ஏழிசை வேந்தன் சௌந்தரராஜனுக்கு முரசின் அஞ்சலி -செ .பாஸ்கரன்

.
 ஏழிசை வேந்தனின் மறைவிற்கு முரசு தனது அஞ்சலியை  தெரிவிக்கின்றது. 

கடவுள் மனிதானாக பிறக்க வேண்டும் என்ற பாடலில் இறைவனை சாகச்சொல்லி பாடமாட்டேன் என்று சொல்லி கண்ணதாசன் எழுதிய பாட்டையே மாற்றி அமைக்க வைத்த TM சௌந்தரராஜன் இறைவன் அடி சேர்ந்துவிட்டார்.  
உடல் நிலை சரியில்லாமல், சென்னையில் சனிக்கிழமை தனது 91 வது வயதில் இவர்  காலமானார்.  அவரது இறுதிச்சடங்கு, மைலாப்பூரில் சென்னையில் நடந்தது .

 டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.. திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தவர் . 1946ம் ஆண்டு முதல் திரையுலகில், 60 ஆண்டு காலம் கொடிகட்டி பறந்த இசை மேதை ஓய்வெடுத்துக்கொண்டுள்ளார்.

நான் நிரந்தரமானவன் ..அழிவதில்லை...எனக்கு எந்த நிலையிலும் மரணம் இல்லை... என்று  கண்ணதாசனின் வரிகளைப் பாடிய TMS மரணித்தாலும் நம்மிடம் இருந்து மரணம் இல்லாது நிரந்தரமாகிவிட்டார்.. எம்முடன் இசையாக பாட்டாக வாழ்ந்து கொண்டே இருப்பார் .

இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாகும்...!,' என்ற வைரவரிகளுக்கு வர்ணம் பூசியவர். பாடல்களில், வார்த்தைகளுக்கு உயிர்வார்த்தவர். வசீகரக் குரலால் இசைப்பிரியர்களின் உள்ளங்களை வளைத்து, மனதில் குடிகொண்டவர். தேனருவி போல் செவிகளுக்கு விருந்தளித்து, இசையுலகில் கோலோச்சியவர். காற்றலையில் கலந்தே இருப்பார் .




மதுரையில்  பறந்த மீன்கொடியை  உன் கண்களில் கண்டேனே  என்ற பாடலில் தமிழகத்தையே ஒரு பெண்ணில் பார்க்கவைத்த அற்புதமான குரல் கொண்டவர்  இந்த மதுரையில் பிறந்த TMS அவர்கள் .பத்தாயிரத்துக்கு  மேற்பட்ட  பாடல்களை  பாடிய  இவருக்கு மத்திய அரசு  2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கௌரவித்தது. மிழக அரசு  "கலைமாமணி' விருது வழங்கி கௌரவித்தது.

பட்டினத்தார்  படத்தின்மூலம்  சிறந்த நடிகனாகவும் நம் நெஞ்சை கொள்ளை கொண்ட இந்த ஏழிசை வேந்தனின் மறைவிற்கு முரசு தனது அஞ்சலியை  தெரிவிக்கின்றது.