…………… பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
இயற்கை அழிவு - சுனாமி
இயற்கைநீ சீற்றங்கொண் டெழுந்திட்டால் இப்படியா?
தயக்கமேதும் இன்றிநீயும் தந்தபேரழி வும்என்னே!
(இயற்கை)
மயக்கவைக்கும் அழகிலென்றும் மனதைப்பறி கொடுத்துநின்று
நயப்பிலின்பம் கொண்டவரை நடுநடுங்கச் செய்ததேனோ?
(இயற்கை)
இறைவனை உன்னிற்கண்டு இன்புற்றோர் எத்தனையோ?
நிறைவோடுன் எழில்தன்னை வரைந்தவர்கள் தான்குறைவோ?
குறையென்று ஏதுவைத்தோம் முறையின்றி நடந்திட்டாயே!
கறைபட்டு நின்றிடவா கடிதினிலே சுனாமியானாய்?
(இயற்கை)
சித்தத்தைச் சிவமாக்கும் திருமறையும் பாடலையா?
புத்தரவர் போதனையைக் கற்றபின்பு மறந்ததற்கா?
கர்த்தருக்குச் செபஞ்சொலிக் கனஞ்செய்யா திருந்தோமா?
மொத்தமாகக் குறான்தன்னை முறையாக ஓதலையா?
(இயற்கை)
கரையெங்கும் நுரைபொங்க நீர்சிந்தும் கடலலைகள்
காதலரை மகிழ்வித்துப் போதையேற்றும் மென்னலைகள் விரைவினிலே வேகமுற்று விசுவரூப சுனாமியாகி
தரைதனிலே மனிதவேட்டை ஆடிநின்ற மாயமென்ன?
(இயற்கை)
சாதிமத பேதம்போகச் சாவுமணி அடிப்பதற்கா?
சண்டைசச் சரவின்றிச் சமாதானம் மலர்வதற்கா?
நீதியறம் காத்துநாட்டை நெறிவழியில் நடத்திடவா?
நிலைத்துவளர் அதமத்தினைக் அழிக்கத்தரும் பாடமிதா?
(இயற்கை)
No comments:
Post a Comment