மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா
இனிமையும் மென்மையும்
இணைந்ததே காதல்
தனிமையும் தழுவலும்
தருவதே காதல்
பனிவிழும் மலரென
மலர்வதே காதல்
பாரினில் காதல்தான்
பலருக்கும் மகிழ்வே !
வானத்தின் வரமாய்
மழைமண்ணில் வீழும்
மண்ணது நிறமாய்
மாறிடும் நீரும்
அன்புடை அகத்தில்
அமர்ந்திடும் காதல்
ஆனந்த பரவசம்
அளித்துமே நிற்கும் !
இருமனம் இணைந்தால்
எழில்பெறும் காதல்
மதமதும் பாரா
இனமதும் பாரா
துணிவுடன் எழுந்து
துளிர்த்திடும் காதல்
நிலமதன் மீதில்
நிமிர்ந்துமே நிற்கும் !
மானிட வாழ்விலே
மாபெரும் சக்தி
மறுவிலாக் காதல்
மலர்வது அன்றோ
கனவிலும் நனவிலும்
பெருகிடும் காதல்
காத்திரம் அளிக்கும்
காதலாய் அமரும் !
காதலை எண்ணுவார்
களிப்புடன் இருப்பார்
காதலைப் போற்றுவார்
கனிவுடன் பேசுவார்
காதலை இணைப்பார்
கண்ணியம் மிக்கவர்
காதலை யாவரும்
கருத்தினில் இருத்துவோம் !
No comments:
Post a Comment