போகி நெருப்பே பொசுக்கு

.
இந்த "போகி நெருப்பே பொசுக்கு" என்பது கவிப்பேரரசு அய்யா வைரமுத்துவின் "இன்னொரு தேசிய கீதம்" என்னும் புத்தகத்தில் இதே தலைப்பில் அவர் எழுதிய ஒரு கவிதை அதைப் படித்ததும் என்னுள் ஏற்பட்ட உந்துதல். அதை நானும் தலைப்பாகக் கொண்டு வடிக்கிறேன் மரபு. 

வந்தனம் போகியே ! மார்கழி மாதமும் 
சிந்தை இனிக்க உறங்கிடச் - சுந்தரமாய்ப் 
---பூத்திருக்கும் நெல்மணியின் பூப்பறிக்கும் நல்லுழவர் 
---காத்திருத்து தன்னில்லைச் சுத்தமெனும் - சூத்திரத்தில் 
தூய்மைப் படுத்திடவே மண்ணில் பிறந்தவளே ! 
வாய்ச்சிரிக்கும் பேரிளம் பெண்ணவளே ! - தாய்போல்நீ ! 
---தைத்திங்கள் என்னும் ஒருபிறப்பை ஈன்றெடுப்பாய் 
---கைத்திறமாய் ஒற்றை நெருப்பினையும் - வைத்துள்ளாய் ! 
அந்த நெருப்பினை!யான் கொஞ்சம் கடன்கேட்டேன் 
சிந்து அதையென் கரத்தினிலே - இந்தசகம் 
---நன்மை அடைந்திடவே வெந்தழல் கேட்டேனே 
---என்முன் நிறுத்து அதுதனையும் - இன்றுலகில் 
நூதன மென்ற பெயர்சொல்லி நம்தமிழும் 
சேதம் அடைந்திடச் செய்யுகின்ற - பாதகர்கள் 
---ஆங்கிலம் தன்னைத் தமிழுடன் சேர்த்தேதான் 
---தீங்கினைச் செய்து கிடக்கின்றார் - ஒங்கி!அன்று 
அச்சங்கள் ஏதுமின்றி என்முன்னோர் ஆக்கிவைத்த 
பச்சிளம் ஓலைகளை நீயெரித்தாய் - அச்சுவெல்லம் 
---என்றே இனித்திடும் சங்கக் கவிதைகளைத் 
---தின்றாய் ! கொடுந்தீயெனப் பேர்கொண்டாய் - இன்றுயான் 
அப்பேர் அகற்றிவிட நன்னெறி சொல்கிறேன் ! 
தப்பாக ஆங்கிலம் சேர்கவியை - ஒப்பற்ற 
---யோகியர் உள்ளத்தே தோன்றும் கனலொத்த 
---போகி நெருப்பே பொசுக்கு ! 
===================================================================================== 
என்னடா இது கலி வெண்பா இப்புடி இருக்குதுன்னு யோசிக்காதீங்க....வடிவத்தில் ஒரு புது முயற்சி கையாண்டிருக்கிறேன்...... 
===================================================================================== 
-விவேக்பாரதி

No comments: