நிம்மதியைக் கொடுத்திடுவோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... ஆஸ்திரேலியா


தென்னையைப் பார்ப்போம்
       தெரிவோம் நல்லதை
எடுத்துண்ட  நீரை
       இளநீராய்  ஈய்கிறதே
கருக்குநிறை பனைமரம்
       காலிருந்து தலைவரைக்கும்
செருக்கின்றிக் கொடுக்கிறதே
         சிந்தித்தால் சிறப்பாகும்   !

கொடுக்கின்ற கனியாலே
       மரத்துக்கு  ஏதுபயன்
விதம்விதமாய்  சுவைகொண்ட
        பலகனிகள் வருகிறதே
அதையுண்டு சுவையறியும்
      ஆனந்தம் எமக்கன்றோ
உணர்வின்றி மரமழித்தல்
        உவப்பான  செயலாமோ  !

ஊர்நடுவே ஆலமரம்
       கிளைபரப்பி நிற்கிறது
யார்வருவார் யார்செல்வார்
      ஆலமரம் பார்ப்பதில்லை
வெப்பமதை உணராமல்
        வந்திருப்பார் மகிழ்வடைய
ஆலமரம் அமைவதனை
        அகமிருத்தல் அவசியமே  !

  
காலநிலை சமநிலை
          காட்டுமரம் தருகிறது
சாலையோர மரமெல்லாம்
         தளர்வுதனை போக்கிறது
உணர்வற்ற மரமென்று
        உறவுகளைத் திட்டுகிறோம்
உணர்வுள்ள நாம்மட்டும்
         மரமழித்தல் முறையாமோ !

பூவை அணைப்போம்
          புறப்படும் புத்துணர்வு
காயாம் மனத்தைக்
         கனியாய் காண்போம்
செடியாய் முளைத்து
        விருட்சமாய் நிமிர்வோம்
நிழலாய்  இருப்போம்
        நிம்மதியைக்  கொடுத்திடுவோம் !


No comments: