காலம் கடந்த ஞானம்...!


ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்கத்தரப்­பினர் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­ப­தையே பிர­தான நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தாக அளித்த உறு­தி­மொ­ழிக்கு அமை­வா­கவே 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரித்து வெற்றி பெறச் செய்­தது. 
ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து ஓர் அரச நிர்­வா­கத்தில் இணைந்­தி­ருந்த ஓர் அரி­தான சந்­தர்ப்­பத்தின் மூலம் புரை­யோ­டிப்­போ­யுள்ள தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்­கையைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்­களும் அந்த நிலைப்­பாட்டின் நியா­யத்­தையும் அவ­சி­யத்­தையும் உணர்ந்து கொண்­டி­ருந்­தனர்.     






ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் எந்த நோக்­கத்­துக்­காக உரு­வா­கி­யதோ அந்த நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்­காகக் கொண்­டி­ருந்த முயற்­சி­க­ளுக்­கான அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஒரு கட்­டத்தின் பின்னர் தளர்ச்­சியும் அக்­க­றை­யற்ற போக்கும் இரு கட்­சி­க­ளுக்கும் ஏற்­பட்­டதன் விளை­வாக அந்த முயற்­சிகள் தாம­தப்­பட்டு பின்னர் கிடப்பில் போடப்­ப­டு­கின்ற நிலை­மைக்கு ஆளா­கின. ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் தலைமை நிலையில் ஏற்­பட்ட அதி­காரப் போட்டி தீவி­ர­மாகத் தலை­யெ­டுத்­த­தனால் நாட்டின் அர­சியல் உறு­தி­யற்ற நிலை­மைக்குள் வலிந்து தள்­ளப்­பட்­டது.
இத்­த­கைய ஒரு பின்­பு­லத்தில் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் தமிழ் மக்­களும் என்ன செய்யப் போகின்­றார்கள் என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் இந்து நாளி­த­ழுக்கு அளித்­துள்ள நேர்­கா­ணலில் முக்­கிய விட­யங்­களை வெளிப்­ப­டுத்தி உள்ளார். 
அவ­ரு­டைய கருத்­துக்கள் தமிழ் மக்­களின் மனங்­களைப் படம் பிடித்துக் காட்ட முயன்­றுள்­ள­துடன், தமிழர் தரப்பு அர­சி­யலின் யதார்த்­தத்­தையும் வெளிப்­ப­டுத்தி உள்­ளன.
இரண்டு தட­வைகள் திசை­மா­றிய மைத்­திரி
நல்­லாட்சி அர­சாங்கம் தொடக்­கத்தில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­விட்டு அதனை நிறை­வேற்­று­வ­தாகப் போக்குக் காட்டி ஏமாற்­றி­ய­தனால், தமிழ் மக்கள் அதி­ருப்­தியும் ஏமாற்­றமும் அடைந்­துள்­ளார்கள் என்று அவ­ரு­டைய நேர்­காணல் கருத்து சாரம்ச நிலையில் குறித்துக் காட்­டி­யுள்­ளது. தமிழ் மக்கள் மட்­டு­மல்ல. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் எதிர்­பா­ராத இந்த ஏமாற்­றத்தில் சிக்கித் தவிக்­கின்­றது என்றே கூற வேண்டும். 
மேலோட்­ட­மான அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த போதிலும், யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரம் உள்­ளிட்ட உண்­மை­யான மீள் எழுச்­சிக்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் சரி­யான முறையில் திட்­ட­மி­ட­வில்லை, மேற்­கொள்­ள­வு­மில்லை. 
இந்த நிலையில் 'உரி­மைகள் என்­று­வரும் போது தமி­ழர்கள் பெரி­தாக எதையும் எதிர்­பார்க்­கக்­கூ­டாது என்று ராஜ­பக் ஷ வெளிப்­ப­டை­யாக உணர்த்­தினார். ஆனால் இந்த (நல்­லாட்சி) அர­சாங்­கத்தை நம்­பிக்­கை­யுடன் நோக்­கி­ய­மைக்குக் கார­ணங்கள் இருந்­தன. பிறகு அவர்கள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றத் தவ­றி­னார்கள். எமது மக்கள் ஏமாற்­றப்­பட்டு, கடும் அதி­ருப்­திக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள்' என்று சுமந்­திரன் இந்து நாளி­த­ழு­ட­னான நேர்­கா­ணலில் குறிப்­பிட்­டுள்ளார். 
நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஏற்­பட்ட குள­று­ப­டி­யான மாற்­றங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவின் நிலைப்­பாடு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சுமந்­திரன் கருத்­து­ரைத்­துள்ளார். 
'2015இல் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செயற்­பா­டு­களில் காணப்­பட்ட திசை­மாற்­றத்­­துக்கும், தற்­போ­தைய திசை­மாற்­றத்­­­துக்கும் இடையே பெரு­ம­ளவு வேறு­பாடு இருக்­கி­றது. போர் வெற்றித் தினத்தைக் கொண்­டா­டு­வதை நிறுத்­தி­யதன் மூலமும், தேசிய தினத்­தன்று தமி­ழிலும் தேசி­ய­கீ­தத்தைப் பாடு­வ­தற்கு ஏற்­பாடு செய்­ததன் மூலமும் இன­ நல்­லி­ணக்கம் மற்றும் புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பு ஆகி­ய­வற்றை உறு­தி­யாக நியா­யப்­ப­டுத்­தி­யதன் மூலமும் மிகவும் ஆக்­க­பூர்­வ­மா­ன­தொரு வழியில் நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய செயற்­பா­டு­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக வழி­ந­டத்­தி­யவர் ஜனா­தி­ப­தியே' என அவ­ரு­டைய ஆரம்ப நிலைமை குறித்து சுமந்­திரன் கூறி­யுள்ளார். 
ஆனால் அவ­ரு­டைய நிலைமை இப்­போது அவ்­வா­றில்லை என்­பதைப் பின்­வ­ரு­மாறு  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
ஆனால் இப்­போது அவர் அவை எல்­லா­வற்­றி­லி­ருந்தும் பின்­வாங்­கி­விட்­டது பெரும் கவலை தரு­கி­றது. நாங்கள் பெரும் ஏமாற்­றமும், அதி­ருப்­தியும் அடைந்­தி­ருக்­கிறோம். ஏனென்றால் இன­வெ­றிக்கு வசப்­ப­டக்­கூ­டி­ய­வ­ரல்ல ஜனா­தி­பதி என்­பதை நாம­றிவோம். அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்த மிகவும் முற்­போக்­கான கருத்­துக்­களை அவர் கொண்­டி­ருக்­கிறார். ஆனால் இப்­போது அவர் தேர்தல் மற்றும் ஏனைய அர­சியல் கார­ணங்­களால் நிர்­ப்பந்­திக்­கப்­பட்டு, அவர் தனது குண­வி­யல்­புக்குப் புறம்­பான முறையில் நடந்­து­கொண்­டி­ருக்­கிறார். - இதன் மூலம், தமிழ் மக்­களின் அர­சியல் நலன்­களில் ஜனா­தி­பதி எத்­த­கைய உறு­திப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்றார் என்­பது சுமந்­தி­ர­னு­டைய கூற்றில் வெளிப்­பட்­டுள்­ளது. 
ஒத்த கருத்­து­டைய உள்­நோக்கம் கொண்ட நட­வ­டிக்­கைகள்
போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள சவேந்­திர சில்வா லெப்டின் ஜென­ர­லாக பதவி உயர்த்­தப்­பட்டு இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டமை பரந்த அளவில் கண்­ட­னங்­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் உள்­ளாகி இருக்­கின்­றது. அது பற்றி கருத்­து­ரைத்த சுமந்­திரன், நல்­லாட்சி அர­சாங்­க­மா­கிய கூட்­ட­ர­சாங்­கத்தில் வேறு­பா­டுகள் தலை­யெ­டுத்த நிலையில் கடும் போக்கைக் கடைப்­பி­டித்து, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கி­விட்டு ராஜ­பக் ஷவை நாட்டின் பிர­த­ம­ராக நிய­மித்­ததன் அடிப்­ப­டை­யி­லேயே சவேந்­திர சில்­வாவின் நிய­ம­னத்­தையும் நோக்க வேண்­டி­யுள்­ளது என்­பது சுமந்­தி­ரனின் கருத்­தாகும். 
ஆனால், பொது­ஜன பெர­முன முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பா­யவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­ததும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோத்­தாவைப் போலவே, போர்க்­குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள சவேந்­திர சில்­வாவை இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மித்­த­தையும் ஒத்த கருத்து கொண்ட, ஒத்த உள்­நோக்கம் கொண்ட நட­வ­டிக்­கை­க­ளா­கவே ஆய்­வா­ளர்கள் நோக்­கு­கின்­றார்கள். 
நாட்டில் கொடுங்கோல் அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னோட்ட நட­வ­டிக்­கை­யா­கவே இந்த இரு­வ­ரையும் அதி­யுச்ச நிலை­மைக்கு உயர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற கருத்து மேலோங்­கி­யுள்­ளது.  
இரு கட்சி அர­சாங்­க­மா­கிய கூட்டு அர­சாங்­கத்­­­துக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி, அதனை இக்­கட்­டான சர்­வ­தேச மட்­டத்­தி­லான நெருக்­கடி நிலை­மை­களில் பிணை எடுத்து விடு­கின்ற வகை­யி­லான அணு­கு­முறை சார்ந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த செயற்­பாடும் ஒரு காரணம் என கரு­து­வ­திலும் தவ­றி­ருக்க முடி­யாது. அதனை சுமந்­தி­ரனின் கூற்று உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது என்றே நோக்க வேண்டும்.
'இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த போது நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்குத் தீர்­வொன்றைக் காண்­ப­தற்­கான மெய்­யான வாய்ப்­பொன்று வரு­கி­றது என்று நம்­பிய கார­ணத்­தினால் மத்­திய அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்துச் செயற்­பட்டோம். என்­றாலும் அவ்­வாறு நாம் செய்­தது எம்மைப் பாதித்­தி­ருக்­கி­றது. கூட்­ட­ர­சாங்கம் இப்­பொ­ழுது முறி­வ­டைந்து போயி­ருக்­கி­றது. அந்த முறி­வினால் பல்­வேறு பாத­க­மான விளை­வு­களை இன்று நாம் பார்க்­கின்றோம்' என்று அவர் இந்து நாளி­த­ழிடம் கூறி­யுள்ளார். 
அத்­துடன்  'அர­சாங்­கத்­­துக்கு விட்­டுக்­கொ­டுத்த, இன்­னமும் விட்­டுக்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தவ­றான குதி­ரை­யொன்­றிற்கு ஆத­ர­வ­ளித்துப் பணத்தைக் கட்­டி­விட்­டது, அதன் மக்­க­ளுக்­காக எதையும் சாதிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை என்றே நோக்­கப்­ப­டு­கின்­றது. அது ஒரு உண்­மை­யு­மாகும். அடுத்த தடவை வாக்­கா­ளர்­களைச் சந்­திக்கும் போது அந்த உண்­மையை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும்' என அவர் குறிப்­பிட்­டுள்­ளமை விமர்­ச­கர்­களும் பாதிக்­கப்­பட்ட மக்­களும் நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்பில் கொண்­டி­ருந்த அணு­கு­முறை குறித்து வெளி­யிட்­டி­ருந்த கவ­லை­யுடன் கூடிய கரி­சனை மிக்க கருத்­துக்­களின் உண்மைத் தன்­மையை வெளிப்­ப­டுத்தி உள்­ளது.
காலம் கடந்த ஞானமும் நாட்டின் அர­சியல் நிலைப்­பாடும்
ஐக்­கிய தேசிய கட்­சி­யும்­சரி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் சரி காலம் கால­மாக சிறு­பான்மை தேசிய இன மக்கள் தொடர்பில் மறை­மு­க­மான நிகழ்ச்சி நிர­லுடன் கூடிய ஒடுக்­கு­முறை தந்­தி­ரோ­பாயச் செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுத்­தி­ருந்­தன என்­பது தமிழ்த்­த­ரப்பின் அர­சியல் வர­லாற்று அனு­ப­வ­மாகப் பதி­வா­கி­யுள்­ளது. இந்த அனு­பவம் தமிழ் மக்கள் மனங்­களில் மிகவும் ஆழ­மாகப் பதி­வாகி உள்­ளன. இதனைக் கருத்திற்கொண்டு தீர்க்­க­த­ரி­ச­னத்­து­டனும், மிக ஆழ­மான அர­சியல் தந்­தி­ரோ­பாய முறை­யிலும் இரு­கட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­திலும் அதனைத் தொடர்ந்தும் செயற்­பட்­டி­ருக்க வேண்டும் என்ற அர­சியல் யதார்த்தம் காலம் கடந்த நிலையில் கூட்­ட­மைப்­பிடம் இருந்து வெளிப்­பட்­டு­வ­தா­கவே கொள்ள வேண்டும்.
யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கழிந்­து­விட்­டன. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான மேலோங்கி வலி­மை­யுடன் கூடிய விடு­த­லைப்­பு­லி­களின் போராட்­டமும் மௌனிக்கச் செய்­யப்­பட்டு விட்­டது.  
நிர்க்­க­திக்கு ஒப்­பான ஒரு நிலை­மையில் பல­னற்றுப் போன­தாக நிரூ­பிக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டத்­தையே கையில் எடுக்க வேண்­டிய நிலை­மைக்குத் தமிழ் மக்கள் இப்­போது தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஆனாலும் அந்தப் போரட்டம் அர­சாங்­கத்­தையோ அல்­லது சிங்­கள பௌத்த தேசி­யத்தின் மறை­கர சூழ்ச்சி மிக்க பேரி­ன­வாத வளர்ச்­சிக்­கான நட­வ­டிக்­கை­க­ளையோ தடுக்­க­வல்ல சக்தி கொண்­ட­தாக இல்லை. 
தமிழ்த்­த­ரப்­பினர் எத்­த­கைய போராட்­டங்­களை முன்­னெ­டுத்த போதிலும் அரச தரப்­பி­னரும் அர­சாங்­கமும் அத­னுடன் ஒத்­தோ­டு­கின்ற அர­சியல் பௌத்த தீவி­ர­வாத சக்­தி­களும் சிங்­கள பௌத்த தீவிரப் போக்­கி­லான செயற்­பா­டு­களைக் கைவிட தயா­ராக இல்லை. இந்த அணு­கு­மு­றை­யுடன் கூடிய கொள்­கை­களின் அடிப்­ப­டையில் செயற்­படப் போகின்ற அர­சாங்­கத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­கான போக்­கி­லேயே ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் கள­மி­றங்கி இருக்­கின்­றார்கள். 
ஏனெனில் கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வாக்­கா­ளர்­களின் ஆத­ரவுத் தளத்தில் முன்­னேற்­றத்தைப் பொது­ஜன பெர­முன தெளி­வாகக் குறித்துக் காட்­டி­யுள்­ளது. அந்த அர­சியல் செல்­வாக்கு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் மேலோங்கி நிற்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களே தேர்­த­லுக்கு முன்­ன­ரான அர­சியல் களத்தில் தென்­ப­டு­கின்­றன. 
தமிழர் தரப்பு அர­சி­யலின் அவல நிலை
உள்­ளூராட்சித் தேர்­தலின் பின்னர் நாட்டு மக்கள் மத்­தியில் தமது செல்­வாக்கை வளர்த்­தெ­டுத்து தமக்­கான ஆத­ரவுத் தளத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான உருப்­ப­டி­யான அர­சியல் நட­வ­டிக்­கைகள் எத­னையும் ஐக்­கிய தேசிய கட்­சியும் செய்­ய­வில்லை. ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் செய்­ய­வில்லை. இரண்டு கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள் தமக்­கி­டை­யி­லான அர­சியல் அதி­காரப் போட்­டியில் மூழ்­கி­யி­ருந்­த­னவே தவிர அவர்கள் மக்கள் நலன் சார்ந்த அந்த மக்­களின் மனங்­களைக் கவ­ரத்­தக்க அர­சியல் நட­வ­டிக்­கை­களில் கவனம் செலுத்­தவே இல்லை என்றே கூற வேண்டும். 
மறு­பக்­கத்தில் மலை­போல பிரச்­சி­னைகள் தீர்­வுக்­காகக் குவிந்­தி­ருக்­கின்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சாங்கத் தரப்­பி­னரைத் தவிர்ந்த ஏனைய அர­சியல் சக்­தி­க­ளுடன் கைகோர்த்து தமக்­கு­ரிய ஆத­ரவு தளத்தை விரி­வு­ப­டுத்­த­வில்லை. தனது அர­சியல் பலத்தைக் கட்டி எழுப்பிக் கொள்­வ­தற்கு உள்ளூர் அர­சியல் கட்­சி­க­ளுடன் கொள்கை ரீதியில் இறுக்­க­மான அர­சியல் பிணைப்பை உரு­வாக்கிக் கொள்­ள­வில்லை. சர்­வ­தேச மட்­டத்தில் தென்­ப­டு­வ­தாகக் கூறி பெருமை கொள்­கின்ற தரப்­புக்­க­ளுடன் இறுக்­க­மான உறவுப் பிணைப்பை ஏற்­ப­டுத்திக் கொள்­ள­வு­மில்லை. 
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும், ஏனைய தமிழ்க்­கட்­சி­களும் ஒரு­வரை ஒருவர் சாடு­வ­திலும் ஒருவர் மீது ஒருவர் அர­சியல் நிலையில் சேற­டித்து போரா­டு­வ­தி­லுமே காலத்தைக் கழித்­துள்­ளார்கள். அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­பதி தேர்தல் என்ற வடி­வத்தில் நிர்ப்­பந்­தங்கள் நிறைந்­ததோர் சாத­க­மற்ற அர­சியல் வியூ­கத்­­­துக்கு முகம் கொடுப்­ப­தற்குத் தங்­களைத் தயார்­ப­டுத்திக் கொள்­வதில் உரிய முறையில் கவனம் செலுத்­த­வில்லை.
மறு­பக்­கத்தில் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கிய தமிழ் மக்கள் தன்­னெ­ழுச்சி பெற்று போராட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் அவர்­க­ளுக்குத் தர­மான அர­சியல் தலை­மைத்­து­வத்தை வழங்கி வழி­ந­டத்­து­வ­திலும் தமிழ் அர­சியல் கட்­சிகள் கோட்டை விட்­டி­ருக்­கின்­றன. தங்­க­ளுக்குள் ஒன்­று­ப­ட­வு­மில்லை மக்­களை ஒன்­று­ப­டுத்தி அவர்­களின் ஒன்­றி­ணைந்த ஆத­ரவுத் தளத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வு­மில்லை.
மொத்­தத்தில் தமிழ் மக்­களை நோக்கி அனை­வரும் ஓர­ணியில் ஒரு தலை­மை­யின் கீழ் ஒன்று திரண்டு தமிழ்த்­த­ரப்பின் ஒன்­று­பட்ட சக்­தியை அர­சாங்­கத்­­­துக்கும் சர்­வ­தே­சத்­­­துக்கும் வெளிப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்­கையும் அர­சியல் அறி­வு­றுத்­த­லுமே கீறல் விழுந்த ஒலித்­தட்டின் ஓசை­யாக தமிழ்த்­த­லை­வர்­க­ளிடம் இருந்து காலம் கால­மாக சோர்­வின்றி வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றதே தவிர தமிழ் அர­சியல் கட்­சிகள் கொள்கை ரீதி­யாக மக்கள் நலன்­களை முதன்­மைப்­ப­டுத்தி ஒன்­றி­ணை­வ­தற்குத் தயா­ராக இல்லை.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற ஒற்­று­மைக்கும் ஐக்­கி­யத்­துக்­கு­மான நிலைப்­பாட்டைக் கோட்டை விட்­டு­விட்டு சித­றிய நெல்­லிக்காய் மூடை­யா­கவே ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முகம் கொடுக்கப் போகின்ற அவல நிலை­மைக்குத் தமிழர் தரப்பு அர­சி­யலை தமிழ் அர­சியல் கட்­சி­களும் தமிழ் அர­சியல் தலை­வர்­களும் ஆளாக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.
தீக்­கு­ளிப்பின் சமிக்­ஞையா..........?
பொது­ஜன பெர­முன போர்க்­குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷவை ஜனா­தி­பதி தேர்­தலில் வலிமை மிக்க ஆத­ர­வுத்­தள அடை­யா­ளத்­துடன் வேட்­பா­ள­ராகப் பெய­ரிட்­டுள்­ளது. தமிழ் மக்­களின் நலன்­களில் ஆரம்பம் முதலே சூழ்ச்­சி­க­ர­மான முறையில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­துள்ள 
ஜே.வி­.பி.யும் அந்தக் கட்­சியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்­கவை வேட்­ப­ாள­ராக நிறுத்­து­வ­தற்கு முடிவு செய்­துள்­ளது. 
இரு தரப்­பி­ன­ருமே தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களைக் கருத்­திற்­கொண்டு உளப்­பூர்­வ­மாக அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பார்கள் என்று கூற முடி­யாது. ஏனெனில் இரண்டு பேருமே கடந்த கால அர­சியல் வர­லாற்றில் தமிழ் மக்­களை நசுக்கி அடக்கி ஒடுக்­குக்­கு­கின்ற சக்­தி­களின் கரு­வி­க­ளா­கவே செயற்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 
மறு­பு­றத்தில் தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் நலன்­களில் மென்­போக்கைக் கடைப்­பிடிப்­ப­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற ஐக்­கிய தேசிய கட்சி இன்னும் தனது வேட்­பா­ளரைத் தெரிவு செய்­யாமல் காலம் கடத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. கட்­சியின் தீர்­மா­னத்­­­துக்கு முன்­ன­தாக தன்­னிச்­சை­யாகத் தன்­னையே வேட்­பா­ள­ராக வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்ள சஜித் பிரே­ம­தாச தேசிய பிரச்­சி­னை­களில் ஆழ்ந்த அனு­ப­வமும், ஈடு­பாடும் கொண்­ட­வ­ராக இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 
அரசியலில் அரிச்சுவடி நிலையில் இருப்பதைப் போன்ற நிலையில் தோற்றம் தந்துள்ள அவரைத்தான் ஐக்கிய தேசியக்கட்சி அதிகாரபூர்வமாக வேட்பாளராக நியமிக்குமா என்பது தெரியவில்லை. அவ்வாறு நியமித்தாலும்கூட அவர் எந்த அளவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஈடுபாட்டுடன் செயற்படுவார் எந்த வகையிலான உறுதிப்பாட்டுடன் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பாடுபடுவார் என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் காண முடியவில்லை.
இத்தகைய நிலையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வட–கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், விடுதலைப் புலிகளின் முன்னாள் வலிமை மிகுந்த தளபதியான கருணா அம்மான் ஆகியோர் சிங்கள பௌத்த தேசியத் தீவிரப்போக்கைக் கொண்ட பேரின அரசியல் கட்சி களுக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். 
ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அவசரப்படத் தேவையில்லை. அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டதும் அவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி ஒரு தீர்மானத்­­துக்கு வரவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்து நாளிதழுடனான நேர் காணலில் கூறியுள்ளார். 
ஆனால் தமிழ் மக்கள் வேட்பாளர்களாகக் கருதப்படு பவர்கள் வெளிப்படுத்தி வருகின்ற உண்மைக்கு மாறான நிலைப்பாடுகளினாலும், தமிழர் பிரச்சினைகளைக் கையாள்வதைப் பற்றி வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்களினாலும் குழப்பமடைந்து காணப்ப டுகின்றார்கள். இந்தக் குழப்பமானது அவர்களை தேர்தல்களில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கான தீர்மானத்தை நோக்கி வலிந்து தள்ளிச் செல்வதையே காண முடிகின்றது.
மொத்தத்தில் ஜனாதிபதி தேர்தல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இதுகால வரையிலான அரசியல் வரலாற்றில் ஒருபோதும் கண்டறியாத ஒரு தீக்குளிப்பின் சமிக்ஞையாகவே அந்தத் தேர்தலுக்கான முன்கள நிலைமைகள் காட்டி நிற்கின்றன. 


பி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி 





No comments: