ஈரடியால் இருள் களைந்தான்! --கவிஞர் க. கணேசலிங்கம்

.
வாழ்வியல்  நெறிகளை  வண்தமி  ழாக்கியெம்
வாழ்வை  உயர்த்தவந்தான்!  - வையத்
தாழ்வை  அகற்றவந்தான்!
நீள்கவி  ஏதுமில்  லாதுஈர்  அடிகளில்
நிறைவுறு  பொருளுரைத்தான்!  - திருக்
குறளினில்  பலவுரைத்தான்!

அகத்தழுக்  கிலையெனில்  அதுஅனைத்  தறம்என
அரியதோர்  கருத்துரைத்தான்! - அறம்
பெரிதென  எடுத்துரைத்தான்!
இகத்தெழு  வாழ்வினை  எழிலுற  வாழ்பவர்
இங்குவிண்  காண்பரென்றான்! - எழில்
பொங்கிடக்  காண்பரென்றான்!

ஊழ்வலி  தென்றவன்  ஊழையும்  வென்றிட 
உழைப்பினை  ஊக்குவித்தான்! - மனக்
களைப்பினைப்  போக்குவித்தான்!
வாழ்புவி  பண்புடை  யார்களி  னாற்றான்
வாழ்ந்திடும்;  பண்பிலையேல் -  அது
வீழ்ந்துமண்  ணாகுமென்றான்!

அன்பினைப்  போற்றிய  வள்ளுவன்  அன்பினை
அறத்திற்கு  மட்டுமல்ல  -  அது
மறத்திற்கும்  ஓட்டுமென்றான்!
இன்பமே  நன்றெனக்  கொள்பவர்  துன்பத்திற்(கு)
ஏன்துயர்  கொள்ளலென்றான்! - உயர்
வானசிந்  தனையளித்தான்!

இல்லற  மாட்சியை  நல்லர  சாட்சியை
ஈகையை  வீரத்தினை  - உயிர்
ஆகிய  மானத்தினை
நல்லொழுக்  கத்தினைக்  காதலை  என்றுபல்
நலங்களை  எடுத்துரைத்தான்! - இந்த
நிலம்நிலைத்  திடவுரைத்தான்!

வாழ்வியற்  கூறுகள்  யாவையும்  தொட்டவை
வளம்பெறும்  வழியமைத்தான்!  - இருள்
கலைந்தொளிர்  புவிபடைத்தான்!
நாழிலும்  பொழுதிலும்  நாம்குறள்  போற்றிடின்
நன்மைகள்  கூடிவிடும்!  - வரும்
புன்மைகள்  ஓடிவிடும்!

தெள்ளிய  திருக்குறள்  நெறிகளில்  ஆழ்ந்தவை
தேர்ந்துபின்  பரப்பிடுவோம்! - அவை
ஓர்ந்தறம்  உணர்த்திடுவோம்!
வள்ளுவன்  வாழ்ந்தமண்  வான்புகழ்  கொண்டது!
வண்தமிழ்  ஓங்கிவிடும்! - புவி
பண்பினை  ஒம்பிவிடும்!


No comments: