நாடிவந்து நிற்குமன்றோ !எம். ஜெயராமசர்மா.. அவுஸ்திரேலியா

.
            நாநயம் இருந்துவிட்டால்
             நாணயம் நமக்குவரும்
             பேய்மனம் கொண்டுவிட்டால்
             பிணம்போல ஆகிடுவர்
             தூய்மையது மனமேறின்
             துட்டகுணம் மறைந்துவிடும்
             நாமென்றும் வாழ்வினிலே
             நாணயத்தை காத்திடுவோம் !

              மேடைகளில் முழங்கிடுவார்
              விதம்விதமாய் எழுதிடுவார்
              விவாதங்கள் வந்துவிட்டால்
              மேதையெனக் காட்டிடுவார்
              போதைபற்றி கதைசொல்வார்
              பொறுப்புப்பற்றி பலசொல்வார்
              போதையுடன் வீடுவந்து
              பொங்கிடுவார் வீட்டினிலே !


              அறவழியை விட்டுவிட்டால்
              அனைவர்க்கும் தீமையென்பார்
               அஹிம்சைதனை அரவணைத்தல்
               அனைவர்க்கும் நன்மையென்பார்
               அன்புபாசம் யாவருக்கும்
               அத்திவாரம் தானென்பார்
                அசிங்கமுள்ள அத்தனையும்
               அரங்கேற்றம் செய்தும்வைப்பார் !

               வள்ளுவரை அருகழைப்பார்
               வாய்மைபற்றிப் பேசிடுவார்
               தெள்ளுதமிழ் தலைவனென்பார்
               தில்லுமுல்லு பலசெய்வார்
               உள்ளமெலாம் கள்ளமுடன்
               ஒழுக்கமின்றி அவரிருப்பார்
                நல்லதமிழ் காத்திடுவோம்
              நாட்டிலுள்ளோர் வாருமென்பார் !

              கண்ணகியைப் போற்றிடுவார்
              கற்புப்பற்றி நூல்செய்வார்
              எண்ணமெலாம் திருவருளே
              எனச்சொல்லி திருடிநிற்பார்
               தன்னைவிட மேதாவி
               தோன்றவில்லை எனவுரைப்பார்
               தலைதெறிக்கக் காரியங்கள் 
                சமத்தாகச் செய்துநிற்பார் !

               பெண்ணடிமை ஒழிவதற்கு
               பிரசாரம் செய்திடுவார்
               பெண்பித்து தலைக்கேறி
               பெண்ணைப் பிய்த்துஎறிந்திடுவார்
                மண்மீது போதையது
               மடிவதற்கு முழங்கிடுவார்
               மதுமீது அவர்தவழ்ந்து
               வந்துநிற்பார் மனைக்குள்ளே !


              வீண்வார்த்தை பேசாதீர்
              வீண்வாதம் புரியாதீர்
              மாண்புடனே பேசிடுவீர்
              மாண்புடனே நடந்திடுவீர் 
              தான்வாழும் சமுதாயம்
              தலைநிமிர வேண்டுமென்று
              தான்நினைத்து வாழ்பவரே
               தலைவனாய் உயர்ந்திடுவார் !


             உள்ளொன்றும் புறமொன்றும்
              உயர்வினுக்கு ஏற்றதல்ல
              உரைக்கின்ற வார்த்தையது
              உள்ளிருந்து வரவேண்டும்
              கள்ளமிலா உள்ளமொடு
              கருணையுடன் வாழ்வதுதான்
              நல்லதொரு வாழ்வாக
               நமக்கெல்லாம் அமைந்துவிடும் !

               நாணயமாய் வாழ்ந்துவிட்டால்
               நாட்டுக்கே நன்மையன்றோ
                நாட்டுக்கே இப்போது
                நாணயமே தேவையன்றோ 
                நாநயத்தைக் காப்பாற்றி
                நாணயமாய் நாமிருந்தால்
                நன்மையெலாம் எமைநோக்கி
                நாடிவந்து நிற்குமன்றோ !

No comments: