இலங்கைச் செய்திகள்

 இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

பிலிப்பைன்ஸ் பிரஜையை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 வருட வதிவிட வீசா

தையிட்டி பிரச்சினை குறித்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை 


இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்! 

02 Jun, 2025 | 03:38 PM

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.

குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.


நன்றி வீரகேசரி 



செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி 

Published By: Vishnu

06 Jun, 2025 | 09:37 PM

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. 

செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது  தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் இதுவரையில் 18 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையுடன் (7) முதலாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைவதனால் , தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. 

அதனை அடுத்து , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதித்துள்ளது.    நன்றி வீரகேசரி 



பிலிப்பைன்ஸ் பிரஜையை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 வருட வதிவிட வீசா 

Published By: Digital Desk 3

06 Jun, 2025 | 04:06 PM

பிலிப்பைன்ஸ் பிரஜையை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 வருட தற்காலிக வதிவிட வீசாக்களை (TRV) வழங்கும் நடவடிக்கையை அந்நாட்டு  அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் பிலிப்பைன்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட கவலைகளில் ஒன்று நிவர்த்தி செய்யப்படுகிறது.

இதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு வதிவிட வீசாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன, மேலும் அதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய தேவை இருந்தது.

இந்த செயல்முறையால் பெரும்பாலும் அதிகாரிகளால் கடவுச்சீட்டுக்களை நீண்ட நாள் வைத்திருக்க வழிவகுத்தது. குறிப்பாக வணிகம் மற்றும் பிற அவசர விடயங்களுக்காக பயணிக்க வேண்டிய நபர்களுக்கு  சிரமங்களை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக வதிவிட வீசா செல்லுபடியாகும் காலத்தை நீடிக்குமாறு இலங்கையர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக,  பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவராக சானக ஹர்ஷ தல்பஹேவா பதவியேற்றதும், தனது பதவிக் காலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.   நன்றி வீரகேசரி 



தையிட்டி பிரச்சினை குறித்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு 

Published By: Vishnu

05 Jun, 2025 | 09:55 PM

யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என  தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ' பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்' உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின்  விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 




செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை 

Published By: Rajeeban

05 Jun, 2025 | 08:08 PM

செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேசநடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வெளிப்படைதன்மையை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது.

செம்மணியின் இரண்டாவது மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இது அமையலாம்.எனினும் இதற்கு சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி அகழ்வு இடம்பெறுவது அவசியம்.

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு இலங்கை அதிகாரிகள் உரிய நிதியை ஒதுக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் ஊடகங்களிற்கும்  அந்த பகுதிக்கு செல்வதற்கான போதிய அனுமதியை வழங்கினால் ,இநத விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விசாரணைகளின் போது இடைக்காலத்தில் தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வந்தால்  மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் வெளிப்படையான விதத்தில் இடம்பெறும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டிற்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அவசரத்தை கருத்தில் கொள்ளும்போது இது இடம்பெறவேண்டும்.

அந்த பகுதியின் நேர்மைதன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்   நன்றி வீரகேசரி 





No comments: