நீர்க்குமிழி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 கதை வசனகர்த்தாவாக,படத் தயாரிப்பாளராக, டைரக்டராக,


ஸ்டூடியோ ஓனராக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர் ஏ கே வேலன். தமிழ் படித்து கற்றுத் தேர்ந்த இவர் ஒரு புலவரும் கூட. இதனால் புலவர் ஏ கே வேலன் என்று பலரும் இவரை அழைப்பார்கள். வணங்காமுடி, சுகம் எங்கே போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய இவர் 1960 ஆண்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற படத்தை சிறிய பஜெட்டில் எடுத்து அந்தப் படம் பெரும் வெற்றி பெற அதில் கிடைத்த இலாபத்தில் அருணாசலம் ஸ்டுடியோவை நிறுவினார். ஆனால் அதன் பிறகு இவர் எடுத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. 



இந் நிலையில் சென்னையில் மேடையேறிய நாடகம் ஒன்றை பார்த்த

வேலன் அதனை படமாக தயாரிக்க தீர்மானித்தார். ராகினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரான அந்த நாடகத்தின் பெயர் நீர்க்குமிழி. அரசாங்க உத்தியோகத்தில் இருந்து கொண்டு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருந்த கே . பாலசந்தர் தான் அதன் கதாசிரியர் இயக்குனர். எம் ஜி ஆர் மூலம் அவரின் தெய்வத் தாய் படத்துக்கு வசனம் எழுதி திரைக்கு அறிமுகமான பாலசந்தர் தொடர்ந்து பூஜைக்கு வந்த மலர், நீலவானம் போன்ற படங்களுக்கும் கதை வசனம் எழுதினார். இப்போது அவரின் நீர்க்குமிழி நாடகத்தை படமாக்க முன் வந்த வேலன் இன்னும் ஒரு படி மேலே போய் பாலசந்தரை இயக்குனராகவும் அறிமுகப் படுத்த துணிந்தார். இந்த வகையில் நீர்க்குமிழி மூலம் பாலசந்தர் பட டைரக்டரானார்.

பாலசந்தரின் ஆரம்ப கால நாடகங்களாக சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி எல்லாம் நாகேஷின் நடிப்பை நம்பியே உருவாக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே சர்வர் சுந்தரம் படமாகி வெறி கண்ட நிலையில் நீர்க்குமிழி படமான போது அதில் கதாநாயகனாக நடிக்க நாகேஷ் ஒப்பந்தமானார்.


ஒரு மருத்துவமனை. அங்கே தந்தையும், மகளுமான இரண்டு டாக்டர்கள்.மகள் இல்லறத்தில் ஈடுபடாமல் அமெரிக்கா சென்று மருத்துவத்தில் மேலும் பயிற்சி பெற்று திரும்பி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் . மகளோ அங்கு நோயாளியாக வரும் ஒரு கால் பந்தாட்ட வீரன் மீது காதல் கொள்கிறாள். அதே மருத்துவமனையில் இளம் நோயாளி ஒருவன். சிரிக்க சிரிக்க பேசி குறும்பு பண்ணி கலகலப்பாக இருக்கும் அவனுக்கு தெரியாது தான் இன்னும் சில தினங்களில் சாகப் போகும் விஷயம்! ஆனால் அதுவும் ஒரு நாள் அவனுக்கு தெரிய வருகிறது, அதனை அவன் எவ்வாறு எதிர் கொண்டான் என்பது மீதி படம்.


சின்ன கதை, சின்ன சின்ன சம்பவங்கள் இவற்றை வைத்து படத்தை

இயக்கியிருந்தார் பாலசந்தர். புதிய இயக்குனர் என்பதை அவர் படத்தை இயக்கிய விதம் தெரிய வைக்கிறது. நாடகத்தில் இருந்து வந்த கதை என்பதால் பல காட்சிகள் நாடகம் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மருத்துவமனைக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்து விட்டார்கள். ஆனாலும் கதாநாயகன் சேதுவாக வரும் நாகேஷ் தன் நடிப்பால் படத்தை உயரத்துக்கு கொண்டு போகிறார் . ஆரம்பத்தில் சேட்டைகள் செய்து கொட்டம் அடித்து சிரிக்க வைப்பவர், பிற் பகுதியில் தனது குணசித்திர நடிப்பால் கலங்க வைக்கிறார். அவரின் முக பாவங்களும் அதற்கு துணை புரிகிறது. 



சௌகார் ஜானகிக்கு கண்ணியமான பாத்திரம், அதனை தளும்பாமல் செய்திருந்தார் சுந்தரராஜன் அப்பா, டாக்டர் என்று இரு நிலையிலும் அலுங்காமல் நடிக்கிறார். வி. கோபாலகிருஷ்ணன் படம் முழுதும் படுத்த படி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயந்தி , எஸ் என் லஷ்மி, ஹரிகிருஷ்ணன், ஐ எஸ் ஆர், ஆகியோரும் நடித்திருந்தனர். 


படத்துக்கு இசை வி . குமார் . இவர்தான் பாலசந்தரை ஏ. கே வேலனுக்கு அறிமுகம் செய்தவர். இவர் இசையில் உவமை கவிஞர் சுரதா இயற்றிய ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. நிமால் கோஷ் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.

1965ம் வருடம் வெளி வந்த படங்களுள் தொண்ணூறு வீதமான படங்களில் காமெடியனாக நாகேஷ் நடித்திருந்தார். அவற்றுள் இந்தப் படத்தில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டார்!

படத்தின் பெயர் நீர்க்குமிழி என்று இருந்த போதும் பாலசந்தருக்கு இப் படத்தின் மூலம் ஏறுமுகம் தான். ஆனாலும் இந்தப் படத்துக்கு பிறகு வேலனும், பாலசந்தரும் வேறு படங்களில் மீண்டும் இணைந்து எனோ பணியாற்றவில்லை. பாலசந்தரின் நீண்ட கால திரைப் பயணத்துக்கு அடிகோலிய படமாக நீர்க்குமிழி அமைந்தது.

ஆனாலும் எந்த இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் நேரடியாக களத்தில் குதித்த பாலசந்தரையும், அவரை துணிந்து இயக்குனராக அறிமுகப் படுத்திய ஏ. கே . வேலனையும் பாராட்டத்தான் வேண்டும்!

No comments: