ஒன்றுமில்லாத வெற்றிடமாய் - -நிவேதா உதயன்

.
ஒன்றுமில்லாத வெற்றிடமாய்
ஓலமிடுகிறது மனம்
ஓய்வே இன்றி 
ஒருமுகப்படுத்தமுடியாது
ஓதல்கள் செவிகளை நிறைக்க

வார்த்தைகளின் வடிவமைப்பில்லா
கோர்வைகளில் நிதம்
கொலைக்கருவிகளின்
கூர்தீட்டல்கள் எனை
குற்றாமல் குற்றி வதைத்தபடி

இலக்குகள் அற்று எல்லாம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
எதிர் திசைகளை ஈர்த்தபடி
எதிரி கைகளில் அகப்பட்ட
எதிர்ப்பே இல்லாக் கைதிபோல்


மனம் எட்டும் தீர்மானங்கள்
மற்றவர் மனதின் சூழ்வினைகளாய்
மார்க்கமேதுமற்று மடிந்துபோக
நிர்க்கதியாகி நிற்கும் மரம் போல்
இலைகள் உதிர்த்து வேர்கருக

வேதனையின் வரம்பு தாண்டி
வெம்பித் துடிக்கும் மனதை
வரவேற்பார் யாருமின்றி
வனாந்தரத்தின் வெளிகளில்
வெடிப்புக்கள் ஊடே
வேகும் கால் பதிய நடக்கின்றேன்

poongkaadu.blogspot

No comments: