வரட்சிதான் விரிந்து நிற்கும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



ஓடிடும் மனமே நில்லு
ஒருகணம் நினைத்துப் பாரு
தேடிய செல்வம் எங்கே
திரண்ட உன் சுற்றமெங்கே 
கூடிய நண்பர் எங்கே
குவிந்த உன் புகழுமெங்கே 
வாடியே போது யாவும்
வந்துமா நிற்கும் சொல்லு  ! 

மனமதில் முறுக்கு வந்தால்
மாண்புகள் மறந்தே போகும்
கனமது தலையில் ஏறி
கண்ணினை மறைத்தே நிற்கும
நினைவுகள் கனவில் நிற்கும்
நேர்மையும் மறந்தே போகும்
துணிவெனும் உணர்வு துள்ளி
துடைத்திடும் தூய்மை எல்லாம் ! 

காத்திடும் பருவம் தன்னில்
காத்திடல் களவு போகும்
ஆத்திரம் உருவங் கொண்டு
ஆட்டத்தைத் தொடங்கி நிற்கும்
வீழ்ந்திடும் எண்ண மங்கே
வீழ்ச்சியைக் கண்டே போகும்
வாழ்ந்திடல் முடியும் வேளை
வரட்சிதான் விரிந்து நிற்கும் ! 

No comments: