இலங்கைச் செய்திகள்


அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் வட மாகாணத்திற்கு விஜயம்

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த.!

வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை

 "முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது" : மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா?

சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் வட மாகாண முதல்வரை சந்தித்தனர்

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

வருகிறது ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை!

முள்ளிக்குளம் மக்களை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள்









அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் வட மாகாணத்திற்கு விஜயம்

06/04/2017 அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ் வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.
வட மாகாணத்தில் அவுஸ்திரேலியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த அமைச்சர் பியரவன்ரி-வெல்ஸ் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டின் பின்னர், வடக்கிலும், கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்விற்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியா வழங்கிய நிதியுதவியில், வீடமைப்பு, உள்ளுர் உட்கட்டமைப்பு நிர்மாணம், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பலதரப்பட்ட பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் என்பனவும் அடங்கியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இரணைமாதா நகரில் உள்ள நண்டுகள் பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் விஜயம் செய்துள்ளார். அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் கூடிய கூட்டு முயற்சியான இது, நண்டுகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், கிராமத்திலுள்ள இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை இது உருவாக்கியுள்ளது.
“ஏற்றுமதியாளர்களுடன் உற்பத்தியாளர்களை நேரடியாக இணைக்கும் இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் அதிக எண்ணிக்கையான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், உயர் தரம் வாய்ந்த தொழில் வாய்ப்புக்;களும் உருவாகியுள்ளன. முக்கியமாக, இதன்மூலம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்கள் கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
வலிகாமம் வடக்கிலுள்ள இடம் பெயர்ந்த குடும்பங்களை அமைச்சர் சந்தித்துள்ளார். இவர்கள் அவுஸ்திரேலிய மற்றும் உலக வங்கியின் ஒரு நிகழ்ச்சியான வடக்கு, கிழக்கு உள்ளுராட்சி மேம்பாட்டு திட்டத்தின் (NநுடுளுஐP) பயனாளிகளாவர். அவுஸ்திரேலியா இத்திட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இத்திட்டம் உட்கட்டமைப்பு சேவைகளான, வீதிகள் புனரமைப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் சந்தைகள் என்பனவற்றை உருவாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் வலையமைப்புகளில் பார்வையிடலாம்.   நன்றி வீரகேசரி 












குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த.!


06/04/2017 மூன்று வருடங்களுக்கான சொத்து தொடர்பான தகவல்களை வௌியிடாத குற்றச்சாட்டு குறித்தான வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2011 , 2012, மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் துமிந்த சில்வாவின் சொத்துகள் தொடர்பான தகவல்கள் வௌியிடப்படவில்லை என தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 














வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை

06/04/2017 உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய அமைச்சர் கொன்சீட்டா ப்யரவான்ரி, வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கொன்சீட்டா ப்யரவான்ரியின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும்.
கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், வட பகுதியில் எவ்வாறான அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பன பற்றியும், மக்களின் வாழ்க்கைக்கான பொறுப்புக் கூறல் போன்ற அம்சங்களை அரசு எவ்வாறு பேணி வருகிறது என்பது பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா வழங்கிவரும் உதவிகள் குறித்து நன்றி தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்செசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி 














 "முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது" : மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா?

05/07/2017 முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது. தமது பூர்வீக நிலத்தை இழுந்து வாழும் மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா? மக்களின் துயரங்களை புரிந்து கொண்டு பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளவர் என்ற வகையில் பிரதமர் பதில் வழங்க வேண்டும்.
முள்ளிக்குளம் காணி தொடர்பில் பிரதமர் அளித்த பதில் பிரதமர் ஒருவர் அளித்த பதில் அல்ல என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான நேரடியான கேள்வி நேரத்தின் போதே பிரதமரிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 











சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் வட மாகாண முதல்வரை சந்தித்தனர்

05/04/2017 சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 













முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

05/04/2017 விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 











வருகிறது ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை!

04/04/2017 எதிர்வரும் ஜுன் மாதம் இறுதியில் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பாவனையில் இருந்து வந்த தேசிய அடையாள அட்டைகை்குப் பதிலாக இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை பாவனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் நபருடைய புகைப்படம், சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகை ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன.
15 வயதிற்கு மேற்பட்ட தனி நபருடைய அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் அவரது குடும்ப விபரங்களையும் திரட்டி ஒரு தேசிய பதிவேட்டின் மூலம் மத்திய தகவல் நிறுவனத்தில் பேணுவதற்கு எண்ணியுள்ளோம்.
இதேவேளை,  பையோ மெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திற்கு ஏற்ப பெறுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் நிறைவடையும்.
இதேவேளை, சர்வதேச தரத்திற்கு ஒத்துப்போகும் வகையில் குறித்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையின் தரம் அமையவுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 












முள்ளிக்குளம் மக்களை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள்

03/04/2017 மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அவர்களை நேரில் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டனர்.
மக்களுடனான சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணி விடுவிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளனர்.
மன்னார்  மாவட்டத்தில் முள்ளிக்குளம் மக்கம் இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்கக்கோரி இன்று 12 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள் குழு அங்கு விஜயம் மேற்கொண்டு மக்களது பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும். தமது காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னரே தாம் போராட்டத்தை கைவிடுவதாகவும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள் நேரில் கேட்டறிந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 










No comments: