அனைவரும் செய்திடுவோம் ! - எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

.
              பல்லில்லா வாயாலே பலகதைகள் நீசொல்வாய்
                கேட்டபடி நானிருருந்து கிறுகிறுத்துப் போய்விடுவேன்

                ஓரடிநீ வைத்தவுடன் உலப்பில்லா மகிழ்வுடனே
                உன்கையைப் பிடித்தபடி உன்னுடனே நான்நடப்பேன்

               பல்முளைத்த பின்னாலே பலதடவை நீகடித்தாய்
               தொல்லையென நினைக்காமல் சுகமாக நானினைத்தேன்

               மடிமீது கிடந்திருந்து மார்பினிலே உதைத்திடுவாய்
               மனமெல்லாம் இன்பவெள்ளம் பெருகெடுத்து நிற்குமப்போ

               முடிமீது கையைவைத்து முறுக்கிநீ இழுத்திடுவாய்
               முகஞ்சுழியா உனைப்பார்த்து முறுவலுடன் நானிற்பேன்

               மார்பினிலே படுத்திருந்து மழலையிலே பேசிடுவாய்
               ஊர்முழுக்க ஓடிவந்து உன்பேச்சைக் கேட்குமப்போ

               வேரிலே பழுத்தபலா என்றுமே வியந்துமவர்
               மாரியென முத்தமழை மாறிமாறிக் கொடுத்திடுவார்

               ஊர்போற்ற வந்தவுனை உயர்செல்வ மாநினைந்து
               உச்சியெலாம் முத்தமிட்டு உவகையிலே நான்மிதப்பேன்

              கண்ணுக்குள் மணியெனவே காலமெலாம் உனைநினைத்து
              எண்ணற்ற கனவுகளை எனக்குள்ளே நான்சுமந்தேன்

              நீவளர்ந்து உரமாகி நெடுந்தூரம் எனைத்தாங்கி
              வானளவு புகழ்பெறவே மனத்துள்ளே நினைத்திருந்தேன்

              சுரமுனக்கு வந்துவிடின் துடிதுடித்துப் போய்விடுவேன்
              நடுஇரவு ஆனாலும் நாடிநிற்பேன் வைத்தியரை

              நீசிரித்தால் நான்சிரிப்பேன் நீயழுதால் நானழுவேன்
              மேதினியில் நீதானே மேலான செல்வமென்பேன்

             தோழ்மீது ஏறிநின்று துஷ்டத்தனம் செய்திடுவாய்
             ஆள்பாதி ஆக்கிடுவாய் அத்தனையும் ஆனந்தம்

             நாள்முழுக்க உன்னுடனே நானிருக்க வேண்டுமென்று
             தோழணைத்துப் பிடித்திடுவாய் சுகமங்கே பெருக்கெடுக்கும்

             பள்ளிக்கூடம் விட்டுவிட்டு பாதிவழி வந்துநிற்பேன்
             துள்ளிவந்து எனைப்பற்றி அள்ளிமுத்தம் தந்துநிற்பாய்

             வெள்ளை உள்ளத்தோடென்னை விட்டுவிடா உன்விருப்பால்
             உள்ளமெலாம் இன்பமெனும் உணர்வாக ஓடிநிற்கும்

             சொல்லசொல்ல கதைகேட்பாய் சுற்றிவந்தும் கதைகேட்பாய்
             நல்லகதை சொல்லுவென நயமுடனே நாடிநிற்பாய்

            ஆராதகாதலுடன் அணைத்தபடி சொல்லி நிற்பேன்
            பேராவல் கொண்டுநீயும் பிரமிப்பாய் கேட்டிடுவாய்

            இப்போது போன்செய்தால் எடுக்கநீ தயங்குகிறாய்
            அப்போது என்பேச்சை ஆனந்தமாய் கேட்டாயே
            முப்போதும் உன்நினைப்பாய் முழுவதுமாய் இருந்தேனே
            இப்போது அழைப்பதற்கு எனக்கிப்போ யாருள்ளார்

             நான்நடக்க முடியாமல் நர்சிங்ஹோம் இருக்கின்றேன்
             நீநடந்த நடையினைநான் நினைவினிலே மீட்கின்றேன்
             என்மகனே என்நடையை இங்குவந்து பார்த்துவிடு
             உன்மனத்தில் பழையநடை ஓடிவந்து நின்றுவிடும்

             பார்ப்பதற்கு வருவாயா எனப்பார்த்து நிற்கிற்றேன்
             பார்வையிப்போ எனைப்பார்த்து பரிகசித்து நிற்கிறது
             பள்ளிக்கூடம் விட்டபின்பு பாதிவழி வந்தவனே
             பார்த்தபடி நிற்கின்றேன் பார்த்துவிட வருவாயா

            நடு இரவில் நீவிழித்தால் நானணைத்துக் கொஞ்சிடுவேன்
            நானெழுந்து விழித்தாலும் எனையணைக்க யாருமிலை
            தனிமையிலே வாடுகிறேன் தயவைநான் நாடுகிறேன்
            எனதருமை தவப்புதல்வா எனையணைக்க வருவாயா

           முதுமை வந்தகாரணத்தால் மூச்சுவிட முடியவில்லை
           தனிமையிலே தவிக்கின்றேன் தாகமெலாம் உன்னிடத்தில்
           புவிமீது உன்னையேநான் புதுமருந்தாய் உணருகிறேன்
           மடிமீது எனைவைத்து வருடிவிட வருவாயா

           உன்குடும்பம் உன்பிள்ளை உனக்கு அதுதேவைதான்
           என்றாலும் உன்னம்மா என்றுமுனக் கம்மாதான்
           இளமையிலும் முதுமையிலும் உனக்குநான் அம்மாதான்
           ஏக்கமுடன் இருப்பவளை  பார்ப்பதற்கு வருவாயா

           நேர்சிங்ஹோம் வாழ்க்கை நிம்மதியாய் இல்லையப்பா
           யாரிடம்நான் சொல்லுவது நான்நொந்து போய்விட்டேன்
           வேரற்றமரமாக விழும்நிலையில் நான் உள்ளேன்
            யாருள்ளார் எனையணைக்க நானழுது தொலைகின்றேன்

           பிள்ளைகளே தயவுசெய்து பெற்றவரை பேணுங்கள்
           உள்ளமதில் பெற்றவரை உயர்த்திவைத்துப் பாருங்கள்
           கள்ளமிலா அன்புடைய வெள்ளமனம் உடையவரே
           கடவுளென திகழுமெங்கள் கண்நிறைந்த பெற்றவரே

             கண்ணிரில் அப்பாவும் கதறலுடன் அம்மாவும்
             மண்மீது இருந்துவிடின் மனிதருக்கே மதிப்புண்டா
             எண்ணிநாம் பார்க்காமல் இருந்துமே விட்டுவிட்டால்
             மண்ணிலே வாழ்வதிலே வாழ்வினுக்கே பயனுண்டா !

            அன்னையும்பிதாவும் முன்னறிதெய்வம்
             என்பதை அனைவரும்
             அறமெனக் கொண்டிடுவோம்
             அவர் அகமும்முகமும்
             ஆனந்தம் அடைய
              அனைவரும் செய்திடுவோம் !

No comments: