உலகச் செய்திகள்


ட்ரம்பை சினமூட்டிய, புட்டின் - சல்மான் சந்திப்பு

இம்ரான்கானுக்கு ட்ரம்ப் கடிதம்

புஷ்ஷுக்கு அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்

இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அதிகரிப்பு- இந்திய கடற்படை தளபதி

பத்திரிகையாளர் கொலையில் சவுதி இளவரசரிற்கு தொடர்பு- அமெரிக்க செனெட்டர்கள்

ஹரியை கொலை செய்யவேண்டும்- பிரிட்டனின் மர்ம அமைப்பு

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க நாமும் அணுவாயுத தயாரிப்பை முன்னெடுப்போம்

 கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி

 ‘த அயர்ன் லேடி’ 

2018 இன் உலக அழகியானார் மெக்ஸிகோவின் வனிசா 



ட்ரம்பை சினமூட்டிய, புட்டின் - சல்மான் சந்திப்பு


03/12/2018 ஜி-20 உச்சிமாநாடு கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ஜன்டீனாவில் புயனொஸ் அயர்ஸ் நகரில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. 
மேற்படி 13 ஆவது ஜி-20 உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியிலுள்ள 19 செல்வந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவிருந்தது. எனினும் அந்த சந்திப்பானது ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் இம் மாநாட்டின்போது புட்டின் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் கைகுளுக்கி அளவலாவி வெறுப்பேற்றியுள்ளார்.

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்திலிருந்து சவுதி மீதும் இளவரசர் முகமது பின் சல்மானுடனும் ட்ரம்ப் அதிருப்பதியுடன் உள்ள நிலையில் இச் சம்பவம் ட்ரம்ப்பை அதிகளவு கோபப்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான காணொளியும், புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாக பரவ ஆரம்பித்துள்ளது.  



நன்றி வீரகேசரி 











இம்ரான்கானுக்கு ட்ரம்ப் கடிதம்

04/12/2018 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 
 அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலிபான் கிளர்ச்சியாளர்கள்  கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த தாக்குதலினால்  நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உங்கள் பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை வழங்கவேண்டும். எனவே தலிபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு வழங்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
அல்- குவைதா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என்று கடந்த வாரம் ட்ரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












புஷ்ஷுக்கு அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்

04/12/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 
1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி மசட்ச்சூசஸில் பிறந்த ஜோர்ஜ் ஹெர்பர்ட் வோக்கர் புஷ், அமெரிக்காவின் 41 ஜனாதிபதியாக 1989 ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளதுடன், இரு முறை நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியிருந்தார். 
இதனையடுத்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 94 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழ‍ைமை உயிரிழந்தார்.
தற்போது அவரது சடலம் பொது மக்களின் அஞ்சலிக்காக வொசிங்டனில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவரது சடலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், அரவது பாரியார் மெனியா ட்ரம்பும் நேற்று சென்று தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். சுமார் அரை மணி நேரமாக அங்கிருந்த அவர்கள் பொதுமக்களிடமோ ஊடகங்களிடமோ எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காது அதன் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்னர்.  நன்றி வீரகேசரி 
















இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அதிகரிப்பு- இந்திய கடற்படை தளபதி

05/12/2018 சீனா கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் எட்டு நீர்மூழ்கிகளை இந்து சமுத்திரத்திற்கு அனுப்பியுள்ளதாக புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இவற்றில் சில நீர்மூழ்கிகள் இலங்கை பாக்கிஸ்தான் வரை சென்றதாக அவை குறிப்பிட்டுள்ளன.
ஒவ்வொரு நீர்மூழ்கியினது பயணமும் ஒரு மாதம் வரை நீடித்தது என தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் கப்பலொன்றும் அணுவாயுதங்கள் அற்ற நீர்மூழ்கிகளும் அணுவாயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கிகளும் இந்து சமுத்திர பகுதிக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளன.
இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம்  இறுதியாக சீனா நீர்மூழ்கியொன்று இந்துசமுத்திர பிராந்தியத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தடவையில் ஆறு முதல் எட்டு நீர்மூழ்கிகள் நடமாடியுள்ளன,கடந்த வருடம் சீனாவின் 12 கடற்படை கலங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காணப்பட்டன் அதில் அந்த நாட்டின் நாசகாரி கப்பல்களும் உள்ளன எனவும் இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
கடற்படை பலம் என வரும்போது பாக்கிஸ்தானை விட நாங்கள் அனைத்து வழியிலும் பலமாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள இந்திய கடற்படை தளபதி இந்து சமுத்திரத்தை பொறுத்தவரையிலும் எங்கள் பக்கமே சாதகதன்மை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பின்னணியில் இந்தியா 56 யுத்தகப்பல்களையும் ஆறு நீர்மூழ்கிகளையும் இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.  நன்றி வீரகேசரி 











பத்திரிகையாளர் கொலையில் சவுதி இளவரசரிற்கு தொடர்பு- அமெரிக்க செனெட்டர்கள்

05/12/2018 பத்திரிகையாளர் ஜமால்கசோஜியை  கொலை செய்வதற்கான உத்தரவை சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரே பிறப்பித்தார் என உறுதியாக நம்புவதாக அமெரிக்க செனெட்டர்கள் தெரிவித்துள்ளனர்
பத்திரிகையாளர் படுகொலை குறித்து சிஐஏயின் இயக்குநர் ஜினா கஸ்பெல் வழங்கிய இரகசிய தகவல்களை செவிமடுத்த பின்னரே அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நீதிபதியின் முன்னிலையில் தோன்றினால் அரை மணித்தியாலத்தில் அவரிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும் என அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் தலைவரான குடியரசுக்கட்சியின் செனெட்டர் பொப் கோர்க்கர் தெரிவித்துள்ளார்.
சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசரிற்கு தெரியாமல் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க முடியாது என உறுதியாக நம்பியபடியே இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டேன்  நான் நினைத்தது மிகச்சரியென தற்போது உறுதியாகியுள்ளது என குடியரசு கட்சியின் செனெட்டர் லின்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்  மிக உயர்ந்த அளவில் இந்த கொலையில் தொடர்புபட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகமட் பின் சல்மான் பதவியிலிருக்கும்வரை சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை எதிர்ப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 














ஹரியை கொலை செய்யவேண்டும்- பிரிட்டனின் மர்ம அமைப்பு


06/12/2018 வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தமைக்காக பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை கொலைசெய்யவேண்டும் என  பிரிட்டனின் நவ நாஜிகள் தெரிவித்துள்ளது.
மேகன் மேர்க்கெல் வேறு இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்த ஹரியை கொலை செய்யவேண்டுமென பிரிட்டனின்  சொனொன் கீரீக் பிரிவு எனப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அமைப்பு இணையத்தில் இளவரசர் ஹரியின் தலையை துப்பாக்கி இலக்கு வைக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட படத்தில் இனத்துரோகி என்ற  வாசகத்தையும் காணமுடிகின்றது.
இதேவேளை இந்த குழுவினர் ஐந்து கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி  இந்த குழுவில் பிரிட்டனின் பல்கலைகழக மாணவன் ஒருவரும் பதின்மவயது இளைஞர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அமைப்பினர் மேற்கொண்ட உரையாடல்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை இவர்கள் பொலிஸாரை கொலை செய்யவேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த பல மாதங்களாக  பல நூற்றுக்கணக்கான  இணைய உரையாடல்களை ஆராய்ந்த வேளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள நவநாஜிகள் இனவெறி பெண்களிற்கு எதிரான வெறுப்பு வன்முறை மற்றும் ஈவிரக்கமற்ற தன்மையை ஊக்குவித்து வருகின்றமை புலனாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது   நன்றி வீரகேசரி 














அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க நாமும் அணுவாயுத தயாரிப்பை முன்னெடுப்போம்


06/12/2018 அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை மீறி அணுவாயுதங்களை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபடுமானால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் அணுவாயுதங்களை தயார் செய்வோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 
1987 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமிடையே அணுவாயுத தடுப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 
இதன்படி இரு நாடுகளும் குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவதற்கும், ஏற்கனவே தயாரித்த பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து பெரும்பானலான அணுவாயுதங்கள் இரு தரப்புக்களிலுமிருந்து அழிக்கப்பட்துடன். அணுவாயுத  தயாரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டது. 
இந் நிலையில் ரஷ்யாவானது குறித்த உடன்படிக்கையை மீறி செயற்பட்டு வருவதாக அமெரிக்க குறிப்பிட்டு, அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளது. 
இதற்கு பதிலளித்த புடின், 
இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை எம் மீது சுமத்துகின்றனர்.
தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.
அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் பதிலுக்கு அணுவாயுதங்களை தயாரிக்க சித்தமாகவுள்ளோம். 
ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதற்காகவே தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்றார்.  நன்றி வீரகேசரி 












 கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி

07/12/2018 சீன நாட்டின் தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகள், கனடாவில் வைத்து கடந்த முதலாம் திகதி வான்கூர் நகரில் கைதுசெய்யப்பட்டார். எனினும் இது பற்றிய தகவல்களை கனடா நீதித்துறை அமைச்சகம் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. 
ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. 
இது தொடர்பிலான விசாரணைகளை அமெரிக்கா நடத்தி வருகின்ற நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார் என  ஊகிக்கப்படுகிறது. எனினும் இவரது கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 
இந் நிலையில் மெங்வான்ஜவை கைது செய்திருப்பது மனித உரிமை மீறலாலும் என்று தெரிவித்திருக்கும் சீனா, அவரை விடுதலை செய்ய வேண்டுமென கோரியுள்ளது.
அத்துடன் அமெரிக்காவும், கனடாவும் உடனடியாக கைது செய்ததற்கான காரணங்களை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
இது இவ்வாறிருக்க மெங்வான்ஜவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் செயற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. அது வர்த்தகப்போராக மாறியுள்ளது. இந்த நிலையில், கடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அதில் இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்க உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீனப்பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் வரி விதிக்கப்போவதில்லை. 90 நாட்களுக்கு இது நீடிக்கும். அதற்குள் இரு தரப்பும் பேசி தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட வேண்டும் என்று இணக்கப்பாடு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போது சீன தொலை தொடர்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டிருப்பது இரு தரப்பு உறவில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி 








 ‘த அயர்ன் லேடி’ 


07/12/2018 மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'த அயர்ன் லேடி' என்ற பெயரில் படமாக தயாராகவிருக்கிறது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று வெளியாகியது. இதில் நடிகை நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
மெர்சல் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் அன்பையும் பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் தற்போது முன்னணி இயக்குநர் பிரியதர்ஷிணி என்பவர் இயக்கத்தில், உருவாகவிருக்கும் ‘த அயர்ன் லேடி’ என்ற படத்தை நடிக்கவிருக்கிறார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சுயசரிதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. 
இதில் ஜெயலலிதாவின் இளமைத் தோற்றத்தில் நடிகை நித்யா மேனன் தோன்றுகிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை அரசியலைக் கடந்து அனைவரும் வரவேற்றிருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







2018 இன் உலக அழகியானார் மெக்ஸிகோவின் வனிசா 

09/12/2018
2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி (மிஸ் வேர்ல்ட்) சீனாவில் நடைபெற்றது. இதில் இவ்வாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை மெக்ஸிகோவைச் சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் பெற்றுள்ளார். 
இதன்போது கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.  நன்றி வீரகேசரி 







No comments: