நிம்மதி வெளிச்சம் நிச்சயம் தெரியும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




உயர்வும் தாழ்வும் ஒருவழி நில்லா
சுழலும் உலகில் சுற்றியே நிக்கும்
நரகம் சொர்க்கம் தூரவே இல்லை
நம்முடை எண்ணம் அனைத்தையும் நல்கும் ! 

தேவரும் அசுரரும் தேடிட வேண்டாம்
இருவரும் எழுவது எம் அகமாகும்
ஆவேசம் எழுந்தால் அசுரராய் ஆவோம்
அமைதியாய் இருந்தால் தேவராய் தெரிவோம்  !

ஆசை என்பதே அவலத்தை அளிக்கும்
ஆசையை அறுத்தால் ஆனந்தம் பெருகும்
ஆசை அகன்றால் அகமது சிறக்கும்
ஆசை மறந்தால் அருளொளி தெரியும்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் உண்டு
உணர்ந்திடும் வரைக்கும் ஒன்றுமே தெரியா
தெரிந்திட நாளும் அலைந்திட வேண்டும்
தெளிவது வந்தால் தெரிசனம் நிகழும் ! 

ஐம்புல வலையை அறுத்திட வேண்டும்
அஞ்செழுத் ததனை அமர்த்திட வேண்டும்
நெஞ்சத்தில் பரம்பொருள் நிறுத்திட வேண்டும்
நிம்மதி வெளிச்சம் நிச்சயம் தெரியும் ! 

No comments: