அன்புவெனும் ஊற்றெழுந்தால் ஆனந்தம் பெருக்கெடுக்கும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா


மறைவாகப் பேசுவதும்
குறை கூறிப் பேசுவதும்
மாண்பற்ற செயலென்று 

மனமிருத்தல் அவசியமே
கண்டவுடன் கைகூப்பி 
களிப்புடனே பேசிவிட்டு
சென்றபின்பு புறம்பேசல்
சிந்தைவிட்டு அகற்றிடுவோம் !


அகமிருந்து அன்பெழுந்து
அணைத்திடலே அறமாகும்
அகமுறையும் ஆணவத்தை
அகற்றிடலே முறையாகும்
கறைகொண்ட எண்ணமதை
கழற்றிடலே சிறப்பாகும்
நிறைவான நினைப்புகளை
நெஞ்சமதில் இருத்திடுவோம் !


இயன்றவரை இன்சொல்லை

எவ்விடமும் பேசிடுவோம்
ஏற்பில்லா வார்த்தைகளை
எங்குரைக்கா இருந்திடுவோம்
பூச்சொரியும் சோலைகளாய்
பொலிவுபெற நாமுரைத்தால்
வாட்டமெலாம் பறந்தோடி
வசந்தமங்கே வீசிநிற்கும் !


அணைகடந்த வெள்ளமாய்
ஆகிவிடல் நலம்பயக்கா
ஆறுதலாய் பயனளிக்கும்
ஆறெனவே ஆகிடுவோம்
ஆரவாரம் அதிகாரம்
அனைத்தையுமே அகிற்றிவிடும்
அன்புவெனும் ஊற்றெழுந்தால்
ஆனந்தம் பெருக்கெடுக்கும்  !









No comments: