09/12/2019 இந்தியாவிலிருந்து தப்பியோடியவரும் தன்னைத்தானே 'கடவுள்' என்று கூறிக்கொள்பவரும் கடத்தல் மற்றும் பாலியல் சம்பந்தமான வழக்குகளில் தேடப்படுபவருமான நித்தியானந்தா தனக்கு சொந்தமான ஆன்மிகத் தேசமொன்றை உருவாக்கியுள்ளதாக இணைய வழி செய்திகள் கூறுகின்றன.
https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுவதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இணையதளம் 2018 ஒக்டோபர் 21ஆம் திகதி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று இணைய வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 2019 ஒக்டோபர் 10ஆம் திகதி கடைசியாக அந்தத் தளத்தில் பல தகவல்கள் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்தத் தளம் தென் அமெரிக்க நாடான பனாமா நாட்டில் பதியப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் டெக்டாஸ் நகரில் அதன் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு விபரங்கள் வெளியாகியிருக்கும் போதிலும் நித்தியானந்தாவின் கைலாயம் எங்கு அமைந்துள்ளது என்பது தெரியவில்லை.
நித்தியானந்தா தன்னுடைய கைலாயத்தை அநேகமாக தென் அமெரிக்காவில் இருக்கும் ஈகுவடோர் நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவை வாங்கி உருவாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளை, பனாமாவில் இருக்கும் தீவு ஒன்றை அவர் வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
புதிய நாட்டிற்கான இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டு இந்து ஆதி சைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும் இந்தப் புதிய கைலாய பூமி, சாதி, மதம், ஆண், பெண் என்ற பாகுபாடு எதுவுமின்றி எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது என்று அந்த இணையத்தளம் தெரிவிக்கிறது.
புதிய நாட்டு கொடியின் பெயர் 'ரிஷப துவஜா' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் நித்தியானந்தா 'சிவபெருமானாக' நந்தியுடன் தோன்றுகிறார்.
கைலாயம் நாட்டுக்கு கல்வி, கருவூலம், வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைந்துள்ளது. அதற்குப் பிரதமரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
'சனாதன' இந்து தர்மத்திற்குப் புத்துயிரூட்ட பாடுபடும் 'அறிவொளி நாகரீகத் துறை' என்ற ஒரு துறையும் அந்த 'அரசில்' இடம்பெற்றிருக்கிறது.
நித்தியானந்தா தோற்றுவித்திருக்கும் நாட்டில் தர்மப் பொருளியல் நடப்பில் இருக்கும். முதலீட்டு மற்றும் காப்புறுதி வங்கி உருவாக்கப்படும். இணைய நாணயமும் ஏற்றுக்கொள்ளப்படும்.
கைலாயம் நாட்டிற்கு கடவுச்சீட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய புதிய நாட்டை அங்கீகரிக்கும்படி கேட்டு நித்தியானந்தா சார்பில் ஐ.நா அமைப்பிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐ.நாவுக்கு அனுப்பியுள்ள தனது நாட்டை அங்கீகரிக்கும் மனுவில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் தன்னை சுட்டுக் கொல்வதாக பொலிஸார் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார்.
இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும் தன்னை ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினர் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
அதேநேரம் அவரது இணையத்தில் தங்கள் நாட்டைப் பற்றிய குறிப்பு என்ற இடத்தில் 100 மில்லியன் ஆதி சைவர்கள், 2 பில்லியன் இந்துக்கள் தங்கள் மக்கள் தொகை என்றும், ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை தங்கள் நாட்டின் மொழிகள் என்றும், தெற்காசியாவில் உள்ள 56 வேதாந்த தேசங்களை சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் இனக்குழுவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றின் இணைப்புப் பக்கங்களில் பல பதவிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு துறைக்கான பக்கத்திலும் அத்துறையில் பணியாற்ற விண்ணப்பிப்பதற்கு ஒரு இணைப்பும் தரப்பட்டுள்ளது.
யார் இந்த நித்தியானந்தா?
நித்தியானந்தா 1978ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார். ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தாவின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.
இவரின் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவர் அரச பள்ளியிலேயே படித்துள்ளார். அதன் பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் இவர் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராகவே காணப்பட்டுள்ளார். கல்லூரியில் சேர்ந்த முதல் இவரை கல்லூரியில் பார்ப்பதை விட ஆலயங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்ததாம்.
நித்தியானந்தா தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் 1990ஆம் ஆண்டு 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக அைடந்தார்.
பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், பரிவிராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார். பின்னர் இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்ற இவர் இந்தியாவின் எல்லா ஆன்மிக நிறுவனங்களைப் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து அறிந்தார்.
குறிப்பாக, திபெத் வரை சென்ற நித்தியானந்தா இமயமலையில் பல கடுமையான தவநிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி எனும் பேரானந்த நிலையினை ஜனவரி முதலாம் திகதி 2000ஆம் ஆண்டு அடைந்தார்.
தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக பரமஹம்ச நித்தியானந்த தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை 2000 ஆம் ஆண்டில் பெங்களூரில் ஆரம்பித்து வைத்தார். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 50 நாடுகளில் செயற்படுகின்றது.
இவர் தன்னுடைய சீடர்களுக்காக சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். உலகளவில் 10 மில்லியன் பேர் இவரை பின்பற்றுபவர்களாக உள்ளனர். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டார்.
தொடரும் சர்ச்சைகள்
நடிகை ரஞ்சிதாவும் சுவாமி நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த காணொளியை 2010 மார்ச் 2இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் தொடர்ச்சியாய் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் தங்கியிருந்தபோது 21 ஏப்ரல் 2010இல் கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, 2010 ஜூனில் கர்நாடகா, ராமநகரம் மாவட்ட பிடதி என்னும் இடத்தில் அமைந்துள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதன் பீடாதிபதி நித்தியானந்தா மீது இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
2012 ஜூனில் தனது ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளரைத் தாக்கியமைக்கான அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சதானந்த கவுடா ஆசிரமத்தை மூடுவதற்கு உத்தரவிட்டார். நித்தியானந்தா தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில் நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். நித்தியானந்தாவுக்கு அதேயாண்டு ஜுன் 4இல் பிணை வழங்கப்பட்ட நிலையில் பொது அமைதிக்கு ஆபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தாவுக்கு மீண்டும் பிணை கிடைக்கவும் அங்கிருந்து வெளியேறினார். அதன் பின்னர் எங்கு வசிக்கின்றார் என்ற விடயங்கள் வெளியாகாத நிலைமையே நீடித்தது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தங்களது இரண்டு மகள்களையும் நித்தியானந்தா கடத்தி வைத்திருப்பதாகவும், மீட்டுத் தரவேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.
இந்தப் பெண்கள் இருவரும் அஹமதாபாத் ஆசிரமத்தில் இருந்தனர். இவர்களும் நித்தியானந்தாவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழக தம்பதிகள் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் பொலிஸார் நித்தியானந்தா மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர் .
நாட்டை விட்டு வெளியேறியது எப்படி?
அவர் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையிலிருந்த நித்தியானந்தாவின் கடவுச்சீட்டும் காலாவதியாகியுள்ளது. அப்படி இருக்கும்போது எவ்வாறு வெளிநாட்டிற்கு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது.
எனினும் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஈக்குவடோர் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்தர்களுடன் தங்கியுள்ளதாகவும் அதனருகில் உள்ள தீவை தனிநாட்டை நிறுவும் நோக்குடன் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் தீவு வாங்கலாமா என்று கேள்வி எழுகின்றபோது அதற்கும் சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர். ஆம், பெமா சட்டத்தின் பிரகாரம் அதற்கான அனுமதி உள்ளது. ஆனால் அதற்கான வரி மட்டுமே அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
திடீர் அறிவிப்பு
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நேரலையில் திடீரென்று தோன்றிய நித்தியானந்தா, "நான் தினமும் திருவண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இணையத்தில் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்தியாவில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து ஜீவ சமாதி வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்.
அப்போது நான் மூன்று கண், இல்லை இரண்டு கண் இல்லை ஒற்றை கண் மூலமாகப் பார்க்கப் போகிறேன். அதை அந்த இறைவனே முடிவு பண்ணட்டும். நான் பெற்ற கல்வி, ஞான அறிவு பெருமான் கொடுத்தது. இன்னும் பெருமான் கொடுத்த, கொடுக்கிற, கொடுக்கப்போகிற நன்மைகளை மக்களுக்குக் கொடுப்பேன்.
என் வாழ்க்கையில் திருவண்ணாமலை குரு பரம்பரை, காஞ்சிபுரம் குரு பரம்பரை, மதுரை பரம்பரை உதவியாக இருந்துள்ளன. பக்தர்கள் கொடுக்கும் பணம் இந்தியாவின் நன்மைக்கும் குருபரம்பரை நன்மைக்கும் பயன்படும். அன்றும் இன்றும் ஒரு கப் தயிர்சாதம்தான் சாப்பிடுகிறேன்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் அய்யா இருக்கிறார். திருவண்ணாமலையில் வாழ்ந்த நாராயணசாமி சாப்பிடாமல் மலை உச்சியில் சித்தராக வாழ்ந்தார். அந்த ஞானத்தைத்தான் இப்போது நான் உலகிற்குக் கொடுக்கிறேன்" என்று கூறி முடித்துள்ளார்.
ஆக, நித்தியானந்தாவின் சர்ச்சைகள் மட்டுமே இந்தியாவுக்கு தலையிடியாக இருந்த நிலையில், தற்போது தனிநாட்டு அறிவிப்பு உலகளவில் தலையிடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும், நித்தியானந்தாவின் அடுத்தகட்ட பிரதிபலிப்பினையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment