கருவளரக் காரணமாய் காதலினைப் பரிசாக்கி
பிள்ளைதனைப் பெற்றெடுத்து பெருவிருந்து கொடுத்தாலும்
வேறொருபால் மனம்நாடல் விளையாட்டாய் அமைகிறதே !
நம்பிவந்த பெண்ணவளை நம்பவைத்து நம்பவைத்து
நயவுரைகள் சொல்லியவள் நரம்பெல்லாம் உணர்வேற்றி
இவ்வுலகில் நீயின்றேல் என்றுமே வாழேனென்று
பொய்யுரைத்து பொய்யுரைத்து போக்குகின்றார் பலரிப்போ !
காவியத்து நாயகர்கள் காதலுரை பகர்வதுவும்
காவியத்து நாயகிகள் கண்ணீரில் மிதப்பதுவும்
காவியத்தில் கண்டுவிட்டு காவியத்தை பாராட்டி
காவியத்தை வியந்தெழுதி காட்டிடுவோம் புலமைதனை !
வெள்ளித்திரை நாயகர்கள் விதம்விதமாய் ஏமாற்றி
கள்ளத்தனம் செய்வதையும் கண்கொட்டா பார்த்துநிற்போம்
உள்ளமதில் அவர்நடிப்பை உவந்தேற்றி பாராட்டி
கள்ளத்தனம் காட்டியதை கருத்தைவிட்டே அகற்றிநிற்போம் !
உண்மையிலே நடக்கின்ற ஒழுக்கமற்ற செயல்கள்தமை
செய்கின்றார் முகத்திரையை கிழித்தெறிந்து விடல்வேண்டும்
பெண்மைதனை சீரழிக்கும் பேய்க்குணத்தைக் கொண்டாரை
கண்ணெதிரே நிறுத்திவைத்து கயமைதனைக் களையவேண்டும் !
பெற்றவளும் பெண்தானே பேணிநிற்கும் சகோதரியும் பெண்தானே
நற்றெய்வம் பெண்தானே என்பதையும் மறந்துவிட்டார்
குற்றமது செய்கின்றோம் எனுமுணர்வை அறுத்துவிட்டார்
குற்றமதை இடித்துரைத்து குறைகளைவோம் வாருங்கள் !
No comments:
Post a Comment