பத்திரிகை துறையில் கதம்பமாக மணம் வீசும் மோகன்! - ச . சுந்தரதாஸ்


இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சஞ்சிகைத் துறையில் ஓர் இளைஞர் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். தனது பத்தொன்பதாவது வயதிலேயே ஒரு மாத சஞ்சிகைக்கு ஆசிரியராகி விட்ட அவர் தான் கே. வி. எஸ். மோகன். அவர் ஆரம்பித்து ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் வெற்றி கரமாக நடத்திய சஞ்சிகையின் பேர் கதம்பம். அந்த மோகன் மே 30ம் திகதி தனது எண்பத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்!


அன்றைய கால கட்டத்தில் எல்லோரும் வார சஞ்சிகைகளை ஆரம்பித்து நடத்திய போது நீங்கள் ஏன் மாதப் பத்திரிகை ஆரம்பித்தீர்கள் என்று கேட்ட போது , கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் தான் அவ்வாறு ஆலோசனை சொன்னார் , பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை விளக்கிய அவர் மாதப் பத்திரிகை என்றால் நடத்துவது சுலபம் , விளம்பரம் சேகரிப்பதும் சுலபம் என்று ஆலோசனை சொன்னார் என்கிறார் மோகன்.

பத்திரிகை உலகிற்கு திடீரென்று வந்து குதித்தவர் அல்ல மோகன்.

வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய கே. வி. எஸ். வாஸ் என்ற எழுத்துலக ஜாம்பவானின் வாரிசுதான் மோகன். ரஜனி என்ற பெயரில் அவர் எழுதிய நாவல்கள் மிகவும் பிரபலம். அந்த வாஸின் வழித் தோன்றலாக கதம்பம் மாத இதழை 1959ம் வருடம் தொடங்கினார் மோகன். எழுத்துலகில் நுழையத் துடித்துக் கொண்டிருந்த ஏராளமான இளம் எழுத்தாளர்களுக்கு கதம்பம் ஒரு வடி காலாக விளங்கியது. பிரபல எழுத்தார் தெளிவத்தை ஜோசப் எழுதிய முதல் கதை, காரைக்குடி நாராயணன், ஜோதிர்லதா கிரிஜா என்று பலருக்கு கதம்பம் எழுத்துலக வாசலைத் திறந்து விட்டது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வார , மாத சஞ்சிகைகள் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போன ஒரே தமிழ் மத இதழ் கதம்பம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அந்த வகையில் இலங்கை, இந்தியாவுக்கு இடையே இலக்கிய பாலம் அமைத்த பெருமை மோகனுக்கும், கதம்பத்துக்கும் உண்டு.

அறுபதாம், எழுபதாம் ஆண்டு கால கட்டத்தில் மோகன் முழு வீச்சில் பத்திரிகைத் துறையில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். மூதறிஞர் ராஜாஜி, ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி , சிறிமாவோ பண்டாரநாயக்க , அறிஞர் அண்ணா, எம் . ஜி. ஆர், சிவாஜி, என்று அவர் சந்தித்த பிரபலங்களும், அவர்களுடனான அனுபவங்களும் நீண்ட பதிவுகளாகும். அன்றைய கதம்பம் வாசகர்களுக்கு அவை சுவையாக படைக்கப் பட்டன.


தமிழ் சினிமா உலகில் மோகனுக்கு இருந்த நெருங்கிய தொடர்பால் வீரகேசரிக்கு நீண்ட காலம் சினிமா செய்திகளையும் அவர் படைத்து வந்தார். அன்றைய தமிழக பிரபலங்கள் இலங்கை வந்தால் தேடுவது மோகனை என்றால் அது மிகை இல்லை. 1965ம் ஆண்டு புது நடிகரான ஜெய்சங்கர் கொழும்பு வந்த போது அவருடன் கோட்டை பகுதிகளில் நடந்து திரிந்து விட்டு , பிரபல வானொலி அறிவிப்பாளர் மயில்வாகனன் வீட்டுக்கு டாக்சியில் சென்றதை நினைவு கூறுகிறார் மோகன்.

அன்றைய கால கட்டத்தில் மோகனின் 219, ஜம்பட்டா தெரு , கொட்டாஞ்சேனை இல்லம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்களின் வேடந்தாங்களாகத் திகழ்ந்தது. அதனை அனுபவித்தவர்களில் அடியேனும் ஒருவன்!

இலங்கையில் தமிழ் திரைப்படம் எடுக்க முன்வருபவர்கள், நாடகம் மேடையேற்ற விரும்புபவர்கள், எல்லோரும் மோகனிடம் ஆலோசனை பெறத் தவறுவதில்லை.

1983ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரம் கதம்பம் வெளியீட்டுக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தது. ஆனால் மோகன் பத்திரிகைத் துறையை விட்டு ஒதுங்கி விடவில்லை. தனது அனுபவத்தையும், திறமையையும் விளம்பரத் துறை பக்கம் திருப்பினார் அவர். இதன் காரணமாய் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளுடனான அவரின் தொடர்புகள் ஓர் விளம்பர முகவராகத் தொடர்ந்தது.

2020 ம் வருடம் முழு உலகமும் கொரோனா கொடுமைக்கு உள்ளான போது மோகன் தனது செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய நிலைக்கு உள்ளானார். அதன் விளைவாக இன்று அவர் சென்னையில் வாசம் செய்கிறார். ஆனாலும் இலங்கையுடனான அவர் தொடர்பு, விஜயம், சந்திப்புகள் எல்லாம் தொடர்கின்றன. என்பத்தைந்து வயதிலும் துடிப்புடன் இயங்குகிறார் மோகன், வாழ்த்துக்கள்!

No comments: