நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 1 - கீதா மதிவாணன்

.
பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்று நெடுநல்வாடை. இதைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார்.  கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  


இந்தப் பாடலில் மதுரை மாநகரின் மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் மிக அழகாக வர்ணித்துள்ளதைக் கண்டு நான் வியந்து ரசித்ததை உங்களுடன் பகிரவிரும்புகிறேன். விளக்கத்தையும் எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் தரவுள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் அளவிடற்கரிய பேராசையே இம்முயற்சிக்கு மூலகாரணம். ஆதலால் கற்றவர் பிழை பொறுத்து குற்றம் காணுமிடத்து உரிமையுடன் திருத்தினால் மகிழ்வேன்.  


இனி நெடுநல்வாடை பாடலும் விளக்கமும்...

  


வையகம் பனிப்பவலன் ஏர்பு வளைஇ


பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென,

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி நலிய,பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க, (1-8)


பொய்யா வானமது!

பெய்தது வானமுது!

மலை தழுவிய முகிலால்
நிலம் தழுவியது நீர்!
நிலம் தழுவிய நீரால்
உடல் தழுவியது ஊதல்!
உடல் தழுவிய ஊதலது
உயிரைத் தழுவிடும் கூதலிது! 


 
இடையறாதப் பொழிவின் இடையூறால் நலிந்த
இடையர்கள் யாவரும் இடம்பெயர விழைந்து... 
 
மேய்ச்சல் நிலமதைப் பருகுவதுபோல்
பாய்ச்சலோடு ஓடிவந்த பாழ்நீர் கண்டு
ஓய்ச்சலின்றி ஓட்டினார் மந்தைதனை
காய்ச்சலற்ற மேட்டுநிலத்துக்கு.  

காந்தள் மலர்மாலை கழுத்திருந்து
ஏந்திய இதழ்க்கரத்தால் நீர்ச்சொரிய...


 வாட்டிய வாடையின் வாதை தணிக்க
மூட்டிய தீயின் முன்னேயிருந்து
காட்டிய கைகளை அக்குளில் பொத்தி
கூட்டிய வெம்மையும் உதவக் காணாது...  

கிடுகிடுவென்று பற்கள் தந்தியடிக்க
நடுநடுங்கியிருந்தார் மந்தைக்காவலர்.

 
 

மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் 9- 12)
 
கூதல் தந்த மந்தத்தால்
மந்தைகள் மேய்ச்சல் மறக்க...
அங்கும் இங்கும் அலப்பும் மந்தியும்
ஓரிடம் குந்தி ஒடுங்கி நடுங்கியுமிருக்க....

 
 சிறகு உறைந்த பறவைகள்
உறைந்திருந்த சிறுகிளைகள்
விரைந்து வீசிய காற்றிலாட
விறைத்து அவை தரையில் வீழ..... 
 
பசிய புல்லையுந் துறந்து
பசுக்கள் முடங்கிக்கிடக்க...
பசியால் எழுந்த தவிப்பால்
சிசுக்கள் பால்மடி நெருங்க...
மன இரக்கமின்றி விரட்டப்பட்டன,
மடியிறக்கமின்றி வெருட்டப்பட்டன. 
 
தாயன்பால்
சுரக்கவேண்டிய தாயின்பால்
சுரக்கவில்லை தாயின் பால்! 
 
குன்றும் குளிரில்  நடுங்கிக்
குன்றும் கூதிர்நாள்  இதுவே!
(தொடரும்)