வாழ்த்துக் கூறுவோம் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்

.

         ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
         கால மதை மாற்றுவோம்
         கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
         கலகலப்பை ஊட்டு வோம்
         அம்மா பாலில் எமக்குதந்த
         அன்னைத் தமிழைப் பாடுவோம்
         அன்னியத்தை அணைத்து நிற்கும்
         அவலம் அதைப் போக்குவோம் !

            கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
            கேளிக்கையை விரட்டு வோம் 
            நாக்கில் இனிமை சொட்டசொட்ட
             நல்ல தமிழைப் பாடுவோம்
            வீட்டில் உள்ள பெரியவரை
            வீழ்ந்து வணங்கி நின்றுமே 
            வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
             வளமாய் தமிழில் பாடுவோம் !

              அப்பா அம்மா அருகணைத்து
              அக மகிழ்ந்து பாடுவோம் 
              அக்கா அண்ணா தம்பியோடு
              அழகு தமிழில் பேசுவோம் 
              பக்குவமாய் இனிப்பு வழங்கி
              பலரும் மகிழப் பாடியே 
              செப்பமாகப் பிறந்த நாளை 
               சிறப்பாய் செய்து மகிழுவோம் !


                ஆங்கிலத்தில் பாடும் பாட்டை
                அகத்தை விட்டு அகற்றுவோம் 
                அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி
                அகம் மகிழச் செய்குவோம் 
                இனிய பிறந்த நாளையென்றும்
                 எங்கள் தமிழால் வாழ்த்துவோம் 
                எங்கள் தமிழின் இனிமையெங்கும்
                 பொங்க வாழ்த்துக் கூறுவோம் !


      வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம் 
      உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம் 
     கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம் 
     கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !

           


                    
           

    
    தமிழால் வாழ்த்துவோம் !

( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) 



அறிவுநிறை தமிழ் கொழுந்தே
     ஆண்டாண்டு வாழியவே
நிறைவுடைய வாழ்வு பெற்று
    நீண்டநாள் வாழியவே !

கனிவுநிறை உள்ளம் கொண்டு
   காலமெல்லாம் வாழியவே
கற்கண்டே கனி அமுதே
   களிப்புடனே வாழியவே !

இனிமைநிறை வாழ்வு பெற்று
  ஏற்றமுடன் வாழியவே
பருவமெலாம் வளம் பெற்று
  பாங்குடனே வாழியவே !

   முத்தமிழே முழு நிலவே 
       சொத்தேநீ வாழியவே
 அர்த்தமுள்ள வாழ்வு வாழ
     அகமார வாழ்த்துகிறோம் !

வசந்தம்நிறை வாழ்வு பெற்று
  வையகத்தில் வாழியவே
வாழ்வெல்லாம் மகிழ்வு கொண்டு
  வாழ்ந்திடுக பல்லாண்டு !

பிறந்தநாள் கொண்டாடும் வேளை இப்படி வாழ்த்தினால் இனிக்குமல்லவா 
       வாழ்த்திப் பாருங்கள்
        வண்ணமாயிருக்கும்

No comments: