வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும் (கவிதை) வித்யாசாகர்!


1
ரு நிலா செய்து தெருவில்
உருட்டிவிடவும்,
நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில்
கொட்டிக்கொள்ளவும்,
பூமியைச் சுருட்டி வீட்டுக்
கதவு மூலையில் வைத்துவிடவும்,
வானத்து முதுகில் ஒரு
பெயரெழுதி வைக்கவும்,
கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து
உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும்,
கவிதைக்குள்
எல்லாமே சாத்தியமாகி விடுகிறது;
ஆனாலந்த கவிதை மட்டும்
உன்னால் தான் சாத்தியமாகிறது!!
-----------------------------------------

2
து என்ன
சட்டி பானை குன்டான் குவளை
எல்லாம் விற்கிறார்கள்
உன்னோட ஒரு சிரிப்பு
உன் குரல்
ஒரு பார்வை இப்படி ஏதேனும்
ஒன்று விற்க கிடைத்தால் போதும்,
அந்தக் கடையை ஒரு யுகத்திற்கு
வாங்கிக்கொள்வேன்!!
-----------------------------------------
3
கா
தல்
ஒரு காக்க குருவியைப்போல
எங்கெங்கோ பறக்கிறது
ஏதேதோ செய்கிறது
ஆனால்
கடைசியில் வந்து அமர்வது மட்டும்
உனக்குள் தான்;
உனதன்பு தான் எனக்கந்த
காக்கா குருவியும் காதலும்.. எல்லாமும்..
-----------------------------------------
4
நீ
 
எங்கெங்கு நிற்பாயோ
அங்கெல்லாம் கரோனா கரோனா என்கிறார்கள்
கரோனா வந்து விட்டது
குழாயடி போகாதே என்கிறார்கள்,
கரோனா வந்துவிட்டது
கடைத்தெரு போகாதே என்கிறார்கள்,
கரோனா வந்து விட்டது
தெருவிலெல்லாம் நிற்காதே என்கிறார்கள்,
கரோனா வந்துவிட்டது
யாரிடமும் பேசாதே என்கிறார்கள்
யாரிடமும் பேசாமலிருப்பதும்
உன்னிடம் பேசாமலிருப்பதும்
ஒன்றாகுமா?
கரோனா வந்தால் ஒன்று சரியாகும்
அல்லது உயிர்போகும்
அது எல்லோருக்குமே தெரியும்,
ஆனால், நீயில்லாமல் எனக்கு
உயிர் போகும், திரும்ப வராதே…??!!!
-----------------------------------------
5
காற்றாடி காலம் போல
மாஞ்சா விட்டு கையருந்ததைப்போல
மணல் கொட்டியத் தெருவில் அமர்ந்து
கதைபேசியதைப்போல
விளக்குப்பூஜை, கோயில், கிணற்றடி,
வளையல்கடை, மீன்காரி, பூக்காரி,
ஐஸ்வண்டி, அந்த தபால்காரர்,
ரேசன் கடை, ஒளியும் ஒலியும்
சன்னல், காற்று, மழை பட்டாம்பூச்சி
மல்லிகைப்பூ, மாலையில் அடிக்கும் பள்ளிக்கூட மணி
இப்படி எங்கு எதைக் கண்டாலும
உன்னை மட்டுமே தேடியலைந்ததைப் போல
இப்போதும் உன்னைத் தேடிக்கொண்டு தான்
இருக்கிறது மனம்,
உன்னைப்பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறது
ஏதேனும் ஒரு பாடல்,
வேறென்ன செய்ய; உன் நினைப்பு
வந்தால் துடைத்துவிடுவேன்
பாடல் வலித்தால் கொஞ்சம் அழுதுகொள்வேன்
யாரேனும் கேட்டால்
கண்ணில் தூசி என்பேன்
மனதுக்குள் நீயென்று யாரிடம் சொல்ல?
வயது கூடினாலும்
வெள்ளை முடி உதிர்ந்தாலும்
வாழ்க்கை தீரும் கடைசி நாளன்றும்
நீ நின்ற இடமெனக்கு இன்றும் கோயில் தான்
நீ பேசியதெல்லாம் எப்போதும் வரம் தான்
எனக்கு நீ எங்கிருந்தாலும், அதே என் நீ தான்!!
------------------------------------------------
வித்யாசாகர்



No comments: