-சங்கர சுப்பிரமணியன்
அந்தி சாயும் அற்புதமான அந்த வேளை
ஆற்று மணலில் கைகோர்த்து நடந்தோம்
என் இடக்கையும் அவள் வலக்கையும்
ஆயுள் ரேகைகள் இனையும்படி சேர்ந்தன
இணைந்திருப்போம் ஆயுள்வரை என்றோ
ஆற்று மணல் எங்களுக்கு பாய் விரிக்க
அருகிருந்த படகில் அவள் தோள் சாய்க்க
அவள் மடியில் நான் தலை சாய்த்தேன்
கண்ணதாசனும் என் நினைவில் வந்தான்
சிறு நெல்லின் மணிதனைப் போலவே
எந்தன் நிழலைக் கண்டேன் அவள் கண்ணில்
பகலோ மெல்ல மெல்ல இரவை நெருங்கியது
அவள் முகமும் என் முகத்தை நெருங்கியது
பகலை முழுதாய் விழுங்கியே இருள் சூழ்ந்தது
என் முகத்தை அவள் கார்குழலும் சூழ்ந்தது
இருவர் முகத்துக்கும் இடவெளி சிறிதேதான்
அவள் மூச்சுக் காற்றின் வெப்பமே சொல்லிற்று
மனதால் நன்றாயொத்த காதலர் தாமே நாங்கள்
செயலால் எங்ஙனமிங்கு எதிர்மறை ஆனோம்
மென்மையான இந்த இளம்பெண் மானோ
ஆண்சிங்கத்தை இங்கே வேட்டையாடுகிறது
இரவின் பிடியில் பகல் முற்றாய் செயலிழக்க
அவள் பிடியிலே நானும் செயலிழந்தேன்
No comments:
Post a Comment