வாழ்த்துகள் வழங்கவேண்டும் !எம். ஜெயராமசர்மா.... மெல்பேண்

.
  

     உள்ளத்தில் உவகைவந்தால்
     உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்
     கள்ளங்கள் நிறைந்துவிட்டால்
     கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்
     நல்லதை நாடிநின்றால்
     நம்மிடம் சொர்க்கமாகும்
     அல்லவை தவிர்த்தால்வாழ்வு
     ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !

      மற்றவர் உன்னைப்பார்த்து
      மனவெறுப் படையாவண்ணம்
      சொற்களை எந்தநாளும்
      சுவைபடப் பேசவேண்டும்
      கற்பன கற்கவேண்டும்
      கவனத்தில் கொள்ளல்வேண்டும்
      அற்பங்கள் அகற்றிநின்று
      அன்பையே பகிர்தல்வேண்டும் !

      சிரிப்பினைப் பேணவேண்டும்
      சிறப்பினை நாடவேண்டும்
      பொறுப்புடன் நல்லவற்றை
      போற்றியே நிற்றல்வேண்டும் 
      செருக்கினை ஒதுக்கவேண்டும்
      சினமதை ஒழித்தல்வேண்டும்
      அடுத்தவர் மகிழ்ச்சிபார்த்து
      ஆனந்தம் அடைவாயென்றும் !

       வாழ்த்துகள் வழங்கவேண்டும்
       மகிழ்ச்சியைப் பெருக்கவேண்டும்
      ஆத்திரம் அடக்கவேண்டும்
      அன்பினை அளிக்கவேண்டும் 
       வேற்றுமை தவிர்க்கவேண்டும்
       விருப்பமாய் பழகல்வேண்டும்
       சாற்றிடும் சொற்கள்யாவும்
       சந்தோஷம் தருதல்வேண்டும் !