தமிழ்த் திரை உலகில் பிரபல நடன ஆசிரியராகத் திகழ்ந்தவர் கே தங்கப்பன்.புதுமை இயக்குனர் ஸ்ரீதர் கலரில் இயக்கி இளைய நடிகர்கள் நடித்து வெற்றி பெற்ற காதலிக்க நேரமில்லை படத்திற்கு இவர் அமைத்த நடன அசைவுகள் இளம் ரசிகர்களை சுண்டி இழுத்தன.அப்படத்தைத் தொடர்ந்து பிசி டான்ஸ் மாஸ்டரானார் தங்கப்பன்.கிறிஸ்துவரான இவர் நாகப்பட்டணத்தில் அமைந்துள்ள அன்னைவேளாங்கண்ணி மாதா மீது கொண்ட பக்தியால் 1971ம் ஆண்டு அன்னையின் அற்புதங்களை விளக்கும் வகையில் அன்னைவேளாங்கண்ணி எனும் படத்தை தயாரித்து இயக்கினார் .அத்துடன் படத்திற்கான கதை,நடனம் இரண்டையும் உருவாக்கியிருந்தார்.
அன்று திரை உலகில் பிரபலமாக இருந்த ஜெமினி கணேசன் , ஜெயலலிதா, சிவகுமார் , பத்மினி , சுந்தரராஜன்,மனோரமா , எஸ் வீ சுப்பையா,நாகேஷ்,சச்சு ,முத்துராமன்,கே ஆர் விஜயா ,ராமாபிரபா ,மாஸ்டர் சேகர் ,தேங்காய் சீனிவாசன் ,தேவிகா ,ஸ்ரீகாந்த் ,ஸ்ரீவித்யா என்று ஏராளமான நடிகர்கள் படத்தில் நடித்தார்கள்.இவர்களுள் பலர் இலவசமாகவோ அல்லது சொற்ப ஊதியத்திலோ இதில் நடித்திருந்தார்கள்.
வண்ணப் படமாக உருவான அன்னைவேளாங்கண்ணி , அன்னையின் மகிமையை விளக்கும் மூன்று கதைகளை கொண்டு தயாரானது.கால் ஊனமுற்ற சிறுவனுக்கு நடக்கும் சக்தியை அன்னையருளிய காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.இதில் சிறுவனாக மாஸ்டர் சேகர் அருமையாக நடித்திருந்தார்.நடக்க இயலாமல் அவர் தரையில் ஊர்ந்து ஊர்ந்து நடப்பது ரசிகர்களை வாட்டியது ,அவரின் தாயாக பத்மினி நடித்தார்.