பேராசிரியர் துரைராஜா; அவரின் 78 ஆவது பிறந்ததினம் 10.11.2011


Posted Image

யாழ்ப்பாண சமூகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்து யாழ்ப்பாணத்துச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா.

இளமையில் உடுப் பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக் கழகத்துக்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியியல் விஞ்ஞான பட்டம் பெற்றுபின் பிரிட்டனில் கலாநிதிப் பட்டம் பெற்றுப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராய், பேராசிரியராய், பீடாதிபதியாய் சேவையாற்றி யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராய் பணியாற்றிய எமது பேராசிரியரை நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.

தமிழர் கலாசாரத்தில் ஒன்றிப் போதல் கலாசார வாழ்வை தனது பெருமையாகக் கொள்ளல், அடுத்துவரும் சந்ததிக்கு தமிழர் வாழ்வியலின் பெருமைகளை கையளித்தல் போன்றவை அவர் வாழ்வின் இயல்புகளாகும்.
பேராசிரியர் துரைராஜா யாழ்ப்பாண சமூகத்தை வலுவூட்டுவதற்காக அயராது உழைத்த வர். தனது பொறியியல் கல்வியை தனது மாணவர்களுக்கு விருப்புடன் கற்பித்தவர். தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் அவரை நல்ல குருவாக நல்லாசானாக மதித்து வந்தனர்.


பேராசிரியரின் மாணவன் என்று சொல்வதால் தங்களைத் தாங்களே தரமுயர்த்திக் கொண்டவர்கள் பலர். அவர் மாணவர்களின் பெருமைக்குரியவர் என்பதுடன் நில்லாது மாணவர்களுக்கு பெருமை சேர்ந்தவர். எல்லோரையும் அறிவுடையவர்களாகவும் வினைத்திறனுடையவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் செயற் பட்டவர்.
அவரின் கல்வி சார் வரலாற்றை அவரது மாணவர்களே உலகெங்கும் பரப்பி நிக்கின்றனர் என்றால் அவரின் பெருமையைப் பறைசாற்ற வேறு யார் வேண்டும்.

தழிழர் தம் வாழ்விடங்களில் அபிவிருத்திக்காகத் திட்டமிட்டு செயற்பட்டவர். உதாரணமாக பொருளாதார தடையில் அமிழ்ந்து போன யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும் தொழில் நுட்பவியலாளர்களையும் தொழிலாளர்களையும் நிர்வாகிகளையும் சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டவர்.
யாழ்ப்பாண மக்கள் பொருளாதாரம் காரணமாக இழந்த வசதிகளை மீண்டும் பெற அயராது உழைத்த போது இடர்கால யாழ்ப்பாணத்தவரின் பொருளாதார வாழ்வியலை தனது வாழ்வியலாக மாற்றிக் கொண்டவர். அதனை அக்கால வாழ்வில் வடமராட்சியில் இருந்து சாதாரண மனிதர்கள் சைக்கிளில் வந்தபோது தானும் சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து துணைவேந்தராகப் பணியாற்றியவர்.

தமிழர் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர். வடக்குக் கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாகவும் மீன்பிடியாளர்களாகவும் இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார்.
மீன்பிடிக் கற்கைக்கான திட்டங்களைத் தீட்டினார். விவசாய விளைநிலங்களுக்கிடையில் விவசாயபீடம் இருப்பதுபோல எதிர்கால அபிவிருத்திக்கு வன்னிப் பெருநிலப்பரப் பேமையமானது. பாதுகாப்பானது என்று கருதி பொறியியல் பீடம் ஒன்றை வன்னியில் நிறுவத்திட்டமிட்டு செயற்பட்டார். இவரின் இம் முயற்சிகள் இடம், காலம், தேவை யறிந்து செயற்பட்டவர் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒடுக்கப்பட்டவர்களிடத்தும் ஏழைகளிடத்தும் மாணவர்கள், ஆசிரியர், ஊழியர்கள் ஆகியோரிடத்தும் அன்பும் ஆதரவும் பரிவும் கருணையும் இருந்ததால் அவர் என்றும் எம் மனதை விட்டகலா மேதையாகவே உள்ளார்

பேராசிரியர் ப.சிவநாதன்
தலைவர், பொருளியல் துறை.
Nantri:Yarl.com

No comments: