காமமெனும் பெருநெருப்பு

காசுவெனும் போதையது
கருணையினை ஒதுக்கிறது
வீதிதோறும் மதுவெண்ணம்
விரிவாகிப் பெருகிறது
நீதிசொல வந்தாலும்
நெருக்குவாரம் பெருகிறது !
மலர்வனங்கள் நிலையிழந்து
வரட்சிவரப் பாக்கிறது
வண்டெல்லாம் தேனெடுக்க
வகையறியா திகைக்கிறது
உளமதினில் நல்லுணர்வு
ஊற்றெடுக்க மறுக்கிறது
வளமிழந்து வாழ்ந்திடவா
மாநிலத்தில் பிறந்திட்டோம் !
மேகமது கறுத்தாலும்
வில்லங்கம் தருவதில்லை
விண்மீன்கள் மண்ணதனை
வெறுத்துவிட நினைப்பதில்லை
கோபதாபம் அத்தனையும்
குத்தகைக்கு எடுத்தபடி
குறைபேசும் மானிடரே
குவலயத்தைக் குலைக்கின்றார் !
மண்ணிருந்து எழுச்சியுடன்
விண்ணெழுந்து வியப்படைய
எண்ணமதை உரமாக்கி
எம்சிறகை விரித்திடுவோம்
கண்ணழகு தெரியாமல்
கழித்துவிட்ட காலமதை
கண்ணோட்ட மெனுமழகால்
கண்டுவிடல் கண்ணியமே !
No comments:
Post a Comment