இரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும். - சட்டத்தரணி (பாடும்மீன்) சு.ஸ்ரீகந்தராசா -

.


இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன? அது எப்படி எடுக்கப்படுகிறது? அதனை எப்படிக் கைவிடலாம்? கைவிடுவதென்றால் எந்த நாட்டுக் குடியுரிமையைக் கைவிடலாம்? என்பது பற்றியெல்லாம் எந்தவிதத் தெளிவும் இல்லாமல் சில ஊடகங்களில் செய்திகள் என்ற பெயரில் தகவல்கள் வெளிவருகின்றன. அப்படிச் செய்ய முடியும், இப்படிச் செய்யமுடியாது, அந்தநாடு விடாது, இந்தநாடு அனுமதிக்காது, அவரால் கைவிடவே முடியாதாம், இவரால் இரண்டுமாதங்களில் கைவிட முடியுமாம் என்றெல்லாம் க்கலாகவும், நகைச் சுவையாகவும்கூடச் சில செய்திகளைப்பார்க்கிறோம். அதனால், இரட்டைக் குடியுரிமை பற்றிய சில விடயங்களையும், இலங்கை அரசியலில் அதன் தார்ப்பரியங்களையும் பற்றிச் சில தகவல்களை இச் சிறு கட்டுரையில் தரவிரும்புகின்றேன்.

இலங்கைப் பிரசை ஒருவர் வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறுகின்றபோது அவரது இலங்கைக் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகிவிடும் என்பது சட்டத்தின் ஏற்பாடாகும். ஆனால், அவ்வாறு வேறு நாடு ஒன்றில் குடியுரிமை பெற்றுக் கொண்டவர் இலங்கைக் குடியுரிமையினையும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடே இரட்டைக் குடியுரிமையினைப் பெறுவதாகும்.  

இந்த வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அவர்களது பதவிக்காலத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர்  மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக வந்தபோது, மீண்டும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  இரட்டைக் குடியுரிமையை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. வேறு நாடுகளில் குடியுரிமையினை பெற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றிருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதனைப் பெற்றவர்கள் உள்ளார்கள். 


1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரை அமுலில் இருக்கும் இலங்கை அரசியல் அமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டது. சனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தலே 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும், மேலும் சில விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அரசியல் அமைப்பின் 91 ஆவது பிரிவுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும், சிறப்பாக இரட்டைக் குடியிரிமையுள்ளோர் பற்றிய விடயமும் ஒன்றாகும்.

பிற நாடு ஒன்றின் குடியுரிமையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் ல்லது அவ்வாறொன்றினைப் பெறுவதற்கு முன்னராயின் அதற்கான வாய்ப்பு இருப்பதை நிரூபிப்பதன் மூலம் இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இரட்டைக் குடியுரிமையினை பெற்றுக்கொண்ட ஒருவர் இலங்கையைப் பொறுத்தவரை மற்றைய பிரசைகளைப்போல வழமையான இலங்கைப் பிரசையாகத்தான் சட்டத்தினால் கணிக்கப்படுகின்றார். இலங்கைப் பிரசை ஒருவருக்கு உள்ள எல்லாவிதமான உரிமைகளும் அவருக்கு உண்டு. 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இதுதான் நிலைமையாக இருந்தது.

ஆனால், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அரசியல் அமைப்பின் 91 ஆவது உறுப்புரையில் சேர்க்கப்பட்ட ஒரு வரி இரட்டைக் குடியுரிமை உள்ளவரது உரிமை ஒன்றினைப் பறித்துவிட்டது. அரசியல் அமைப்பின் 91 ஆவது பிரிவு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமையீனங்களைக் குறிப்பிடுகின்றது. அதில். முதலாம் பந்தியில் 13 ஆவது விடயமாக  "வேறு ஏதேனும் ாட்டின் பிரசையாகவும் உள்ள இலங்கைப் பிரசை ஒருவர்" ( "a citizen of Sri Lanka who is also a citizen of any other  country;”) ன்கின்ற வரி 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கைப் பிரசை ஒருவர் வேறு ஏதாவது நாட்டின் பிரசையாகவும் இருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவோ ல்லது பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்புக்களில் கலந்துகொள்ளவோ முடியாது. எனவே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்போர் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படத் தகுதியற்றவர்களாவர்.

இலங்கைப் பிரசை அல்லாதவர்கள் எவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட முடியாது என்று அவ்வாறு தெரிவுசெய்யப்படுவதற்கு ஒருவர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும் என்று அரசியலமைப்பின் 89 ஆவது உறுப்புரை கூறுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டமோ அத்தகைய ஒருவர் இலங்கை பிரசயாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்று வரையறுத்துக் கூறுகின்றது.

சரி , அப்படியென்றால் பாராளுமன்ற உறுப்பினராகத்தானே வரமுடியாது, மாகாணசபை உறுப்பினராக வரலாம்தானே என்று சிலர் நினைக்கலாம். மாகாணசபைகள் சட்டம் அதற்கும் ஓர் ஆப்பு வைத்திருக்கிறது. அதாவது, "அரசியல் அமைப்பின் 91(1) ஆவது உறுதியுரையின் கீழ்த் தகைமையற்றவர்கள் மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவோ அல்லது சபை அமர்வுகளில் உறுப்பினராக அமரவோ வாக்களிக்கவோ முடியாது" என்று 1987 ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டம் கூறுகின்றது. எனவே 19 ஆவது திருத்தத்தின் காரணமாக இரட்டைப் பிரசாவுரிமையுள்ளவர்கள் மாகாணசபைகளுக்கும் தெரிவுசெய்யப்பட முடியாதவர்களாகின்றார்கள்.

ட்டம் இப்படியிருக்கையில், 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இரட்டைக் குடியுரிமை உள்ள சிலரும் தெரிவு செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்தன.
இது எவ்வாறு சாத்தியமாக முடியும் என்பதைச் சற்று கருத்தில் எடுத்துக் கொண்டால் வினோதமான விடயங்கள் பல நமக்குத் தோன்றுகின்றன. அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1)       19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்போது ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்த ஒருவர் இரட்டைப் குடியுரிமையினைக் கொண்டிருந்து, அவர், மற்றைய நாட்டின் குடியுரிமையினை இரத்துப் பண்ணுவதில் கவனம் செலுத்தாமலோ அல்லது இரத்துப்பண்ணுவதற்கு விண்ணப்பித்தும் தேர்தல் திகதிவரை சட்டரீதியான இரத்துப்பண்ணல் நடவடிக்கை பூர்த்தியடையாமலோ இருந்திருக்கலாம்.

2)       வெளிநாடொன்றில் குடியுரிமையுள்ள ஒருவர், அதன்காரணமாக இலங்கைக் குடியுரிமையை இழந்தவராக இருந்து, இப்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பத்தின் பேரிலான நடவடிக்கை முடிவுறாதிருந்திருக்கலாம். அதாவது இரட்டைக் குடியுரிமை அவருக்குத் தேர்தல் திகதிவரை வழங்கப்படவில்லை. ஏனென்றால், மகிந்த இராஜபக்ச அவர்களின் ஆட்சிக்காலத்தில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரசா உரிமை வழங்கல், மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதியாக வந்ததற்குப் பின்னர்,
2015 மார்ச் மாதம் 28 ஆம் திகதிதான் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. சில மாதங்களிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், இரட்டைப் பிரசா உரிமையினைப் பெறுவதற்கு அவகாசம் இல்லாத நிலைமை பலருக்கு இருந்தது. அது வழங்கப்படாத நிலையில் அவர் தனது வெளிநாட்டுக் குடியுரிமையினை இரத்துப் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. இரத்துப் பண்ணும் விண்ணப்பத்தை அவர் செய்திருந்தாலும், அவர் தேர்தல் நடைபெறும்போது இலங்கைப் பிரசையாகிவிடவில்லை. அதனால் அவர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட முடியாது.

3)       ஏதோ ஒரு வழியாக மிக விரைவாக எவரேனும் ஒருவர் இரட்டைக்குடியுரிமையினப் பெற்றிருந்தாலும் அல்லது ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை உள்ளவராக இருந்திருந்தாலும் அவருக்குத் தனது வெளிநாட்டுக் குடியுரிமையினைச் சட்டரீதியாக இரத்துப்பண்ணுவதற்கான அவகாசம் இருந்திருக்கவில்லை. ஏனெனில்  19 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பாராளுமன்றக் கலைப்பிற்கும் இடைப்பட்ட காலம் சில மாதங்களே ஆகும்.
மேற்கத்திய நாடுகளில், சாதாரணமாகக் குடியுரிமையினை இரத்துப் பண்ணுவதாயின் ஏறத்தாழ மூன்று மாதங்கள் தேவைப்படும்.

மற்றுமொரு நாட்டில், (நமது விடயத்தைப் பொறுத்தவரை இலங்கையில்) குடியுரிமையினைப் பெற்றமையினை அல்லது பெறவிருப்பதை நிரூபித்தாலன்றி அத்தகைய நாடுகள் தங்கள் நாட்டில் ஒருவருக்குள்ள குடியுரிமையினை இரத்துப்பண்ணும் விண்ணப்பத்தினை அங்கீகரிக்க மாட்டா. தங்கள் நாட்டுக்குடியுரிமையை இழப்பதன்மூலம் எவரும் நாடற்றவராக ஆகிவிடக்கூடாது என்ற மனிதாபிமானச் சட்ட நிலைப்பாடே அதற்கான காரணமாகும்.

4)       இப்பொழுது மாகாண சபை உறுப்பினர்களாக இருப்பவர்களில்  எவராவது இரட்டைக் குடியுரிமையுள்ளவராக இருக்கலாம். கடந்த வருடம் கலைக்கப்பட்ட மாகாணசபைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்களில்கூட அத்தகையோர் இருந்திருக்கலாம். ஏனெனில் கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது இரட்டைக் குடியுரிமையுள்ளோர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட முடியாது என்ற நிலை இருந்ததில்லை. அத்தகையவர்களும் புதிய சட்டத்திருத்தத்தின்படி தமது பதவிகில்  இருக்கவும் முடியாது, இருந்திருக்கவும் முடியாது. ஏனெனில், அரசியலமைப்பின் 91 ஆவது பிரிவின் படி, பாராளுமன்றத்தில் அல்லது மாகாணசபைகளில் அல்லது உள்ளூராட்சிச் சபைகளில் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட முடியாது என்பது மட்டுமன்றி, சபை அமர்வுகளில் பங்கேற்கவும் முடியாது. வாக்களிப்புக்களில் கலந்துகொள்ளவும் முடியாது.

5)       19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் வேட்பாளர்களின் இரட்டைக் குடியுரிமைத் தகைமையீனத்தினை பரிசீலித்துப் பார்க்கும் ொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை.

6)       ஒருவர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டமையை செல்லுபடியற்றதாக்கும்படி, 19 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் ாராவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலன்றி, அவ்வாறு சட்டமுரணாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் கண்டுகொள்ளப்பட மாட்டார்களோ என்ற சந்தேக நிலையும் உள்ளது. ஆனால் இது அரசியல் அமைப்புக்கு முரணான விடயம் என்பதால் இதில் அரசு நிச்சயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.

7)         இதில் மிகவும் பாரதூரமான விடயம் எதுவென்றால், ஒருவர் பாராளுமன்றத்தில் , மாகாணசபையில் அல்லது உள்ளூராட்சிச் சபையில் உறுப்பினராவதற்கு அவர் இலங்கைப்பிரசையாக இருக்கவேண்டும் என்பது முதன்மையான அடிப்படைத் தேவைப்பாடாக இருந்தும், இலங்கைப்பிரசையாக இல்லாதவர்களும் அத்தகைய பதவிகளில் இருக்கக்கூடிய நிலைமையும் சாத்தியமாகவுள்ளமைதான்.
இது எப்படியென்றால், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர், இலங்கைக்கு வந்து தனது ஊரில் தனது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, வாக்காளர் இடாப்பிலும் பெயரைப் பதிவு செய்து கொள்வார். தனது வெளிநாட்டுக் குடியுரிமையைக் கிடப்பில் போட்டுவிட்டு அவர் இலங்கைப் பிரசையாக ஊர்வலம்வருவார். ஏதாவதொரு தேர்தலில் வெற்றிபெற்றுப் பதவியிலும் அமர்ந்துகொள்வார். அவர் இரட்டைக் குடியுரிமையை எடுக்கவுமில்லை, அதற்கு விண்ணப்பிக்கவும் இல்லை. எனவே அவர் இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றுள்ளாரா அல்லது விண்ணப்பித்துள்ளாரா என்பதைப் பரிசீலிக்கும்போது, "இரட்டைக் குடியுரிமை இல்லாதவர்" என்ற பதிலே கிடைக்கும். ஆனால் அவர் இலங்கைக் குடியுரிமை உள்ளவரா என்பதற்கு விடை கிடைக்காது.

எனவே, இலங்கையின் இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இரட்டைக் குடியுரிமை விடயம் பலரின் நித்திரையைக் கெடுக்கும் ஒன்றாக இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாதிக்கப்படுபவர்கள் அரசியல் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் பரிகாரம் தேடுவதில் வெற்றியடையலாம்.

பரிகாரம் என்னவென்றால், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள "வேறு ஏதேனும் நாட்டின் பிரசையாகவும் உள்ள இலங்கைப் பிரசை ஒருவர்" என்னும் தகைமையீனம் தொடர்பான வரியினை, ஒரு திருத்தச் சட்டத்தின் மூலம் நீக்கிவிடுவதுதான். அந்தத் திருத்தத்தையும் பின்னோக்கிச் செயற்படக்கூடிய வகையில்(Retrospective) ஆக்கிவிட்டால்  அது ஏற்கனவே இந்த இக்கட்டுக்குள்ளானவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
எதுவும் நடக்கக்கூடிய நமது இலங்கைத்திருநாட்டில் அதுவும் நடக்கலாம். எப்போ
தும் நடக்கலாம்! யாருக்குத் தெரியும்?


No comments: