02/01/2020 புத்தாண்டுப் பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது புதியதொரு தேசத்தை கட்டியெழுப்பும் ‘‘சுபீட்சத்தின் நோக்கு’’ செயற்றிட்டத்தை இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பொருளாதாரம், அரசியல், சமூக, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்நாட்டில் மலரவேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம் ‘‘ சுபீட்சத்தின் ஆண்டாக’’ ஆக்கும் திட உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் கூறியிருக்கின்றார்.
இதனைவிட நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே இந்த புதிய அரசாங்கமாகும். மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப்போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார்.
இதேபோன்றே பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஆர்வத்துடன் செயலாற்றும் இளைஞர் சந்ததியினரும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சமான தேசமொன்றை கட்டியெழுப்பும் வரை ஓய்ந்துவிடமாட்டார்கள். புதுவருடத்தின் பிறப்புடன் நாம் 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் காலடி எடுத்துவைக்கின்றோம். மிகப்பெரிய மக்கள் ஆணையுடன் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு பின்புலத்திலேயே இலங்கை இவ்வாறு புதிய தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. அதனுடன் இணைந்து புதிய அமைச்சரவை நிறுவப்பட்டு தற்போது அது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்துடன் புதிய இலங்கை தொடர்பான எதிர்பார்ப்பு எமது இளம் சந்ததியினர் மத்தியில் பரவிக்காணப்படுகின்றது என்று தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையின மக்களின் பேராதரவைப் பெற்று புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெரும்பான்மை மக்களின் வாக்குக்களில் தான் தெரிவு செய்யப்பட்ட போதிலும் சகல மக்களுக்கும் ஜனாதிபதியாக செயற்படுவேன் என்று அவர் பல தடவைகள் உறுதியளித்துள்ளார். அதற்கிணங்கவே புதுவருட வாழ்த்து செய்தியிலும் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவேன் என்று அவர் மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கின்றார்.
புதிய ஜனாதிபதியும் இடைக்கால அரசாங்கமும் பதவியேற்றுள்ளதையடுத்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜ
பக் ஷவின் செயற்பாடுகள் பொதுவாகவே மக்கள் மத்தியில் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கின்றது.
சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளும் இடைக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் இன்னமும் அவர்கள் மத்தியில் பூரண திருப்தியினை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகின்றது. ஏனெனில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் புதிய ஜனாதிபதியும் இடைக்கால அரசாங்கமும் உறுதியான நிலைப்பாடுகளை இன்னமும் முன்வைக்கவில்லை.
சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென்றும் தமிழ் மக்கள் தமது அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும் எதிர்பார்த்துள்ளனர். இந்த எதிர்பார்ப்பினை நோக்காக கொண்டே கடந்த பல தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது ஆணையினை வழங்கி வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட தமது பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்படவேண்டும். தமது அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே தமிழ் மக்கள் உறுதியான தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள்.
தற்போதைய நிலையில் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுமா? அல்லது அதற்கு பாதகமான நிலைமை ஏற்படுமா என்று தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் சிந்தித்து வருகின்றனர். தற்போது தேசிய கீத விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை இதற்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றது.
அதிகாரப்பகிர்வு தொடர்பிலேயோ சமஷ்டி தீர்வு குறித்தோ பேசுவதில் பயனில்லை என்றும் பெரும்பான்மையின மக்கள் விரும்பாத எந்த விடயத்தையும் நடைமுறைப்படுத்துவதில் சாத்தியமில்லை எனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார். 13 ஆவது திருத்த சட்டம் நடைமுறையில் உள்ளபோதிலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது என்பது தொடர்பிலும் சாதகமான நிலைப்பாட்டை அவர் தெரிவிக்கவில்லை. அபிவிருத்தியின் மூலமே இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இவ்வாறான நிலைமையானது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாது நாட்டில் நல்லிணக்கத்தையோ, அபிவிருத்தியையோ ஏற்படுத்த முடியுமா என்ற விடயம் குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அஹிம்சாவழியிலும் ஆயுத வழியிலும் போராடிய மக்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடந்த ஒரு தசாப்தகாலமாக மீண்டும் ஜனநாயக ரீதியில் போராடுகின்றனர். இந்த நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அன்று எதிரணியாக செயற்பட்டவர்கள் அந்த முயற்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். இதனால் அந்த நடவடிக்கையினை துரிதகதியில் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
தற்போது புதிய ஜனாதிபதி, இடைக்கால அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் அதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் புத்தாண்டு பிறந்திருக்கிறது. புத்தாண்டில் சுபீட்சத்தின் நோக்கு செயற்றிட்டத்தை நோக்கி அரசாங்கம் செல்லும் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
இவ்வாறான சுபீட்சத்தை நோக்கி செல்ல வேண்டுமானால் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டதால் சிறுபான்மையினரது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. சகல பகுதிகளிலும் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுவிடலாம் என்று கருதுவது தவறானது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
தமிழ் மக்கள் பிரிவினையைக் கோரவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் பெரும்பான்மையின மக்களுடன் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலையே கோரி நிற்கின்றனர். எனவே இந்த விடயத்தில் புதிய அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். பெரும்பான்மையின மக்களின் மனங்களை வென்றுள்ள இந்த அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் மனங்களையும் வெற்றிகொள்வதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாட்டினை சுபீட்சப்பாதையில் கொண்டுசெல்ல முடியும்.
இல்லையேல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லாது போகும். அத்துடன் முரண்பாடுகள் தொடரும் நிலை உருவாகும். எனவே ஜனாதிபதியின் ‘‘சுபீட்சத்தின் நோக்கு’’ செயற்றிட்டம் இலகுபடுத்தப்படவேண்டுமானால் சிறுபான்மையின மக்களின் மனங்கள் வெல்லப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(02.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment