செத்ததறிவானோ ? --இரா எட்வின்



.
முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?

முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?

போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது

“ யாரு பெத்த புள்ளையோ...”

 வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி

எங்க போயிட்டிருந்தானோ?
தேம்புகிறாள்
இன்னொரு தாய்

“ இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”



புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டிமகள்

“ அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்குத் தெரியுமா
மொதல்ல”

ஆமாம்
தான்
செத்ததறிவானா
செத்தவன்?

விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள

பேருந்து நிற்கும் வரை
நேரமில்லை
குதித்தோடுகிறான்

போகிற
பேருந்தைப்
பிடிக்க.

Nantri:eraaedwin.com

No comments: