உலகச் செய்திகள்

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் - ஒப்பந்தம் கைச்சாத்தானது.

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் - இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயல் இழக்கும் - சிங்கப்பூர் பிரதமர்

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

சூடானில் அகதி முகாம் மீது தாக்குதல் : 20 குழந்தைகள் உள்ளிட்ட 114 பேர் உயிரிழப்பு! 



ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 

19 Apr, 2025 | 10:01 AM

ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 

 இதேவேளை, இந்த தாக்குதலில் இதுவரை 171 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயற்படும் ஹவுத்தி அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின்  சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுத்தி அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.  

இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி   





உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் - ஒப்பந்தம் கைச்சாத்தானது. 

18 Apr, 2025 | 02:42 PM

கனிமவளங்கள் குறித்து அமெரிக்காவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் கனிம வளங்களை பகிர்ந்துகொள்வது குறித்த வரைவு ஒப்பந்தத்தில்  உடன்படிக்கையில் உக்ரைன் கைச்சாத்திட்டுள்ளது என யூலியா ஸ்வைரிடென்கோh தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி உடன்படிக்கையில் உக்ரைனின் மீள்கட்டுமானத்திற்கான முதலீட்டு நிதியமும் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் முழுமையான உடன்படிக்கை சாத்தியமாகலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இத்தாலிய தலைவருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்;ப் இந்த உடன்படிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று( வியாழக்கிழமை) நாங்கள் கனிமவள உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போகின்றோம் என நினைக்கின்றேன்இஎன அவர் தெரிவித்துள்ளார்

இந்த உடன்படிக்கை குறித்து ரொய்ட்டர் மேலதிக விபரங்களை கோரியவேளை வெள்ளை மாளிகைஅவற்றை வழங்க மறுத்துள்ளது.

இந்த உடன்படிக்கை உக்ரைனின் மிக முக்கியமான கனிமங்கள் எண்ணெய் எரிவாயு போன்றவற்றை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும்.

ரஸ்யாவுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை சாத்தியமானால் அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை கோருவதற்கு உக்ரைன் ஜனாதிபதி கனிம வள உடன்படிக்கையை பயன்படுத்த முயல்கின்றார்.

எனினும் வெள்ளை மாளிகையில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் மோதிக்கொண்டதை தொடர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பது மிகவும் சவாலானதாக மாறியது.   நன்றி வீரகேசரி 





அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் - இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயல் இழக்கும் - சிங்கப்பூர் பிரதமர் 

17 Apr, 2025 | 10:38 AM

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும் உணரப்போகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது புதிய வரிகளை ஜூலை வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள போதிலும் அமெரிக்கா பத்து வீத வரிகளை விதித்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர் ஒரு அறிவிப்பின் மூலம் வரிகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்ற நிலையில் எந்த நிறுவனமும் நீண்ட கால முதலீடுகள் குறித்து திட்டமிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை துண்டிக்கும்,என அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருப்பது உலக பொருளாதாரத்தின் மறு உருவாக்கத்தை என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் ஆனால் இது ஒருங்கிணைந்த விதத்தில் இடம்பெறவில்லை மாறாக அமெரிக்கா சீனாவை மையமாக கொண்டதாக காணப்படுகின்றது எனசிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 

15 Apr, 2025 | 12:30 PM

சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது.

கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது.

யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. 

பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்ததுடன் மாற்றங்களை செய்ய வலியுறுத்தியதையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






சூடானில் அகதி முகாம் மீது தாக்குதல் : 20 குழந்தைகள் உள்ளிட்ட 114 பேர் உயிரிழப்பு! 

14 Apr, 2025 | 09:57 AM

சூடானில் உள்ள அகதி முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடானின், தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை இராணுவப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.

இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 2,400 பேர் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.  

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததிலிருந்து 24,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 




No comments: