சிட்னி இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி - 11/10/2020


தற்போது அவுஸ்திரேலியாவில் பரவி வரும் கொரோனா (COVID-19 Coronavirus) தொற்று நோய் தொடர்பில் மத்திய அரசு, மாநில அரசு , மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் அறிவித்தலுக்கு அமைய 

அனைத்து போட்டிகளும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் காலை 10.00 மணியிலிருந்து நடைபெறும்.  

போட்டி நடத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்.

பாலர் ஆரம்ப பிரிவு (01.08.2015 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)

பாலர் பிரிவு (01.08.2013 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

கீழ்ப்பிரிவு (01.08.2011 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

மத்தியபிரிவு (01.08.2008 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்)


மேற்பிரிவு     (01.08.2005 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

அதிமேற்பிரிவு     (01.08.2001க்கும் 31.07.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

போட்டிகளுக்கான விவரங்கள் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம், மனனம் செய்யவேண்டிய
குறள்களின் விவரங்களை பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.



திரு கு.  கருணாசலதேவா                                  - 0418 442 674
திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்             - 0434 098 842
திரு செ.  பாஸ்கரன்                                               - 0407 206 841
திரு பஞ்சாட்சரம் பரமசாமி                             - 0434 006 841
திருமதி ஜெகத்ஜெனனி சிவானந்தன்          - 02 9863 1465
திருமதி பாஸ்ஹரி சிவஞானசுந்தரம்           - 0409 833 586

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 10  October 2020 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக  KuralComp2020@gmail.com முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ஒருவர் அந்தந்த வயதுக்கேற்ற போட்டிகளில் பங்கு பெறலாம். ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தில் பெறப்படுகிறது.
====================================================================
விண்ணப்பப் படிவம்

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 10  OCTOBER 2020 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக  KuralComp2020@gmail.com முகவரிக்கு அனுப்பிவைக்கவும். 
=======================================================================
திருக்குறள் மனனப் போட்டிகள் 


புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்

1.   மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்)

தடங்கலின்றி திருக்குறளை ஒப்புவிக்கவேண்டும்.  சரியாக மாணவர்கள் மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும்போது  கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்

2.     உச்சரிப்பு: (40 புள்ளிகள்)

மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.

3.     சபை மரபு: (20 புள்ளிகள்)

சபைக்கு வருதல், சபையில் உள்ளவர்களை விளித்தல், சபைக்கு முன் நிற்றல், சபையை விட்டகலல் என்பவற்றிக்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.  ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து, தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.

விதிமுறைகள்

1.    போட்டிகளை இரண்டு அல்லது மூன்று நடுவர்கள் நடத்துவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். போட்டி முடிவுகள் போட்டி முடிந்து 2 வாரங்களில் மின்னஞ்சல்வழி தெரிவிக்கப்படும். பரிசளிப்பு பற்றிய விவரங்களும் மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.

2.  போட்டியின்போது பெற்றோர் சற்று தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

3.           போட்டிகள் தொடர்பாக முறையீடு செய்ய விரும்புவோர், எங்களுக்கு எழுத்து வடிவில் கொடுக்கவேண்டும்.

4.    முதலாவது வந்த மாணவரின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்றைய மாணவர்களுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.

5.               90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் BAND A ஆகவும், 75 - 89 புள்ளிகள் பெற்ற மாணவர்கள்  BAND  B ஆகவும், 60-74 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் BAND  C ஆகவும் கணிக்கப்படுவர். 60 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.




திருக்குறள் மனனப் போட்டி - 2020
பாலர் ஆரம்பப் பிரிவு

    கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் இரண்டையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.               அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

2.              வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.







திருக்குறள் மனனப் போட்டி - 2020
பாலர் பிரிவு
        கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் மூன்றையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.              அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

2.               பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

3.               நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.








திருக்குறள் மனனப் போட்டி – 2020
கீழ்ப்பிரிவு

        கீழே கொடுக்கப்பட்ட நான்கு குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.               காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

2.               யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொலிழுக்குப் பட்டு.

3.              ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

4.              எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.










திருக்குறள் மனனப் போட்டி - 2020
மத்திய பிரிவு

        கீழே கொடுக்கப்பட்ட ஐந்து குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.              வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

2.              தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

3.              ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

4.              ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

5.              நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.






திருக்குறள் மனனப் போட்டி - 2020
மேற்பிரிவு 

கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது.)

1.              பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

பிறருக்குத் துன்பம் தராது நன்மை தருமானால் பொய் கூட வாய்மை என்றே கருதப்படும்.

2.               பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பயனற்ற வீண்பேச்சு பேசித் திரிபவர்களை மனிதன் என்பதைவிட மனிதப் பதர் என்று சொல்வது பொருந்தும்.

3.              தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கல்வி அறிவால் தாம் பெற்ற இன்பத்தால் உலகம் பெறுகின்ற பயனையும் , மகிழ்வையும் கண்டு  அறிவிற் சிறந்த பெரியோர் மேலும் அத்தகைய கல்வியைப் பெற விரும்புவர்.


4.               நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

உள்ளத்தால் நல்லவர்கள் வறுமையால் படுகின்ற துன்பத்தை விடக் கொடுமையானது கல்வி அறிவில்லாதவரிடம் பணம் சேர்ந்திருப்பது.

5.               இடுக்கண் வருங்கால் நகுக, அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

துன்பம் வரும்போது அதனை மகிழ்ச்சியோடு தாங்கிக் கொள்ளவேண்டும்.       ஏனெனில் அதனை அடுத்து வரும் இன்பத்துக்கு நிகரானது வேறில்லை.

6.              குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

நற்குண நற்செயல்களின் குன்றின்மேல் நிற்கும் சான்றோரின் சினத்தை ஒரு கணமேனும் சமாளித்தல் முடியாததாகும்.






திருக்குறள் மனனப் போட்டி - 2020
அதிமேற்பிரிவு 

கீழே கொடுக்கப்பட்ட ஏழு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது.)

1.               நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீர் இல்லையென்றால் எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ முடியாது. மழை இல்லையெனில் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லை என்று ஆகிவிடும்.

2.              வேண்டிய வேண்டியாங் கெய்தலால், செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

தவத்தினால் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே அடைய முடியுமாகையால் செய்வதற்குரிய தவத்தைச் செய்ய இல்லறத்தானும் முன்வரலாம்.

3.                புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை  
வாய்மையால் காணப் படும்.

உடல் தூய்மை தண்ணீரால் பெறப்படுமாயின் உள்ளத் தூய்மை பொய்பேசாத வாய்மையால் கிடைக்கும்.

4.                பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் யாவற்றுள்ளும் தலையாய அறமாகும்.

5.               ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

விதியைப் போல் வலிவுள்ள ஒரு பொருள் உலகில் வேறு இல்லை அவ்விதி மனிதனுடைய முயற்சிகளை எல்லாம் அழித்து தான் ஒன்றே முடிவில் வெல்கிறது.

6.               நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பழகப்பழக நற்பண்பு  உடையவரின் நட்பு இன்பம் தருவது போல, நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பத்தைத் தரும்.

7.              அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினரை முகமலர்ச்சியோடு போற்றுபவனது இல்லத்தில் திருமள் மனது மகிழ்ந்து வாழ்வாள்.






No comments: