தந்தையர் தினம் - செ. பாஸ்கரன்

.


காத்திருந்து
தந்தை கண் விழிக்கும் போதினிலே
Bed காபி தந்து
ஹாப்பி பாதேஸ் டே
என்று பிள்ளைகள்
குரல் தரும் போது
எல்லாம் மறைந்துவிடும்
துயரம் கவலை
மனதை விட்டு அகன்றுவிடும்
சோம்பிக் கிடந்த மனது - இப்போ
வீணை இசை மீட்டும்
பிள்ளைகளை அருகிழுத்து
கட்டி அணைக்கயிலே
தந்தை மனம்
வானவெளியில் சிறகடிக்கும்

நாமும் தந்தையர் தினம்
பார்த்திருக்கிறோம்
இல்லாத தந்தைக்கு
நிலவொளிந்து
வானம் கறுத்திருந்த
அமாவாசை நாளொன்றில்
சாதம் படைத்து
காக்கைகளை வரவழைத்து
சோகம் சுமந்த நெஞ்சோடு
நம் தந்தையர் தினம்
வந்துபோன நாட்கள்
நினைவில் வருகிறது



வாழும்போது
செய்யாத சடங்குகளும்
வகை வகையாய்
படையல்களும்
இறந்துவிட்ட
தந்தையர்க்கு

நாமோ வாழும் போதே
வாழ்த்தப்படும் தந்தையர்கள்
குழந்தைகளின் வாய் மொழியில்
வாழ்த்தப்படும் தந்தையர்கள்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
இன்று நமக்காய்
ஒரு தந்தையர் தினம்.

01.09.2013