பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - ---யசோதா

 










தமிழ்வளர்த்த சான்றோர் விழா 2025 சிட்னி முருகன் கலாசார மண்டபத்திலே மே மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அரங்கு நிறைந்த தமிழ் ஆர்வலர்களுடன் ஆரம்பமானது. இந்த வருடம் செந்தமிழுக்கும் சிவநெறிச் சைவசமயத்துக்கும் அளப்பரிய தொண்டாற்றி தமிழ் நாட்டிலும் ஈழவள நாட்டிலும் அறிஞர்களாலே பெரிதும் போற்றப்பெற்ற தமிழ்ச் சான்றோராக விளங்கிய சிவத்திரு நவநீத கிருஸ்ணபாரதியார் அவர்களுக்கு விழா எடுக்கப் பெற்றது. விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக முன்னாள்தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் தலைவரக அரும்பெருஞ் சேவைகளைத் திறம்படச் செயலாற்றிய சிவத்திரு திருமதி சரோயாதேவி சுந்தரலிங்கம் அவர்களை அவையினருக்கு விழா அமைப்பாளர் பாரதி இளமுருகனார் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.    


செஞ்சொற் செல்வர் கலாநிதி சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்களும்

சைவமன்றத் தலைவர் சிவத்திரு ஜெகநாதன் அவர்களும் சிவத்திரு திருமதி கலையரசி சின்னையா அவர்களும் மங்கல விளக்கினை ஏற்றி விழாவினை ஆரம்பித்துவைத்தார்கள்  









மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது கலாவித்தகர் பல்வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்கள் இல்லக விளக்கது இருள் கெடுப்பது .. என்று தொடங்கும் தேவாரத்தைப் பண்ணுடன் இசைத்தார். இதைத் தொடர்ந்து விழா அமைப்பாளர் பாரதி இளமுருகனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்தையும் இசையுடன் அழகாக இசைத்தார். விழாவிலே பாடப்பெற்ற தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க தமிழ்மொழி வாழிய தாய்மொழி

வளர்ந்திடும் செம்மொழி வாழியவே

                              (வாழ்க)

ஏழிரு புவனமும் இன்றமிழ் ஒலித்திட

என்றுமே தேசுடன் வாழியவே

ஊழி முதல்வனின் தாளிணை அருளிட

ஓண்டமிழ் ஓங்கியே வாழியவே

 

                             (வாழ்க)

ங்கம் வளர்த்தநற் சுந்தரத் தமிழ்மொழி

ரித்திரப் பொலிவொடு வாழியவே

எங்கும் தமிழ்ஒலி எதிலும் தமிழ் மணம்

இலங்கிடத் தரணியில் வாழியவே!

                               (வாழ்க)

 




- ஆதிசக்தி திருவரங்கன்

அவுஸ்திரேலிய தேசீய கீதத்தைச் செல்வி ஆதிசக்தி திருவரங்கன் பாடினார்.






அடுத்த நிகழ்ச்சியாக வரவேற்புரையை செல்வன் அமிர்தன் திருவரங்கன் மிகவும் அருமையாக வழங்கினார்.தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் அருளிய நாமகள் புகழ்மாலையிலிருந்து 

செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென் பொதிய சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந ; தனிக்குயிலை

சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவிப்புலத்தே வந்து கனியும் பனுவற்பிராட்டி’ என்ற பாடலுடன்   எமது தாய்மொழியாம் தமிழன்னையை மனதில்நினைந்து துதித்துபின் தனது வரவேற்புரையைத் தொடர்ந்தார்.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்றது. தொன்மைத் தமிழுக்கும் துலங்கிவளர் சைவத்திற்கும் அளப்பரிய பங்களிப்புச் செய்த செந்தண்மைச் சான்றோர்களான ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ நல்லைநகர் ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களுக்கும்; ஈழத்தின் புலவர் பரம்பரையை நிலைநிறுத்திப் பதினைந்தாயிரத்திற்கும் மேலான பாடல்களை இயற்றிச் செந்தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் தமிழர் மண்டபத்தில 2013 ஆண்டு   முதன்முதலிலே தமிழ்ச் சான்றோர் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத் தெடர்ந்து எல்லாமாகப் பதின்நான்கு சான்றோர்களுக்கு விழா எடுக்கப்பெற்றது.. இன்று தமிழ் நாட்டிலேயும் ஈழவள நாட்டிலேயும் புகழொடு பலரும்; போற்ற வாழ்ந்து தனது வாழ்நாள் முழுவதையும் உயர் சைவத்திற்கும் ஓங்குபுகழ் தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய சான்றாண்மை விஞ்சிய தவப் பெரியோன் சிவத்திரு நவநீத கிருஷணபாரதியார் அவர்களை நினைவுகூரும் வண்ணம் எடுக்கப்பெறும் இந்த இனிய விழாவிலே கலந்து சிறப்புச் செய்ய வருகை தந்தோரை அன்புபாராட்டி வரவேற்கிறேன். இன்று தமிழையும் சைவத்தையும் தனது இருகண்களாகப் போற்றி வாழ்ந்த

சான்றோன் இணுவை ஊர் தந்த இயலிசை வாரிதி பிரம்மசிறீ வீரமணி ஐயர் அவர்களைப் பற்றிச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்கும்

தமிழ் வளர்த்த சான்றோர் விழாக்களின் அமைப்பாளராக செயலாற்றிவரும் எனது தாத்தாவாகிய சிவஞானச்சுடர் ; பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்;கள் இயற்றிய செந்தமிழ் பூக்கள் என்னும் 80 சிறுவர்களுக்கான பாடல்களைக் கொண்ட இரு தொகுப்பு நூல்களை வெளியிட்டுவைத்துச் சிறப்புச் செய்வதற்கும் ஈழநாட்டிலிருந்து வருகை தந்த செஞ்சொற் செல்வர் சிவத்திரு ஆறு திருமுருகன் ஐயா அவர்களையும்

இன்றைய விழா நாயகன் நவநீதகிருஸ்ணபாரதியார் அவர்களைப் பற்றிச் சிறப்புரை வழங்க வருகை தந்திருக்கும் முன்நாள் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளரான செந்தமிழரசி திருமதி கலையரசி சின்னையா அவர்களையும் அன்புபாராட்டி வரவேற்கின்றேன்

சிறப்பு விருந்தினர்களாக நெடுந் தூரத்திலிருந்து வருகைதந்திருக்கும் கலாநிதி சிவத்திரு சோமலிங்கம் கமலாகரன் அவர்களையும் சிவத்திரு திருவள்ளல் திருமதி திருவள்ளல் அவர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். மங்கல விளக்கேற்றி விழாவைச் சிறப்பித்த சைவமன்றத் தலைவர் சிவத்திரு அவர்களையும் வரவேற்கின்றேன்.

இன்று பாரதி இளமுருகனார் அவர்கள் இயற்றிய

தமிழ்த்தாய் வாழ்த்தையும் மங்கவிளக்கேற்றும் வேளை ; இல்லக விளக்கது என்;ற தேவாரப் பாடலையும் இசைத்த கலாவித்தகர் பல்வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

ஆசி உரை வழங்க வந்திருக்கும் சிவத்திரு பாலம் இலட்சுமணன் அவர்களையும்அன்புடன் வரவேற்கிறேன்

சிற்றுரை ஆற்ற வருகைதந்திருக்கும் சிவத்திரு நரேந்திரநாதன் அவர்களையும் செல்வி சுடர்க்கொடி முத்தரசு அவர்களையும் அன்புடன் வரவேற்றிறேன்.

இந்த விழாவினைச் சிறப்பிக்கும்வண்ணம் அரங்கை நிறைத்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் இருகைகூப்பி வரவேற்கின்றேன்.

சைவமன்றத்தின் இயக்குனர்களான சிவத்திரு செந்தில்குமரன் சிவத்திரு கணநாதன்; சிவத்திரு கேதீசன் ஆகியோரையும் பலவிதத்திலும் உதவிய சிவத்திரு பூபாலசிங்கம் அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன். செந்தமிழ்ப் பூக்கள் நூலை அச்சிட்டுத் தந்த ஞானம் ஆட்ஸ் உரிமையாளர் சிவத்திரு ரங்கன் மற்றும் தமிழ் ஆர்வலர் சிவத்திரு சதீஸ் அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.இறுதியாக விழாச் சிறக்கச் சகல விதத்திலும் உதவிசெய்த அனைவரையும் வரவேற்று எனது வரவேற்புரையை நிறைவுசெய்கிறேன் வணக்கம் என்று இனிமையான குரலிலே வரவேற்புரையை வழங்கிய அமிர்தன் திருவரங்கனுக்குப் பலத்த கரகோசம் கிடைத்தது.


 

அமிர்தன் திருவரங்கன் - 





ஆசி உரை





சிவத்திரு திருமதி   பாலம் .லட்சுமணன் அம்மா








"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே"


என்ற திருஞானசம்பந்த நாயனார் அருளிய தேவாரத்தைப் பாடியதைத் தொடர்ந்து அருணகிரிப் பெருமான் அருளிய கந்தர் அநுபூதியில் வருகின்ற 

  

 முருகன்  குமரன்  குகன்  என்று மொழிந்து

உருகும் செயல் தந்து  உணர்வு என்று அருள்வாய்

பொரு புங்கவரும்  புவியும் பரவும்

குருபுங்கவ  எண் குண பஞ்சரனே


.என்னும் பாடலையும் பாடிய முருகனைத் தொழுத பின்பு  

தனது ஆசி உரையைத் தொடங்கினார். முருகனுடைய சன்னிதானத்திலே கூட்டப்பட்டுள்ள இந்த அவையிலே உள்ள அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.   2013ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட  இந்தச் சான்றோர் விழாவை நடத்திக் கொண்டுவருகின்ற - தமிழுக்காக உழைத்துக் கொண்டுவரும் பாரதி அவர்கள் முதுமையிலும் இளைஞராக ஓடி ஆடித்திரிந்து இந்த விழாவைச் சலிப்பில்லாமல் நடத்திக்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கின்றது என்று நாம் எல்லோரும் போற்ற வேண்டியது. சான்றோர் விழாவென்று  சொல்கின்றோம். அந்த வகையிலே இது சான்றோர் நிரம்பிய அவையாகவும் இருக்கின்றது. அதற்கு உதாரணம் பாரதி அவர்களே!. தமிழுக்கு வளஞ்சேர்த்துக் கொண்டு தமிழுக்காகவே உழைத்துக் கொண்டு சான்றோர் விழாவைப் போன்று பாரம்பரியத்தை நமக்குத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கின்ற ஒரு பெருமகனார் அவர்.

அதற்கு அடுத்தபடியாக யாழிலே பேச்சில் வீரியம்காட்டும் ஒரு பெரும் மகனாகக் கருதிய வேந்தனார் அவர்களின் திருமகள் கலையரசி அவர்கள்.. அவர் ஒரு சான்று!. அதைத் தவிர நமக்கு ஈழத்திலிருந்து இங்கு வருகை தந்திருக்கும் ஆறுதிருமுருகன் அவர்கள். எமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும்படியாக சொல்லின் செல்வராக கல்விச் செல்வராக விளங்கும் ஆறுதிருமுருகன் அவர்கள் இங்கு வருகை தந்து இந்த விழாவிலே பங்குகொள்வது  எமக்கெல்லாம ஏற் றத்தையும் போற்றுதலையும் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது...ஆகவே சான்றோர் விழாவிலே சான்றோர் நிரம்பிய அவையாக இருப்பது பாராட்டப்படவேண்டும் ;

இது தமிழுக்கு எடுக்கும் விழா! தமிழ் என்று  சொல்லும்பொழுது தமிழ் எவ்வளவு பழைமையானது!  எவ்வளவு தொன்மையானது! என்ன வளம் உடையது? அதனுடைய விழுமியம் என்ன? அதன் தொன்மையை யார் அறிவார்கள்? எப்பொழுது பிறந்தது எப்பொழுது ஆரம்பிக்கப்பட்’டது தமிழ்என்று

இசை வாணர்களுக்கும் தெரியாது. பெரியோர்களுக்கும் தெரியாது. என்று

சொல்வர். அப்படிப்பட்ட பெரியதொரு பாரம்பரியத்தை நமக்குத் தரக்கூடிய

தமிழ் எப்பொழுது இருந்தது? யாருக்குத் தெரியும்?

அதனுடைய  ஆதியும் தெரியாது அந்தமும் தெரியாது. அப்படிப்பட்ட தொன்மை படைத்தது தமிழ். தொல்காப்பியம் எப்பொழுது வந்தது? திருக்குறள் எப்பொழுது வந்தது?. அவையெல்லாம் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழுக்கு வளம் சேர்த்தவை. அதற்குப் பிறகு 7ஆம் நூற்றாண்டிலேதான் நமக்குக் கணக்குத் தெரிந்தது.

நாலாம் நூற்றாண்டிலே கணக்குத் தெரிகிறது. நால்வர்கள் தேவாரம் படை;த்தவர்கள்.அவர்களைப்பற்றி  நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழ் கன்னித் தமிழ்.    அவள் இன்னமும் கன்னியாகவே இருக்கிறாள்.அவளுக்கு வயது கிடையாது. மூப்புக் கிடையாது. அவள் இன்னமும் இளம்பருவத்தவளாகவே இருக்கிறாள்.அவள் என்றும் பாராட்டப்படவேண்டியவள். வளர்ந்துகொண்டே இருப்பவள்.அவள் நமக்கு இலக்கியம் படைத்தாள். இலக்கியம் என்றால் என்ன? இலக்கியம் ஒரு பொழுது போக்கா? ….இல்லை.

ஒரு அரசன் இலக்கியத்தைப் பொழுதுபோக்காக நினைத்துப் படித்தான். அப்பொழுது பெரிய புராணம் என்ற அமர காப்பியம் எழுந்தது.  அப்படிப் பொழுது போக்கிற்காக அல்ல இலக்கியம். இலக்கியம் என்பது நம்முடைய பழைமையை  நமக்குத் தெரிவிக்கும்; காலக் கண்ணாடி.  தமிழ் எமக்கு வளம் சேர்க்கக் கூடியதாக   உள்ளது. அப்படியான தமிழை - வளம் சேர்க்கின்;ற தமிழை -  வளர்த்த சான்றோருக்கு  விழா எடுக்கின்ற ஒரு முறையை நமது

பாரதி அவர்கள்  சிந்தனையிலே கொண்டு தொடர்ந்து நடத்திக்கொண்டு வருவது மிகவும் பாராட்டுதற்குரிய ஒரு காரியம் .       அதை அவர் ஒருவருடைய உதவியும் இல்லாமல் தானே நினைத்துச் செயற்பட்டு ஊக்கம் கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் பெரிய பாரம்பரியத்திலே ஊறி வளர்ந்தவர்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். எவ்வளவு பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்!.

 

ஆதியும் அந்தமுமு; இல்லாத அருட்பெரும் சோதிபோலத்தான் தமிழும். கடவுளே கழகம் அமைத்தான் என்பதைப் பாரம்பரியம் சொல்கிறது. அதற்;கு உரைகல்லாக இருந்தது முருகன். அப்படியாகத் தமிழ்  வளர்ந்தது. கடவுளாலே வளர்க்கப்பட்டது. பிறகு சங்கம் வளர்த்தார்கள் - தமிழ்ப் புலவர்கள் அமைத்;தார்கள். இலக்கியம் வந்தது.   அந்த இலக்கி;தின் மூலமாக   நம்முடைய பாரம்பரியத்தையும் பெருமையையும் வழமையையும் விழுப்பத்தையும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.   இந்தப் பாரம்பரியத்தைப் போற்றவேண்டிய ஒரு கடமை நமக்கு இருக்கின்றது.   அதைத் தெரிந்து கொள்வதன் மூலம்  இளைய சமுதாயத்தவர் அதனை                 நினைப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும்   அதன் மூலம்     தங்களுடைய ஆவலை வளர்த்துக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருக்கும் என்று சொல்லி இந்த ஒரு மாலை வேளையிலே அழகிய ஒரு சான்றோர் விழாவை ஏற்படுத்தி வருகின்ற பாரதி அவர்களுக்கு என்னுடைய நன்றியைக் கூறி   உரையை நிறைவுசெய்கிறேன்” என்று தனது இனிமையான குரலிலே ஆசி உரையை வழங்கிய சிவத்திரு திருமதி   பாலம் .லட்சுமணன் அம்மா அவர்களுக்குப் பலத்த கரகோசம் எழுந்தது. அவருக்கு நன்றி சொல்லிய சறோஜினி  அவர்கள்  அடுத்த நிகழ்ச்சியாகச் சிட்னியிலே பிறந்து தமிழ் கற்று வரும் சிறுமி செல்வி சுடர்க்கொடி அவர்களை நவநீதகிருஸ்ணபாரதியார் அவர்களைப் பற்றி ஒரு   சிற்றுரையை வழங்குமாறு அழைத்ததும் செல்வி சுடர்க்கொடி தனுது சிற்றுரையை ஆரம்பித்தார்



 


செல்வி சுடர்க்கொடி  - 







தொன்மையும் புதுமையும் மென்மையும் தெய்வத் தன்மையும் கொண்டு தரணி ஆண்ட தமிழைச் சிந்தையால் வணங்குகின்றேன்.   தமிழ் வளர்த்த சான்றோருக்கு எடுக்கப்படுகின்ற இந்த விழாவிலே எனக்கும் சிற்றுரை வழங்குவதற்கு நல்லதோர் வாய்ப்பினைத் தந்த விழா அமைப்பாளர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்து எனது உரையைத் தொடர்கிறேன்.   

 தமிழ் வளர்த்த சான்றோ விழா  2025 ! 

விழா நாயகன் - நவநீதகிருஷ்ண பாரதியார். 

தோன்றிற் புகழொடு தோன்றுக என்று அருளிய பொய்யாமொழிப் புலவரின் வாக்கிற்கு அமையத் தமிழுக்கு அணிசேர்க்கத் தமிழ்நாட்டிலே தோன்றியவர் இன்றைய விழா நாயகரான நவநீத கிருஷ்ண பாரதி என்பவராவர். காலத்தால் மூத்த மொழியான

தமிழ்மொழியாம் எங்கள் தாய்மொழி பலருக்குப் பெருமையையும் உயர்வையும் தந்தது. ஆனால் அத்தகைய தமிழுக்குப் பெருமை சேர்த்த ஈழப்புலவர்கள் வரிசையிலே நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - சிவசம்புப் புலவர் - குமாரசுவாமிப் புலவர் – சின்னத்தம்பிப் புலவர் போன்றவர்களின்  வரிசையிலே வைத்துப் போற்ற வேண்டியவர்   நவநீத கிருஷ்ண பாரதி அவர்கள். சோழவள  நாட்டிலே மணல்மேற்குடிக்குப் பக்கத்திலுள்ள கரவட்டங்குடி எனும் ஊரிலே சீரும் சிறப்புடனும் வாழ்ந்தவர் சுப்பிரமணிய  பாரதியார். எங்கள் மகாகவி அல்ல! இவர் வேறொரு பாரதியார். இவரின் இளைய புதல்வரே இன்றைய விழா நாயகரான நவநீதகிருஷ்ணபாரதி ஆவர். 

 இவரின் அன்புத் தாயார் பெயர் தைலம்மையார். இளமைப் பராயத்திலிருந்தே கல்வி கேள்விகளிலே  சிறந்து விளங்கியதுடன் எல்லோரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுத் திகழ்ந்தவர் பாரதியவர்கள்.  

தனது இளமைப் படிப்பை இராமசாமிப் புலவரிடத்திலும்   பின்னர் பிரபல பண்டிதரான கோபாலையரிடமும் மேற்கொண்டார். மேலும் தமிழிலும்; சைவத்திலும் பாண்டித்தியம் பெறுவதற்காக நற்றிணை உரையாசிரியரான பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் மற்றும் சோழவந்தான் அரசன் சண்முகனார் ஆகியோரிடமும் கல்வி பயின்று தமிழ் இலக்கணம் இலக்கியம் சமய சாத்திரங்கள் ஆகியவற்றிலே பெரும் புலமை படைத்து விளங்கினார். இயல்பாகவே பாக்களை யாப்பதிலும் சலியாது சொற்பொழிவாற்றுவதிலும் மிக்க திறமையைக் காட்டிவந்த பாரதியார்   தனது 18ஆவது வயதிலேயே பாலைக்காடு விக்ரோரியா கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருவாவடுதுறை அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத் திருமுறை ஆய்வுத் துணைவராகவும் தொடர்ந்து திருவாரூர்க் கல்லூரியிலே தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். 

பாரதியாரின் முத்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும்   தமிழீழச் சான்றோனாகிய   சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களைக் கவர்ந்தது. அவரின் அன்பான அழைப்புக்குச் செவிசாய்த்த பாரதியார் யாழ்ப்பாணத்து மருதநாமடத்திலே அமைந்த இராமநாதன் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைமைப் பேராசிரியராகப் பதவியேற்றார்.   சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்டபுரத்திலே குடியேறியிருந்து தனது பணிகளை ஆரம்பித்தார். தொடர்ந்து யாழ். பரமேசுவரா   கல்லூயிலே தமிழ்துறைக்குத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.    1936ஆம் ஆண்டிலே பரமேசுவர பண்டித ஆசிரிய கலாசாலை  நிறுவப்பெற்றதுடன் பாரதியார் அதன் தமிழ்த் தலைமைப் பொறுப்பை ஏற்றார். குறுகிய காலத்திலேயே நூற்றுக்கணக்கான தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்கிய பெருமை பாரதியாரையே சாரும்.   

சாந்த குணமும் எவர்க்கும் தீங்கு நினையாப் பெருமுள்ளமும் கலைபயில் தெளிவைப் பிரதிபலிக்கும் கம்பீரத் தோற்றமும் அவை அஞ்சா ஆற்றலும் தர்க்க நெறியுரைக்கும் சொல்வன்மையும் உரைவிரிக்கும் பேராற்றலும் நவநீதகிருஸ்ண பாரதியாரின் புகழை நாற்றிசையும் பரவவைத்தது. 

பரம்பரைப் புலவர்கள் மரபிலே தோன்றிய     

காரணத்ததால் கவிதை யாப்பது இவருக்குக் குலவித்தையாகி விட்’டது.   

 மணிவாசகர் இந்த– ஆராய்ச்சிப் பேருரையை அரும்பாடுபட்டு ஆறு ஆண்டுகளிலே எழுதிப் பலரின் பாராட்டையும் பெற்றார். அவர் எழுதிய பேருரையானது பேரிலக்கிய வரிசையிலே வைத்துப் பேணப்படவேண்டியது என்பது சான்றோரின் கணிப்பு.  

உலகம் உய்யும்வண்ணம் திருவாய் மலர்ந்தருளிய தேன்தமிழாகிய  திருவாசகத்திற்கு! 

 என்பை உருக்கி இருள்சேர் இருவினைத் துன்பம் அகற்றித் தூய சிவன் பாதமலர் சேர்க்கும் தேன்தமிழ் வாசகத்திற்கு!

கல்நெஞ்சையும் கசிந்து உருகவைத்து நினைவில் அருள்சுரக்கவைத்து அருள்பெருக்கும்  திருநெறிய தமிழ்வாசகத்திற்கு!

பொல்லாதவர்களையம் போக்கறுத்து வாழவைத்து திருவைந்தெழுத்தைச் சொல்லாதவர்களையும் சொல்லவைக்கும் மாமருந்தாய் மலர்ந்த தமிழ் வாசகத்திற்கு!   

அவநெறியில் செல்வோரையும் சிவநெறியில் நிற்கவைக்கும் தேன்‌‌பொதிந்த திருவாசகத்துக்குத்   தித்திக்கச்சிறந்த  பேருரை விரித்த பேராளன் சிவத்திரு நவநீதகிருஸ்ணபாரதி அவர்களே! 

தமிழ்மொழி வளர்ச்சியின் பொருட்டு ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் ஒன்றினை நிறுவுவதற்கு பாரதியாரும் ஒரு காரணகர்த்தாவாக இருந்தவர். மன்றத்தினர் அவரை அதன் தலைவராக்கியதுடன் பண்டிதமணி என்னும் பட்டத்தையும் வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள்.  

இதனை அடுத்து 1952ஆம் ஆண்டிலே ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கம் இவருக்குப் புலவர்மணி என்னும் பட்டமளித்ததுடன் பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது. 

பண்டிதமணிகளை உருவாக்கும் பணியுடன் தேசநேசன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் பெரும்பணி ஆற்றினார். அத்துடன் பல சிறந்த நூல்களையும் இயற்றித் தமிழுக்கு அணிசெய்த பாரதியார் டிசம்பர் மாதம் 1954ஆம் ஆண்டு சிவபதம் எய்தினார். அவர் எழுதிய திருவாசகப் பேருரை அவரின் நினைவையும் அன்னார் புகழையும் என்றும் வாழவைக்கும் 

நன்றி 

வணக்கம் 

பாரதி இளமுருகனார் அவர்களால் எழுதப்பெற்ற இந்தச் சிற்றுரையை செல்வி சுடர்க்கொடி வெகு அழகாகத் தனது இனிமையான குரலிலே பேசினார்.  இதனைத் தொடர்ந்து விழா நாயகனான நவநீத கிருஸ்ணபாரதி அவர்களைப்பற்றிச் சிறப்புரை   ஆற்றுவதற்குத் திருமதி கலையரசி சின்னையா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்றார். கலாவித்தகர் சிவரதி கேதீஸ்வரன் அவர்கள் திருமதி கலையரசி  அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

 (விழா வர்ணனை தொடரும்)

         


No comments: