கழுமல வளநகர் மலரென மலர்ந்தார் !

 



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...அவுஸ்திரேலியா


சீர்காழி பிறந்தார் சிவனையே கண்டார்
பாலகனாம் வயதில் பரஞானம் பெற்றார்
மூன்றகவை தன்னில் தோடுடைய செவியன்
சீர்காழி பிறந்தார் செப்பினார் தமிழில்

தத்துவம் செறிய தமிழாய் மலர்ந்தது
சைவம் வளர உரமாய் எழுந்தது
இத்தரை இறையை உணரவே வைத்தது
இறை அருளுடனே பிறந்தார் சம்பந்தர்

ஞானக் கொழுந்தாய் இருந்தார் அவரும்
தேனார் தமிழில் திருவருள் செப்பினார்
ஊனாய் உருகி உணர்வாய் உரைத்தார்
உமையே வந்து ஊட்டினார் பாலை

திருவருள் பெற்ற சீர்காழி மைந்தர்
உருவிலே குழந்தை ஆகியே இருந்தார்
கருவிலே திருவை உடையவர் ஆகி
கழுமல வளநகர் மலரென மலர்ந்தார் 

மூன்றாம் வயதில் முகிழ்த்த நல்ஞானம்
முந்து தமிழில் தத்துவம் ஆனது
திருவுடை மகவாய் திருவருள் நிறைய
சீர்காழி தலத்தில் சம்பந்தர் பிறந்தார்

தமிழாய் மலர்ந்தார் தமிழாய் வளர்ந்தார்
தமிழாய் இறையைக் கண்டார் அவரும்
அவரின் தமிழோ அமுதம் ஆனது
ஆண்டவன் சன்னதி அர்ச்சனை ஆனது

நம்பிடும் அடியார் நம்பிக்கை வளர
நல்வழி காட்டிய மந்தரம் ஆனது 
சந்ததம் இறையை சிந்தையில் இருத்த
செந்தமிழ் பாட்டாய் செப்பினார் அவரும்

சுந்தரத் தமிழும் சுவையொடு வந்தது
அந்தமும் இல்லான் ஆதியும் இல்லான்
செந்திரு சம்பந்தர் சொற்களில் கலந்தார்
நந்தமிழ் செழித்தது நல்வழி தெரிந்தது 

No comments: