எல்லாப்புகழும் இறைவனுக்கே ! - ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

           எல்லாப் புகழும் இறைவனுக்கே 
             இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே 
          நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம்
               அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே 
image1.JPG          சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம்
                சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம்
          கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம்
                 குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் ! 

         எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும் 
             எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம் 
        வல்லமையின் வடிவான இறையினைநாம்
               வணங்காமல் இருந்துவிடல் முறையேயன்று 
        சொல்லளித்துச் சுவையளிக்கும் தூயசக்தி 
                துதிப்பார்க்கு காட்சிதரும் பெரியசக்தி 
         எல்லையில்லா உலகினையே படைத்தசக்தி
              இறையொன்றே என்றுநாம் நினைப்போமென்றும் ! 

         நினைப்பார்க்கு இறையாகக் காட்சிதந்து
             வெறுப்பார்க்கு நம்பிக்கை ஊட்டிநின்று 
        பொறுப்புடனே வாழ்வதற்கு வழியாய்நிற்கும் 
              போற்றுகின்ற பொருளே இறைவடிவமாகும் 
        கருத்துடனே நினைவார்க்கு கருணையாகி
               கவலையுடன் இருப்பார்க்கு கையுமாகி 
         இருக்கின்ற சக்திதான் இறையென்றெண்ணி
                இருக்கின்றார் இவ்வுலகில் பலருமின்று ! 

        இறைபற்றிக் கருத்துப்பல இருந்திட்டாலும்
             எல்லோரும் இறைபற்றி எண்ணுகின்றார் 
       எதிர்வாதம் இவ்வுலகில் எழுந்திட்டாலும்
              இறைபக்தி அற்றநிலை எங்குமில்லை 
        இறையிருக்கு இறையிருக்கு எனும்நினைப்பை
               எவர்வந்து தடுத்தாலும் பலனேயில்லை
          இறையிருந்து நல்லவழி காட்டிநிற்பார் 
                 இறைதொழுது எல்லோரும் இருப்போம்நாளும் ! 



        
             
              
                
    

        




No comments: