நிலவின்பாடம் நிற்கட்டும் மனமெலாம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா


image1.jpeg              வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே - உன்
              வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே 
              நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  - இங்கு 
              பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !
             உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே - இங்கு
             உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே 
             விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் - அதை
             வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !
             பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் - அதை
             பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார் 
             காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் - அதை
             கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !
             உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு
             உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
             மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் - நாளும்
             உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !
             இறைவனது தலையின் மீது இருக்கிறாயென - இங்கு
             இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது 
             குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே - நாளும்
             இறைவன் உனனை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !
             மதியைப்பற்றி பலகதைகள் மதங்கள் சொல்லிடும் - ஆனால்
             மதியைப்பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும் 
             பாதிநாளில் மதியின்வாழ்வு இருண்டு போயிடும் - ஆனால்
             மீதிநாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !
             உயர்வுதாழ்வு உலகவாழ்வில் இயற்கை என்பதை - இங்கு
             உணர்த்திநிற்கும் செயலைநிலவே தெளிவாய் காட்டுது 
             வெளிச்சம் கொடுக்கநாளும் நிலவு விண்ணில்வருகுது - ஆனால்
             வெளியில் குறையைக் காட்டிக்கொள்ள நிலவும்விரும்புது !
            கூடுகின்ற காதலர்க்கு குளிர்ச்சி  கொடுக்குது    - இங்கு
            வாடுகின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
            நிலவுஅது வானமீது தவழ்ந்து போகுது - ஆனால்
            மனிதமனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !
           மனதில்மகிழ்ச்சி மலரும்போது நிலைவை வாழ்த்துவோம்  - இங்கு
           மனமகிழ்ச்சி தொலையும்போது நிலைவைத் தூற்றுவோம்
            நிலவுஎன்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே - அது
            கவலைகொண்டு போவதைநாம் காணமுடியுமா !
            துன்பமின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் - அதை
            இன்பமுடன் ஏற்றுக்கொண்டால் எமக்கு இன்பமே
            தேய்ந்து வளர்கின்றபாதை நிலவின் பாதையே - அதை
            ஆய்ந்து பார்த்தால் மனிதவாழ்வில் அமைதிதோன்றுமே !
             இருட்டும்வரும்  வெளிச்சம்வரும் எனவுணர்த்திட - இங்கு
             எல்லோர்க்கு பாடமதை நிலவு நடத்துது 
             மனிதரெலாம்  நிலவைப்பார்த்து மதியைத்தீட்டுவோம் - இங்கு
              நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக்காட்டிடும் !








No comments: