மங்களம்தரும் பொங்கலோ பொங்கல் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
  
முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்  மெல்பேண் ... அவுஸ்திரேலியா 



தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளை களுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியே எண்ணியே பார்ப்பதும் இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலை பொங்கி வருகின்றோம்.நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம்தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கிய மானது என்பதை நாங்கள் அனைவரும் மனதில் இருத்துவது மிகவும்  அவசிய மானதே. 

   புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாற லாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடுகலா சாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடுகலாசாரம்இவற்றினை உணர்த்துவதுதான் எங்களின் விழாக்களும்கொண்டாட்டங்களுமாகும். பண்பாட்டினை நிலை நிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் " தைப்பொங்கல் " எனலாம். எங்கள் பிள்ளைகளை உணரச் செய்தாலே பொங்கல் விழாவானது பூரிப்பான தாகிவிடும். 

  தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப் படுகிறது ?இந்தவிழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன ? இவை யெல்லாம் புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற எங்கள் பிள்ளைகளுக்குச் சரிவரத் தெரியாது. நாங்களும் அதைப்பற்றி விளக்கிச் சொல்லுவதும் கிடையாது. பொங் கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சி யில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும்.

  உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள்உழைப்புக்கு உதவிடும் விலங்குகள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளபடுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதை எங்கள் பிள்ளைகளின் மனதில் இருத்துவதும் முக்கியமான பொறுப்பாகும். இவையாவும் தைப்பொங்கலுடன் இணை கின்றன என்பதுதான் இங்கு சுட்டப்பட வேண்டிய அவசியமான அம்சம் எனலாம். 

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும்.விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப் படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப் படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது.விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப் படுகின்றன.இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழாஎன்பதை நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு விளங்கப் படுத்த வேண்டும்.

   நகரத்தில்புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படும் விவசாயமோ அதன் முறைகளோ அங்கு விலங்குகள் விவசாயத்துக்கு உதவும் விதமோ விவசாயத்துக்குப் பயன் படுத்தப்படும் ஏர் போன்ற கருவிகளோ பற்றியெல்லாம் தெரிவதற்கு உரிய வாய்ப்பு இல்லைத்தான். அவர்களுக்கு அவற்றினைப் பற்றியும் அதன் பயன் பாடுகள் பற்றியும் விளக்கும் பொழுதான் தைப்பொங்கலின் போது செய்யப்படும் மரபார்ந்த விஷயங்களை அவர்களின் மனதில் பதியச் செய்யக் கூடிய தாக இருக்கும். 

   தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் " பொங்கலோ பொங்கல்  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமை யாததாகும்.

   கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசிபால்சர்கரைகரும்புஇஞ்சிமஞ்சள்வாழைமாவிலைவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள்.இவைகள் தைப்பொங்கலில் பயன் படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை என்பதை எங்களின் பிள்ளைகளை உணரச் செய்யவேண்டும்.   

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமாவருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ? 

     பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப் படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம்உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய்கபடுசூதுவாதுஇவற்றையெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம். 

   பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும்பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரைபெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல்போகித்திருநாள்காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம்.மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாப மாகவே இருக்கும். 

   உழைப்பினை மையமாக்கிதொழிலினை மையமாக்கிஅந்தஸ்த்தினை மையமாக்கி அன்னிய நாட்டினில் வாழும் எங்கள் தமிழர்களின் தைப்பொங்கல் சற்று சறுக்கிய தைப்பொங்கலாகவே அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சொந்த ஊரினில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும்  குடியேறிய அன்னிய நாட்டில் தைப்பொங்கல்  கொண்டாடுவதற்கும் வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதில் தமிழர்கள் பின்னிற்கவில்லை என நினைக்கையில் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

   சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் - கிறீஸ்தவராயினும்இந்துக்களாயினும் , தைப்பொங்கலை மகிழ்வுடன் " பொங்கலோ பொங்கல் " என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா ! 

   நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மதபேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !

No comments: