வாலறுந்த பட்டங்கள்

                                xxxxx  கனகேஸ் நடராஜா xxxxx


பாடசாலை ஒன்றில் பகல் பொழுதில்

பருவ மங்கையர் நால்வரைச் (இலங்கையரல்லாத) சந்தித்தேன்

பலதையும் பத்தையும் பற்றி உரையாடினோம்

ஒழிவு மறைவு இன்றி, வெட்கம், நாணம் இன்றி

ஒவ்வொருத்தியும் தங்கள் தங்கள் எதிர்கால நோக்கம் பற்றி கூறினர்.

முதலவள் கூறினாள் “எனக்குக் குழந்தைகள் வேண்டும்,

ஆனால் கணவன் வேண்டவே வேண்டாம்” அடுத்தவள்

பகர்ந்தாள்.“கனடா என்பது பல நாட்டு மக்களும் வாழும்

பரந்த நாடு பலருடன் கூடிப் பல சாதிக் குழந்தைகளைப்

பெறுவதே என் எதிர்கால “நோக்கம்” என்றாள்.

மூன்றமவள் கூறினாள் “எனக்குக் கணவனும் வேண்டாம்,

குழந்தைகளும் வேண்டாம், ஆனால் எனக்கு “செக்ஸ் (sex)

வேண்டும் என்றாள்.

நான்காமவள் என்ன வெடிகுண்டை என் தலையில்

போடப் போகிறாளோ எனப் பயந்தேன்.

பயந்தது பொய்க்கவில்லை. “இப்போது என்னுள் ஒரு

குழந்தை வளர்கிறது: அதனைக் கலைப்பதா? விடுவதா?

இதுவே எனது பிரச்சனை” என்றாள்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்கினி சாட்சியாக

அவன் கட்டிய மாங்கல்யம் அவள் கழுத்தில் ஏறிய

பின் தான் எங்கள் பெண்கள் தாயாக முடியும்

இதுவே எங்கள் நாட்டுப் பண்பாடு” என்றேன்.

“சிலி (Silly) என்று சொல்லிச் சிரித்தனர் நால்வரும்.

இல்லறம் என்ற நல்லறத்தை இனிது நடத்தாமல்

ஈன்றெடுத்த குழந்தைகளுக்கு இந்நாட்டில்

இருக்கும் மதிப்பும் வசதிகளும் உங்களுக்குத் தெரியுமா?”

என்றாள் ஒருத்தி. சிங்கிள் பேரன்ராக (single parent)

இருந்து விட்டால் நோ புறப்பளம் (No problem)

என்றாள் இன்னெருத்தி. “ஒருவனுக்கு ஒருத்தி என்று

வாழும் உங்கள் சமூகத்திற்கு எங்கே விளங்கப்

போகிறது எங்கள் சுதந்திரப் போக்கு” என்றாள் மற்றொருத்தி.

“சிவ சிவ” என்று தலையில் அடித்துக் கொண்டேன்.

பெண்களா அல்லது பேய்களா இவை என்று பேதலித்தேன்

வாலறுந்த இந்தப் பட்டங்கள் வாழ்க்கையென்னும்

வானத்தில் பறக்க மாட்டா, குத்துக்கரணம் தான்

போடப்போகின்றன.

எங்கள் பண்பாடுகள், எங்கள் பழக்க வழக்கங்கள்

என்னும் வால்களைக் கட்டி விடுவோம். எங்கள்

பட்டங்கள் வாழ்க்கை என்னும் வானத்தில்

உயர உயரப்பறக்கட்டும். பறப்பது மாத்திரமல்ல

எங்கள் பண்புகளைப் பறைசாற்றிக் கொண்டு,

“விண்” கூவிக் கொண்டு பறக்கட்டும்.







No comments: