கோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..?


09/12/2019  இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்துப் பேசிய பின்னர், அவ­ருடன் கூட்­டாக உரை­யாற்­றிய, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, மற்­றெல்லா விவ­கா­ரங்கள் குறித்தும் கருத்து வெளி­யிட்ட போதும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தோ, அது சார்ந்த விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்­தையும் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.
அவ­ருக்கு முன்­ன­தாக உரை­யாற்­றி­யி­ருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, “சமத்­துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டை­யி­லான  தமி­ழர்­களின்  அபி­லா­ஷை­களை   நிறை­வேற்றும், நல்­லி­ணக்க  செயல் முறையை  இலங்கை அரசு முன்­னெ­டுத்துச் செல்லும் என்று நம்­பு­கிறேன். 13  ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும்   இதில் அடங்கும்.” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
அதற்குப் பிறகு, உரை­யாற்­றிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, அந்த விடயம் பற்றி எது­வுமே தெரி­யா­தது போல கடந்து சென்­றி­ருந்தார்.



இந்­தியப் பிர­தமர் மோடியும், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் தனி­யா­கவே சந்­திப்பை நடத்­தி­யி­ருந்­தனர் என்­ப­தாலும், அவர்கள் பேசிய விட­யங்கள் என்ன என்­பது பற்­றிய முழு­மை­யான தக­வல்கள் வெளி­யி­டப்­ப­டா­த­தாலும், தமிழர் பிரச்­சினை விவ­கா­ரங்கள் குறித்து சந்­திப்பின் போது பேசப்­பட்­டதா என்­பது தெரி­ய­வில்லை.
ஆனால், கூட்­டாக நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, தமிழ் மக்களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றக் கூடிய  நல்­லி­ணக்க செயல்­முறை பற்றி இந்தியப் பிர­தமர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­துடன், அதில் 13ஆவது திருத்­தச்­சட்டத்தை நடை­முறைப்­ப­டுத்தும் விட­யமும் உள்­ள­டங்கும் என்றும் குறிப்பிட்­டி­ருந்தார்.
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இந்த விட­யத்­துக்கு அந்தச் சந்­தர்ப்­பத்தில் பதி­ல­ளிக்­கா­வி­டினும், மறுநாள் ‘தி ஹிந்து’ நாளி­தழின் ஆசி­ரி­யரும், ராஜபக் ஷ குடும்­பத்­துக்கு நெருக்­க­மான, சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் மக­ளு­மான சுஹா­சினி ஹைத­ருக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில் பதிலளித்திருந்தார்.
13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்றும், மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்க முடி­யாது என்றும் அதில் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். எனினும், மாற்று வாய்ப்­புகள் குறித்து கலந்­து­ரை­யாட முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது, இந்­தி­யா­வுக்கு 13 பிளஸ் என வாக்­கு­று­தியைக் கொடுத்தார். பின்னர் அப்­படி எந்த வாக்­கு­று­தி­யையும் கொடுக்­க­வில்லை என்றும் கூறினார்.
கோத்­தா­பய ராஜபக் ஷ, தேர்­த­லுக்கு முன்­னரும் கூட, 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்றே கூறி­யி­ருந்தார். குறிப்­பாக பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க முடி­யாது என்றும் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார். காணி அதி­கா­ரங்­களைக் கொடுத்தால், அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க முடி­யாது என்றும், பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கொடுத்தால், பாது­காப்பு பிரச்­சினை ஏற்படும் என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.
எனினும், community police போன்ற குறைந்­த­ள­வி­லான பொலிஸ் அதிகாரங்களை வழங்­கு­வது பற்றி ஆராய முடியும் என்றும் அப்­போது அவர் குறிப்பிட்டிருந்தார்.சுஹா­சினி ஹைத­ருக்கு அளித்­துள்ள செவ்­வி­யிலும், மாற்று ஏற்­பா­டுகள் குறித்துப் பேச­மு­டியும் என்று அவர் கூறியி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தியப் பய­ணத்­துக்கு முன்­ன­தாக, இந்­திய ஊட­க­வி­ய­லாளர் நிதின் ஏகோகலேக்கு அளித்­தி­ருந்த செவ்­வி­யிலும் கூட, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு அபிவி­ருத்­தியே தீர்வு என்­பதை ஜனாதிபதி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
அது­போ­லவே, இந்தச் செவ்­வி­யிலும், சிறந்த வாழ்க்கைத் தரத்­தையும், அபி­வி­ருத்­தி­யையும் வழங்­கு­வதே தனது தீர்வு என்று அவர் குறிப்­பிட்­டுள்­ள­துடன், சுதந்­திரம், அர­சியல் உரி­மைகள் என்­பன, ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பில் இருக்­கின்றன என்றும் கூறி­யி­ருக்­கிறார்.
ஆனால், அர­சி­ய­ல­மைப்பில் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில், அளிக்­கப்­பட்­டுள்ள போதும், அந்த அதி­கா­ரங்­களைப் பகிர்ந்த­ளிப்­ப­தற்கு அர­சாங்­கமே தடை­யாக இருக்­கி­றது.
தற்­போ­தைய அர­சி­ய­மைப்பில் குறை­பா­டுகள் உள்­ள­தாக, அதில் தமது உரிமைகள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என, தமக்­கான அதி­கா­ரங்கள் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என தமிழ் மக்கள் உணர்­கி­றார்கள்.  19 ஆவது திருத்­தச்­சட்டம் தோல்விய டைந்து விட்­டது -அது தவ­றா­னது என்றும் அதனை நீக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எவ்­வாறு கரு­து­கி­றாரோ, அது­போ­லவே, அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தினால் தமது உரி­மைகள் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று தமிழ் மக்­களும் உணருகி­றார்கள்.
இவ்­வா­றான நிலையில் தான், கூடுதல் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கைகள் தமிழ் மக்­களால் முன்­வைக்­கப்­படு­கின்­றன  
கூடுதல் அதி­கா­ரங்­களைப் பகி­ரு­வதன் மூலம், தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­ப­டு­வதன் மூலம், பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் மக்­க­ளி­னது எதிர்­பார்ப்பு மாத்­தி­ர­மன்றி, சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் நிலைப்­பா­டாக இருக்கிறது.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும் கூட இத­னையே வலி­யு­றுத்திக் கூறி­யி­ருந்தார். ஆனால், அதி­காரப் பகிர்வு என்ற விட­யத்தை, ஏற்­றுக்­கொள்ளக் கூடிய ஒரு­வ­ராக தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இல்லை என்­பதே உண்மை.அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு, வாழ்க்­தைத்­தரம் ஆகி­ய­வற்றை அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வாக மாற்ற முடியும் என்­பது அவ­ரது நம்­பிக்­கை­யாக இருக்­கி­றது. தான் பிடித்த முய­லுக்கு மூன்று கால் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு அவர் முற்­ப­டு­கிறார்.
அவரைப் பொறுத்­த­வ­ரையில் அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது ஏமாற்றும் கருத்து என்­ப­தா­கவே உள்­ளது. 70 ஆண்­டு­க­ளாக ஆட்­சி­யா­ளர்கள் அளித்து வந்த அதி­கா­ரப்­ப­கிர்வு பற்­றிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்பதையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.
அதற்கும் அப்பால், பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக எதையும் செய்ய முடி­யாது என்றும், பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­பத்­திற்கு மாறாக யாரா­வது ஏதா­வது வாக்­கு­று­தி­ய­ளித்தால் அது பொய் என்றும் கூறியி­ருக்­கிறார்.
பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்ய வேண்டாம், வேலை­வாய்ப்பை வழங்க வேண்டாம் என எந்த சிங்­க­ள­வரும்  தெரிவிக்க மாட்டார். ஆனால் அர­சியல் விவ­கா­ரங்கள் வேறு மாதி­ரி­யா­னவை என்று அவர் கூறி­யுள்­ள­தா­னது, அர­சியல் ரீதி­யான விட­யங்­களில் சிங்­கள மக்கள் விட்டுக் கொடுப்­பு­க­ளுக்கு தயா­ராக இல்லை என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.
பெரும்­பான்மைச் சிங்­கள மக்கள் அபி­வி­ருத்­தியை எதிர்க்­க­வில்லை. அதி­கா­ரப்­ப­கிர்வை எதிர்க்­கி­றார்கள் என்ற அவ­ரது கருத்து, சிங்­கள மக்கள் எதிர்க்­காத எதையும் தான், தமிழ் மக்­க­ளுக்கு கொடுக்க முடியும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.
சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் தான் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு நிலை­யான ஒரு தீர்வை எட்ட முடியும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
அதே­வேளை , சிங்­கள மக்கள் அவ்­வா­றான தீர்வை எதிர்க்­கி­றார்­களா அல்­லது சிங்­கள அர­சி­யல்­வா­திகள் அவ்­வா­றான நிலையை உரு­வாக்­கு­கி­றார்­களா என்ற கேள்வி இருக்­கி­றது.
இந்­த­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் ஜனா­தி­ப­தி­யா­னவர் கோத்­தா­பய ராஜ­பக்ச ஷ அவர் வெற்றி பெறு­வ­தற்­காக, அவரைச் சுற்­றி­யி­ருந்­த­வர்கள்  கையில் எடுத்­தி­ருந்த முக்­கி­ய­மான ஆயுதம் இன­வாதம் தான்.
தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தெற்கில் பரப்­பப்­பட்ட இன­வாதக் கருத்­துக்கள் தான், சிங்­கள மக்கள் மத்­தியில் கோத்­தா­பய ராஜபக் ஷவை சிங்­கள பௌத்த காவ­ல­னாக மாற்­றி­யது. அவ­ருக்கு வெற்றி வாய்ப்­பையும் உரு­வாக்கிக் கொடுத்­தது.
அது­போலத் தான்,  பெரும்­பான்மை சிங்­கள மக்கள் அதி­கா­ரப்­ப­கிர்வை எதிர்க்­கி­றார்கள் என்று கூறி, சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் தான், ஒரு மாய விம்­பத்தை உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றார்கள்.
மஹிந்த ராஜபக் ஷ போன்ற மர­பு­வழி அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மன்றி, கோத்­தா­பய ராஜபக் ஷ போன்ற மர­பு­சாரா அர­சி­யல்­வா­தி­களும் கூட, அந்த நிலைக்கு விதி­வி­லக்­கா­ன­வர்கள் அல்ல.
இந்­தியப் பிர­தமர் மோடி 13 ஆவது திருத்தம் உள்­ளிட்ட நல்­லி­ணக்க செயல்­மு­றை­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்த நிலையில், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, அந்த இடத்­தி­லேயே அது சாத்­தி­யப்­ப­டாது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். அது தான், வெளிப்­ப­டைத்­தன்­மை­யான அர­சியல்.
நடை­முறைச் சாத்­தி­ய­மற்ற வாக்­கு­று­தி­களை கொடுக்­க­மாட்டேன் என்றும், ஒரு வாக்­கு­று­தியை நிறை­வேற்ற முடி­ய­வில்லை எனின், அதனை கூறி­வி­டுவேன் என்றும், கூறியிருக்கும்,  கோத்தாபய ராஜபக் ஷ, இந்தியப் பிரதமருக்கு முன்பாக ஏன், 13 ஆவது திருத்தம் பற்றியோ, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ வெளிப்படைத்தன்மையுடன் பேசத் தவறினார் என்ற கேள்வி வருகிறது.
அதேவேளை , தமிழர் பிரச்சினை விவகாரத்தை இந்தியா மறந்து விடவில்லை என்பதை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியிருக்கிறார். இது தமிழருக்கு சாதகமானதா என்று உறுதியாக கூற முடியாது.
இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாதபடி, இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாதபடி, நடந்து கொண்டால், இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பு வராது என்பது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கணிப்பு.
அந்த முயற்சியில் எந்தளவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்தே, 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களின் மீதான இந்தியாவின் அடுத்தடுத்த நகர்வுகள் அமைந்திருக்கும்.
அதுவரை இந்தியத் தரப்பில் இருந்து எந்த சூடான நகர்வுகளையும் எதிர்பார்ப்பதற்கில்லை."


- கபில் -நன்றி வீரகேசரி 












No comments: