காதலை யாவரும் கருத்தினில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மெல்பேண் ... அவுஸ்திரேலியா




இனிமையும் மென்மையும்
        இணைந்ததே காதல் 
தனிமையும் தழுவலும்
        தருவதே காதல் 
பனிவிழும் மலரென
       மலர்வதே காதல்
பாரினில் காதல்தான்
       பலருக்கும் மகிழ்வே  !

வானத்தின் வரமாய் 
    மழைமண்ணில் வீழும்
மண்ணது நிறமாய்
   மாறிடும் நீரும்
அன்புடை அகத்தில்
    அமர்ந்திடும் காதல்
ஆனந்த பரவசம்
     அளித்துமே நிற்கும் !


இருமனம் இணைந்தால்
     எழில்பெறும் காதல்
மதமதும் பாரா
     இனமதும் பாரா 
துணிவுடன் எழுந்து
      துளிர்த்திடும் காதல்
நிலமதன் மீதில்
      நிமிர்ந்துமே நிற்கும்  !

மானிட வாழ்விலே 
       மாபெரும் சக்தி
மறுவிலாக் காதல்
        மலர்வது அன்றோ 
கனவிலும் நனவிலும்
      பெருகிடும் காதல்
காத்திரம் அளிக்கும்
       காதலாய் அமரும்  ! 

காதலை எண்ணுவார்
      களிப்புடன் இருப்பார்
காதலைப் போற்றுவார்
      கனிவுடன் பேசுவார் 
காதலை இணைப்பார்
      கண்ணியம் மிக்கவர்
காதலை யாவரும்
      கருத்தினில் இருத்துவோம்  ! 

No comments: