மாமருந்தாய் வந்தமைந்த மாமணியே !




 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

        செம்பவள வாய்திறந்து 

           சிரித்துநிற்கும் உன்முகத்தை
        தினமுமே பார்த்திருந்தால் 
           சிந்தனையே தெளிந்துவிடும்
       வந்தநோ ஓடிவிடும்
            வலியனைத்தும் மறைந்திடுமே
       எந்திருவே உனையணைத்து
            என்னாளும் இன்புறுவேன் !

        முழுநிலவு வடிவான

           அழகுநிறை உன்முகத்தை
       முத்தமிட்டு முத்தமிட்டு
           மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
        கொழுகொழுத்த கையாலே
            குறும்புநீ செய்கைகையிலே
       ஒழுகிவரும் இன்பமதை
            உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

        பொட்டுவைத்துத் தலைசீவி

           புதுச்சட்டை போட்டுனக்கு
        மெத்தையென என்மடியில்
           விரல்சூப்ப விட்டிருப்பேன்
       சூப்பிவிட்டு துப்புகின்ற
           எச்சிலெனை நனைக்கையிலே
       பார்க்கின்ற அத்தனையும்
           பரவசமாய் தெரியுமப்போ !

        மழலை  மொழிபேசி

           மயக்குவாய் எனைநீயும்
        மாமருந்தாய் வந்தமைந்த
            மாமணியே நீயெனக்கு 
        மாதவத்தால் உனப்பெற்றேன்
          வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்
        வையகத்தில் நான்வாழ
            வாய்த்துள்ளாய் குலவிளக்காய்  !

 





No comments: