தை மலர்ந்து வருகவே 14-1-21



.........    பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்




தை பிறக்க வழிபிறக்கும் என்று பொங்கும் தமிழரின் 

கை நிறைத்து வளங் கொழிக்கத் தை மலர்ந்து வருகவே! 

                                    (தைபிறக்க)

                                                     

ஈழம் என்றும் கண்டிராத இறைமை பூண்ட தலைவனின் 

நாழும் கண்ட கனவும் ஒருநாள் நலங் கொழிக்க வருகவே! 

அல்லல் உற்று அலைந் துலைந்து நலிந்த ஈழத் தமிழரின் 

தொல்லை தீர்ந்து சுபிட்ச வாழ்வு தொடரத் தையும் வருகவே! 

                                   (தைபிறக்க)

                                                                                   

வையம் எங்கும் வளர்ந்து மலியும் வன் முறைகள் ஒழிந்து நல் 

ஐயம் அற்ற புனிதமான மனிதநேயம் ஓங்கவே! 

ஓன்றே தெய்வம் இரண்டே சாதி என்றுயர்ந்த இனமதாய் 

மூன்றே பாலில் ஆன மறையை நான்கு திசையும் பரப்பவே

                                   (தைபிறக்க)

                                       


ஐந்து புலனை அடக்கி வெல்ல ஆறு பிறவி போதுமோ? 

எந்த நாளும் இறை வணங்க வந்த வினைகள் தீருமே! 

ஏழு புரவி மீதிற் பரிதி எட்டுத் திசையும் ஒளி தர

மாளும் இருள்போல் மன்னும் இன்னல் வந்து களைய வருகவே! 


ஓன்பதோடு பத்துக் கிரகம் சேர்ந்து நின்று வருத்தினும் 

தெம்பினோடு மனதில் உறுதி செயலில் நேர்மை வெற்றியே! 

நிதமும் உங்கள் மழலைச் செல்வம் இதமாய் அன்னை மொழி பேசச் 

சபதம் பூண்டு தமிழ் வளர்த்துச் சரித்திரம் படைக்கவே! 

                                    (தைபிறக்க)




No comments: