நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக பால் புதுமையினரின் நடைபவனி - இது தமிழ்க் கலாசார சீர்கேடு என கீதநாத் கண்டனம்
யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்
தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன்
நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக பால் புதுமையினரின் நடைபவனி - இது தமிழ்க் கலாசார சீர்கேடு என கீதநாத் கண்டனம்
10 Jun, 2025 | 07:03 PM
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர்,
இவ்விடயத்தில் தனி நபர்களோ அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும். எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
யாழ். மக்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதுமான மற்றும் உலகளாவிய ரீதியிலான பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஓரினச் சேர்க்கை மற்றும் அதுசார்ந்த தமது நம்பிக்கைகளை ஒரு குழு விளம்பரப்படுத்தும் செயல் அதிர்ச்சிகரமானதும் வெட்கக்கேடானதுமாகும்.
இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்பாடுகளை அரங்கேற்றும் குழுக்களுக்கு மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் ரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் ரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது.
அண்மையில் நல்லூர் புனிதப் பிரதேசத்தில் மாமிச உணவுகளை விற்பனை செய்யும் ஓர் உணவகம் ஒன்றிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்ததன் காரணமாக குறித்த உணவகம் சைவ உணவினை பரிமாறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
எனினும் குறித்த உணவகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அனைவரும் தமிழ் கலாசாரம் சீரழிக்கப்படும் இவ்விவகாரத்தில் மெளனம் காப்பது வருத்தமளிக்கிறது.
குறித்த மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது கலாசார மற்றும் புனிதப் பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் இக்குழுவினரும் ஒரு சமூகத்தின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இது போன்ற கலாசார சீரழிவு நடக்கும் பொழுது நாம் மௌனித்து இருக்க நாம் எந்த ஒரு அமைப்பிடமும் விலை போகவில்லை. தமிழ் கட்சிகள் இதனை கண்டிக்க தவறினால் எமது அடுத்த தலைமுறை சீர்கெட்டுவிடும்.
உண்மையான மற்றும் உணர்வுபூர்வமான மாற்றுப் பாலினத்தவர்கள் வானவில் சமூகத்துடைய செயற்பாடுகளுக்கு அப்பால் இருந்துவருவதே நிதர்சனமாகும் எனும் நிலையில், இந்த சீர்கேட்டை கண்டிக்கத் தவறிவிட்டு உணவகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
10 Jun, 2025 | 03:55 PM
பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்
Published By: Digital Desk 3
10 Jun, 2025 | 12:35 PM
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாற்றும் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடாத்தும் 'இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் 16 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். நன்றி வீரகேசரி
தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு
Published By: Rajeeban
10 Jun, 2025 | 09:15 AM
பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலயம் குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். இன்று பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம்.
தையிட்டியில் வசிக்கும் மக்களிற்கு அந்த ஆலயம் குறித்தோ தேசம் குறித்தோ எந்த பிரச்சினையுமில்லை.
தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரம் அவர்கள் கோருகின்றனர்.
காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து எழவுள்ள குரோதகருத்துக்களையும், புரிந்துணர்வின்மையையும் தவிர்த்துவிட்டு, இந்த பிரச்சினையின் உண்மையான தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள்.
சட்டவிரோதமாக கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு காணி உரித்துக்கள் உள்ள மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட ஆலயம் குறித்து தையிட்டியில் காணப்படும் உண்மையான பிரச்சினையை நீங்கள் அறிவீர்கள் என நான் நாங்கள் கருதுகின்றோம்.
பொசன் தினத்தன்று சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனப்பதற்றத்தை தூண்ட முயல்வதாக அறிகின்றோம். நன்றி வீரகேசரி
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி
09 Jun, 2025 | 05:30 PM
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர்.
தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர்.
இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன்
13 Jun, 2025 | 09:58 AM
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவின் பெரையும் பரிந்துரைந்துரைத்தன.
முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. அதன் போது, தமிழரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதிவதனி விவேகானந்தராஜாவிற்கு வாக்களித்தனர்.
அதன் மூலம் 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவானார்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியினர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவாகியுள்ளார்.


No comments:
Post a Comment