அரசியல் பிழைத்தோர்க்கு
அறமேகூற் றாகுமென்று
அன்றுரைத்த காப்பியத்தை
பட்டிமன்றப் பொருளாக்கி
பலவாறு பேசுகிறோம்
கருத்ததனை மட்டுமே
கருத்திருக்கத் தவிர்க்கிறோம் !
ஒருவனுக்கு ஒருத்தியென
உரைக்கவந்த காப்பியத்தை
வீட்டிலும் படிக்கிறோம்
கோவிலிலும் விளக்குகிறோம்
காப்பியத்து நாயகனை
கடவுளாக்கிப் போற்றுகிறோம்
நாயகனின் கருத்தைமட்டும்
நட்டாற்றில் விட்டுவிட்டோம் !
நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
நம்நினைவில் பதிந்திருக்கு
நாலையும் தொலைத்தோம்
இரண்டையும் ஒதுக்குகிறோம்
வேலிக்குச் சாட்சியாய்
ஓணானும் வருவதுபோல்
வேண்டாத பலவற்றை
துணையெனவே வைத்துள்ளோம் !
புராணமெலாம் புழுகென்று
புகலுகின்ற மேதைபலர்
புதுமையெனும் பெயராலே
புலம்புகிறார் தத்துவங்கள்
உள்ளீடைப் பார்க்காமல்
உயிரோட்டம் உணராமல்
உண்மைகளை ஒதுக்குவது
உயர்நிலையாய் அமையாதே !
No comments:
Post a Comment