சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன் !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் ... ஆஸ்திரேலியா 




வேலினைக் கையில் ஏந்தி
   வெற்றியைத் தந்த கந்தன்
மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம் 
கலியுகம் காக்க என்றும்
   கருணையாய் நிற்கும் தெய்வம்  !

ஆணவம் அழித்த கந்தன்
     அகவிருள் அகற்றும் கந்தன்
பேணிடும் அடியார்க் கெல்லாம்
     பேரருள் ஈயும் கந்தன்
நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன்  ! 

சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன் 
ஆழமாம் பிறவி நோயை
     அகற்றிட மருந்தாய் நிற்கும்
வேலுடை கந்தன் பாதம்

     பற்றுவார் வீடு காண்பார்  ! 


No comments: