிறத்துக்கு அப்பாற்பட்ட பிரச்னை இது. இது பொருளாதாரப் பிரச்னை.
(தொடரும்)
நன்றி தேனீ

No comments: